Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தமிழ்மக்களின் நிதியை திருடாதே! அதை பொது நிதியமாக்கு!

தமிழ்மக்களின் நிதியை திருடாதே! அதை பொது நிதியமாக்கு!

  • PDF

இதைக் கோராமல் எவரும் நேர்மையாக இருக்கவோ, செயற்படவோ முடியாது. இதை செய்யாத எவரும், தமிழ் மக்களுக்கு உண்மையாகவோ நேர்மையாகவோ இருக்க முடியாது. இது தானே உண்மை. இது தானே அரசியல் நேர்மை. புலித் தலைமை அழிந்த பின், அதைப் பயன்படுத்தி புலிப் பணத்தை (மக்கள் பணத்தை) அபகரிப்பதை எந்த வகையில் நாம் அங்கீகரிக்க முடியும். எம்மைச் சுற்றி நடப்பதோ, திருட்டும், மோசடியும் தான்.

 

 

இப்படி புலிகளின் அழிவு பலருக்கு கொண்டாட்டம். வெடிகொழுத்தி கொண்டாடியவர்கள் முதல் மகிந்த பாசிசத்துக்கு வேட்டி கட்டிவிட்டவர்கள் வரை இதில் அடங்கும்.

 

வெளிப்படையாக இதில் அடங்காது, இதைக் கொண்டாடும் கும்பல் ஒன்றுள்ளது. இது வேறு யாருமல்ல. புலிக்குள் இருந்த சந்தர்ப்பவாதிகளும் பிழைப்புவாதிகளும் தான். இவர்களோ புலியின் அழிவைப் பயன்படுத்தியும், அழிவை ஏற்படுத்தியும், புலியின் சொத்தை தனிப்பட்ட  தமது சொந்தமாக்கிக் கொண்டு கொட்டமடிக்கின்றனர்.

 

தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தின் பெயரில், சுனாமியின் பெயரில், திரட்டிய பல கோடி பெறுமதியான பணம், இன்று தனிப்பட்டவர்களால் திருடப்பட்டு விட்டது. இப்படி பல பினாமிச் புலிச் சொத்துகள் தனிப்பட்டவர்களால் சூறையாடப்படுகின்றது. இது பற்றி சமூகம் வாய்திறக்க முடியாத வண்ணம், ஊமையாக்கப்பட்டுள்ளது.

 

இன்று இச்சொத்துகள் விற்கப்படுகின்றன, பெயர்கள் மாற்றப்படுகின்றன, பலர் விரட்டப்படுகின்றனர், சிலர் அதை அடாத்தாக கைப்பற்றுகின்றனர். இதன் பின்னணியில் இதையெல்லாம் தேசியம் என்று நம்பி, இதன் பின் போராடியவர்கள் ஏமாளியாக, கோமாளிகளாக மாற்றப்பட்டுவிட்டனர், மாற்றப்படுகின்றனர்.

 

இப்படி  தமிழ்மக்களின் சொத்தை திருடியவர்கள், அதை தட்டி கேட்க வக்கற்றவர்கள் தான். புலத்தில் புலியை தலைமை தாங்கினர். இவர்கள் தலைமையில் தான், புலித்தலைமையின் அழிவு ஏற்பட்டது. இங்கு காட்டிக் கொடுப்புகள் நடந்தது என்பதும், வெளிப்படையான ஒரு உண்மை.

 

இப்படி தங்கள் தலைமையை காட்டிக் கொடுத்தவர்கள் தான், அவர்களின் மரணத்தைப் பயன்படுத்தி இயக்கப் பணத்தைத் திருடுகின்றனர். இதற்காக அவர்களின் மரணத்தைக் கூட மறைத்தனர். இதன் மூலம் தங்கள் திருட்டை வைத்து, அரசியல் வியாபாரம் செய்கின்றனர்.

 

புலித் தலைமையை அழிக்க எப்படி கடைசியில் வழிகாட்டினர் என்பதையும், யார் இந்த சதியின் பின்னணியாளர்கள் என்பதையும் கூட மூடிமறைத்து, தங்கள் சதியையும் துரோகத்தையும் பாதுகாக்கின்றனர். விளைவு புலித் தலைமையை காட்டிக்கொடுத்து அழித்தவர்கள், இன்று அந்த அமைப்பின் பணத்தைத் திருடி தங்கள் தனிப்பட்ட சொத்தாக்கி அதை தங்கள் சொந்த வாழ்வாக்கி வருகின்றனர்.

 

இந்தப் பண்பு தான், இந்த அரசியல் நடத்தைதான், நேர்மையற்ற தனிமனித நலன்கள் தான் வன்னித் தiலைமையை அழித்தது. புலத்தில் இருந்து வன்னித் தலைமையையும், புலத்து மக்களையும் தவறாக வழிகாட்டி, போராட்டத்தையே அழித்தது. இது வேறுயாருமல்ல இந்தத் தலைமைதான், இன்று புலியின் சொத்தை தங்கள் தனிப்பட்ட சொத்தாக அபகரித்துள்ளது.



இந்த நிதி சொத்து தொடர்பாக முதன் முதலில், நாம் ஒரு பொதுக் கோரிக்கையை சமூகத்தின் முன் கொண்டு வந்தோம். அதை இங்கு பார்க்கவும்;

 

"புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!"

 

இன்று, இந்த நிதியோ சில தனிநபர்களால் திருடப்பட்டுவிட்டது. இந்தத் திருட்டு பல போட்டிக் குழுக்களை உருவாக்கியது. முரண்பட்ட அரசியலாக தன்னை வெளிப்படுத்தியது.

 

இந்த உண்மையைப் புரிந்து கொண்டும், இதுபற்றி அக்கறைப்படாத எவரும் தமிழ் மக்களுக்காக உண்மையாக இருக்கவோ போராடவோ முடியாது. மறுபக்கத்தில் இதைத் திருடியவர்கள், தாங்களே தொடர்ந்து போராட்டத்துக்கு தலைமை தாங்குவதாக தொடர்ந்து நடிப்பதும் நடக்கின்றது. இதுதான் தமிழ்மக்களின் சோகம்;. தலைமை அழிந்த பின் சொத்தைத் திருடியவன், ஒரு நாளும் தமிழ் மக்களுக்காக போராட முடியாது. அவன் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து குழிபறிப்பதையே செய்வான். இது தானே உண்மை. உண்மையாக போராடுபவன் இந்த சொத்துக்கு வெளியில் நின்று தான் போராடமுடியும். இதுவும் கூட, ஒரு அடிப்படையான அரசியல் உண்மை.

 

மாறாக திருடியவர்கள், தமிழ் மக்களின் மேல் தொடர்ந்து சவாரி செய்கின்றனர். இந்த திருட்டு

 

1. தமிழ் மக்களின் உழைப்பை மட்டுமின்றி, இதை கொடுக்க அடிப்படையாக இருந்த தேசிய உணர்வையும் உணர்ச்சியையும் கூட தின்று ஏப்பமிட்டுவிட்டனர்.

 

2.இந்த திருட்டுப் பணமோ மக்களை ஏமாற்றி பேரினவாதத்துக்கு சேவை செய்யும் அரசியலாக மாறிவிட்டது. இதற்கமையவே இன்று திருடர்கள் பல குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர்.

 

இப்படி ஒருவர் மற்றவர் திருட்டை மறைத்துக் கொண்டு, தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். இப்படித் திருட்டுப்பணம், மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை பேரினவாதத்திடம் அடிமைப்படுத்த உதவுகின்றது. புலித்தலைமை இருந்தவரை, பணம் சரியாகவோ பிழையாகவோ அது ஒரு அமைப்பின் ஒழுங்கு முறைக்குள் கையாளப்பட்டது.

 

தலைமை அழிந்த பின், இந்த பணத்தை திருடுவதும், அதைத் தின்பதும் தான் இன்று புலி அரசியலாகியுள்ளது. நாங்கள் பணத்தை தமிழரின் பொது நிதியமாக்கக் கோரினோம். தமிழ் மக்கள் அதை ஒரு பொதுத்தளத்தில் கண்காணிக்கும் வண்ணம், அவர்கள் பணத்தை அவர்களின் பொது நிதியமாக்கக் கோரினோம். இதுதானே நியாயமானது, மிகச் சரியானது. இதை மறுக்க யாருக்கும் எந்த தார்மீக நியாயமோ, பலமோ கிடையாது.

 

புலித்தலைமையும் அதன் போராட்டமும் அழிக்கப்பட்ட பின், தமிழ் மக்களின் பணம் தனியார் கையில் இருப்;பது அதைத் திருடவே உதவும். உண்மையான போராட்டத்தில் அக்கறை கொண்டவர்கள், இந்த உண்மையை முன்வைத்து பணத்தை பொது நிதியமாக்க கோரியிருப்பார்கள்.

 

ஆனால் நடந்தது என்ன? தனிப்பட்ட நபர்கள் அந்தப் பணத்தை திருடியது தான். திருடர்கள் தங்கள் திருட்டை மறைக்க, முரண்பட்ட ஒரு அரசியலை முன்தள்ளியது தான் இன்று நடக்கின்றது.

 

மற்றவன் இந்த பொதுப் பணத்தைப் பற்றி தட்டிக் கேட்காத வண்ணம், தேசிய அரசியலை சீரழிப்பதுதான் இவர்கள் முன்னெடுக்கும் அரசியல் உள்ளடக்கமாகும். மற்றவன் இந்த பொதுப் பணத்தைப் பற்றி சொந்த உணர்வுடன் கேட்காத வண்ணம், மக்களை ஏமாற்றி நலமடிப்பதுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் நாடு கடந்த தமிழீழம் வரையான அரசியல் பம்மாத்து.

 

தமிழ்மக்களின் பணத்தை, தமிழர் பொது நிதியமாக்கிவிட்டு இதைக் கோரட்டும் பார்ப்போம். ஆனால் ஒரு நாளும் இவர்கள் அதனைச் செய்யப் போவதில்லை. தமிழ்மக்களின் நிதியை பொது நிதியமாக்கியபடி, அரசியல் முன்நகர்வுகளை முன்னெடுத்திருந்தால் மட்டும் அங்கு நேர்மையான ஒரு அரசியலாவது இருந்திருக்கும். அதைச் செய்யாது, பணத்தை தனிப்பட்ட சொத்தாக்கியவர்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் எங்கிருக்கின்றனர்?

 

இவர்கள் தான் வட்டுக்கோட்டை தீர்மானம் முதல், நாடு கடந்த தமிழீழத்தையும் முன்வைக்கின்றனர். இவர்கள் கடைந்தெடுத்த மக்கள் விரோதிகள். இவர்கள் தான் எம்மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த உண்மையான இனத் துரோகிகள். மக்களை ஏமாற்றி, அவர்கள் உழைப்பையும், அவர்களின் தேசிய உணர்வையும் சூறையாடியவர்கள்.

 

தாங்கள் சூறையாடி வாழ, மற்றவனை துரோகியாக்கிக் கொன்ற கொலைகாரக் கும்பல். இந்த சமூக விரோதிகள் தான், புலம்பெயர் சமூகத்தை தேசியத்தின் பெயரில் ஏமாற்றிப் பெற்ற பணத்தை திருடிவைத்துக் கொண்டு, அந்த மக்களையே ஆட்டிப் படைக்கின்றனர். புலத்தின் இன்றைய எதார்த்தம் இதுதான்.

 

இதைப் புரிந்து கொள்ளாது, இதை முறியடிக்கவும், எதிர் நின்று போராடவும் முன்வராத எவரும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க முடியாது. இதுதான் மக்கள் அரசியலை முன்னெடுப்பதற்கான, அரசியல் எதார்த்தமும் கூட.

 

 

பி.இரயாகரன்

19.03.2010

 

1. புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!

 

2.நாடு கடந்த தமிழீழம்: எஞ்சிய தமிழினத்தை அழிக்கமுனையும் புலத்துப் புலிகளின் புலுடாப் பிரகடனம்

 

3. புதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் சொத்துக்காகவே காட்டிக் கொடுத்த துரோகிகள்



Last Updated on Thursday, 24 November 2011 21:01