Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் புவனேசுவரி: முக்குலத்தோரின் புதிய வீராங்கனை !!

புவனேசுவரி: முக்குலத்தோரின் புதிய வீராங்கனை !!

  • PDF

வாசகர்களுக்கு புவனேசுவரியைத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. விபச்சார வழக்கில் போலீசால் கைது செய்யப்பட்ட அந்த அம்மையார் சொன்னதாக சில பிரபல நடிகைகளின் பெயர்களை தினமலர் வெளியிட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை உலகத்துக்கு எதிராகக் கலை உலகம் கொதித்தெழுந்தது.

தமிழ்ச் சமூகத்தை தாங்கி நிற்கும் மூன்று தூண்களில் சினிமா, பத்திரிகை ஆகிய இரண்டு தூண்கள் மோதிக் கொண்டு வீழ்ந்துவிட்டால், டாஸ்மாக் என்ற மூன்றாவது தூணின் மீது தமிழ்ச்சமூகத்தின் மொத்த வெயிட்டும் இறங்கி, அந்தத் தூணும் தள்ளாடி நிலைகுலைந்து விடக்கூடும் என்ற அபாயத்தை தொலைநோக்குடன் புரிந்து கொண்ட கலைஞர், உடனே தலையிட்டு, அவ்விரு தூண்களுக்கிடையில் போர்நிறுத்தம் செய்து வைத்தார். அப்புறம் புவனேசுவரியைப் பற்றி நாம் எல்லோருமே மறந்து விட்டோம்.

இப்படி தனியொரு பெண்ணாக நின்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த புவனேசுவரி ‘யார்’ என்பதை அறிந்து கொள்ளும் அக்கறை, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அந்த அம்மையார் யார் என்று புரிந்து கொண்ட மறுகணமே, அவரை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித் தலைவியாக நியமித்துவிட்டார் டாக்டர் சேதுராமன். அந்த அம்மையார் தேவர் குருபூசைக்கும் சென்று வந்துவிட்டார். தமிழகத்தையே கட்டி ஆண்ட மூவேந்தர் பரம்பரையில் வந்தவர்தான் புவனேசுவரி என்ற தெரிந்த பிறகு, இனி அவர் மீது கைவைக்கும் தைரியம் போலீசுக்கு வருமா என்று பார்ப்போம்.

ஒரு வேளை வெள்ளைக்காரன் மட்டும் நம் நாட்டைப் பிடிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும், யோசித்துப் பாருங்கள்!

மன்னர் சேதுராம பாண்டியர், இளவரசி புவனேஸ்வரி, இளவரசர் கார்த்திக், தளபதி ஸ்ரீதர் வாண்டையார் போன்ற மாணிக்கங்களின் ஆட்சியின் கீழ் நாம் குடிமக்களாக இருந்திருப்போம். காந்தி கிடையாது, சுதந்திரம் கிடையாது, அரசியல் சட்டம் கிடையாது, அம்பேத்கரும் கிடையாது. எனவே பாப்பாபட்டி கீரிப்பட்டியும் கிடையாது. அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் அரச பரம்பரையினர் படிக்கவேண்டிய கட்டாயமோ, தேவர் குருபூஜைக்கு போஸ்டர் அடிக்க வேண்டிய தேவையோ, அப்புறம் அடிபட வேண்டிய அவசியமோ கிடையாது. என்ன செய்வது, வரலாறு என்பது வேந்தர் பரம்பரைகள் விரும்பும் வழியில் செல்வதில்லையே!

சென்னை சட்டக்கல்லூரி பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்களேன். புவனேசுவரி என்ற மாதர் குல மாணிக்கத்தை மகளிர் அணித் தலைவியாகவும், கார்த்திக் போன்ற தெளிந்த சிந்தனையாளர்களை கட்சித்தலைவர்களாகவும் கொண்டாட முடிந்த மூவேந்தர் வாரிசுகளான மாணவர்களுக்கு அம்பேத்கர் பெயரைப் போட்டு போஸ்டர் அடிப்பது கவுரக் குறைச்சலாக பட்டிருக்கிறது. எது கவுரவம் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கக் கூடாதா என்ன?

வெள்ளையனை எதிர்த்துப் போராடித் தூக்கில் தொங்குவது மருது சகோதரர்களுக்கு கவுரவமாகப் பட்டிருக்கிறது. அந்த மருது சகோதரர்களைத் தோற்கடிப்பதற்கு வெள்ளைக்காரனுக்கு வழி சொல்லிக் கொடுத்து, படை கொடுத்து, அவன் படைகளுக்கு சோறும் ஆக்கிப் போட்ட புதுக்கோட்டை தொண்டைமானுக்கு, வெள்ளைக்காரன் கொடுத்த மெடலைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது கவுரவமாக இருந்திருக்கிறது.  வெள்ளைக்கார துரையால் வளர்க்கப்பட்ட இந்த தொண்டைமானின் இளவல், அந்த துரையைத்தான் அப்பா என்று கூப்பிடுவானாம். அவன் மகனுக்கு அதுதான் கவுரவமாகப் பட்டிருக்கிறது. இப்படி வெள்ளைக்காரனிடம் அப்பன் பதவியையே பறிகொடுத்த தொண்டைமான், சின்ன மருதுவை நாய் என்று ஏசியிருக்கிறான். இவையெல்லாம் கவுரவப் பிரச்சினை குறித்த சில வரலாற்று விவரங்கள்.

சரி நிகழ்காலத்துக்கு வருவோம். புவனேசுவரியை மகளிரணித் தலைவியாகக் கொண்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், தேவர் குருபூசைக்கு ஒட்டுவால் மாதிரி மருதிருவர் குருபூசை என்று ஒரு கூத்தையும் கடந்த 5 ஆண்டுகளாக அரங்கேற்றத் தொடங்கியிருக்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகள், “”தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா!” என்ற தேவர் குருபூசையின் கொள்கை முழக்கங்கள்தான் மருதிருவர் குருபூசைக்கும்!

மருது சகோதரர்கள் அகமுடையார் சாதியில் பிறந்தவர்கள். எனினும் உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடும் ஆங்கிலேய கைக்கூலிகளைத் தவிர மற்ற அனைவரையும் ஒரே மக்களாகக் கருதி, அணிதிரட்டியவர்கள். மேலும் வேலைக்காரர்களாக இருந்து பாளையக்காரர்களாக மாறியவர்கள் என்பதால், அவர்கள் மூவேந்தர் பரம்பரைக்குரிய தகுதி இல்லாதவர்கள். எனவே வேந்தர் பரம்பரையில் வந்த சேதுராமன், புவனேசுவரி அம்மையார் போன்றவர்கள் மருதிருவருக்கு குருபூசை நடத்துவது தங்களுடைய கவுரவத்துக்கு இழுக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பக்கத்திலேயே இருக்கிறது புதுக்கோட்டை! விஜரகுநாத தொண்டைமான், முக்குலத்தில் ஒர் குலமான புதுக்கோட்டை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். ஒரிஜினல் ஆண்ட பரம்பரை. மூவேந்தர் பரம்பரையின் கவுரவத்துக்கு ஏற்றவர்.

எனவே அடுத்த ஆண்டு முதல் மருதிருவர் குருபூசையைக் கைவிடுமாறும், புவனேசுவரி அம்மையார் தலைமையில் தொண்டைமான் குருபூஜையை துவக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சிறப்பு விருந்தினர்களாக மன்மோகன் சிங்கையும் சிதம்பரத்தையும் அழைக்கலாம். தட்டாமல் வருவார்கள்.

-          புதிய கலாச்சாரம், ஜனவரி – 2010

Last Updated on Wednesday, 20 January 2010 06:34