Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கோடீசுவர வேட்பாளர்கள் கோவணத் துணியோடு மக்கள்

கோடீசுவர வேட்பாளர்கள் கோவணத் துணியோடு மக்கள்

  • PDF

மதுரை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க. அழகிரி, "தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகிரி வந்திருக்கேன், எனக்கு ஓட்டுப் போடுவீங்களா?'' என்று அழகம்மா என்ற வாக்காளரிடம் @கட்க, அவரோ "நாங்க ஓட்டுப் போடுவோம் நீங்க எப்ப நோட்டைப் போடுவீங்க?'' என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். இந்தியத் தேர்தலில் பணநாயகம் பல்லிளிப்பதைக் காட்டும் ஒரு சோற்றுப் பதம் இது. 

தேர்தலில் வாக்குறுதிகளைக் கொடுத்த காலம் போய், கொள்ளையடிப்பதில் மக்களுக்கும் பங்காக "இலவசங்கள்' கொடுத்த காலமும் போய், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபாய், எங்க வீட்டில் இவ்வளவு பேர், இவ்வளவு ரூபாய் கொடுங்கள் என வாக்காளர்களே, வேட்பாளரைத் தேடிச் செல்லும் புதியதொரு பரிணாமத்தை இந்தியத் தேர்தல் களம் தொட்டுள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் தந்த படிப்பினையில் வாக்காளர்கள் இவ்வாறு விழிப்படைந்திருப்பதால், அதற்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் பட்ஜெட்டையும் தயாரித்துள்ளன.

 


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பார்த்தாலே இது புரிந்துவிடும். தி.மு.க. சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுபவர் திரைகடல் ஓடி திரவியம் தேடிய டி.ஆர்.பாலு. மன்மோகன் அரசில், கப்பல் போக்குவரத்துத் துறையின் அமைச்சராக "உழைத்துச் சேர்த்த' பணத்தைக் கொட்டியிறைத்து எந்தத் தொகுதியையும் தேர்தல் சமயத்தில் வளமாக்கக் கூடியவர் என்பதால், அன்னாருக்கு எல்லாத் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகம்.


அடுத்தது, மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன். சன் டி.வி., தினகரன் பத்திரிக்கை எனப் பெரும் ஊடகங்களைக் கையில் வைத்துக் கொண்டு தி.மு.க.வையே ஒரு கலக்கு கலக்கியவர். ஊடக பலமும் பண பலமும் ஒருங்கே அமைந்த இவ ரது வளர்ச்சி கண்டு கருணாநிதியின் குடும்பமே கதிகலங்கிப் போனது. இந்தக் கலக்கத்தின் விளைவாகக் கல்லாக் கட்டிய ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவோ நீலகிரி தொகுதியில் நிற்கிறார்.

 


vote

 

தி.மு.க.வின் தென்மாவட்டத் தளபதி, கட்டப்பஞ்சாயத்து புகழ், அஞ்சா நெஞ்சன் அழகிரி மதுரைத் தொகுதி வேட்பாளர். இவர் தங்களது தொகுதியில் நிற்கிறார் எனக் கேள்விப்பட்டதும், மதுரையே திருமங்கலமாக மாறிவிட்டதாக உடன் பிறப்புகள் கொண்டாடினர். எதிர்க் கட்சிகள் பீதியில் உறைந்திருக்க, அன்னாரோ சிறிதும் கூச்சமின்றி எதிர்க்கட்சியினரால் தனக்கு ஆபத்து எனத் தேர்தல் கமிசனிடம் மனுக் கொடுத்திருக்கிறார்.

 

இம்முறை தி.மு.க. சார்பில் இரண்டு சினிமா நடிகர்கள் போட்டியிடுகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திக்கொண்டு டாலர்களில் புரளும் மாவீரன் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியிலும், தான் நடித்த சினிமாக்களுக்கு "நூறு' ரூபாயும், பிரியாணியும் தந்து ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் அளவிற்கு "சேர்க்கப்பட்ட' பணத்தை அள்ளி இறைத்திட்ட "வீரத் தளபதி', "வள்ளல்' ஜெ.கே ரித்தீஸ் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். கந்து வட்டி பினாமியான ரித்தீஸ். தனது தொகுதிக்கு மட்டும் செலவு செய்யாமல், தென்மாவட்டங்களின் அனைத்துத் தொகுதிகளுக்கும் பணம் கொடுப்பதாகவும், தான் வெற்றி பெற்றால் தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் அனைவருக்கும் அவர்கள் பெயரிலேயே கார் வாங்கித் தருவதாகவும் வாக்களித்துள்ளார்.


இவர்கள் மட்டுமன்றி, கல்லூரிகள் கட்டிக் கல்லா கட்டிக்கொண்டிருக்கும் ஜெகத்ரட்சகன், தமிழகம், கர்நாடகம் என மாநிலம் கடந்து கல்வித் தொழில் நடத்தும் தம்பித்துரை, நிலக்கரி ஊழல் புகழ் ராஜ கண்ணப்பன், பா.ம.க.வின் "மாவீரன்' காடு வெட்டி குரு என அனைத்துக் கட்சிகளிலும் உள்ள ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல் குற்றவாளிகள், கந்து வட்டி, கருப்புப் பணப் பினாமி பேர்வழிகள் அனைவரும் இந்தத் தேர்தலில் களம் காணுகின்றனர்.

 
தேர்தலில் நின்று பொறுக்கித் தின்ன வேண்டுமா? வெறும் ஐந்து கோடியிருந்தால் போதும்; எங்கள் கட்சியின் சார்பில் நில்லுங்கள் என விளம்பரம் செய்யாத குறையாக எல்லாக் கட்சி களும் கூவியழைக்கின்றன. கல்வி வியாபாரத்தைப் போன்று தேர்தல் வியாபாரமும் படுஜோராக நடைபெறுகிறது.

 
···


தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிடுவது என்றில்லாமல், ஓட்டுக்களைப் பிரிப்பதற்காகப் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடும் பினாமி அரசியலை, ஒரு கிளைத் தொழிலாகவே, தே.மு.தி.க. உருவாக்கியுள்ளது. காங்கிரசின் பினாமியாக தேர்தலில் நின்று ஓட்டுக்களைப் பிரிப்பதற்குக் கூலியாக வாங்கிய பணத்தில் தனது பல கோடி கடனை அடைத்தது தே.மு.தி.க., தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 21 தொகுதிகளில் போட்டியிட ஆள்தேடிக் கொண்டிருந்த போது, 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துச் சூடு கிளப்பினார், விஜயகாந்த். நாற்பது தொகுதிக்கும் வேட்பாளருக்கு இவர் எங்கே போவார்? என்னதான் கடவுளுடன் கூட்டணி கட்டினாலும் தேர்தல் செலவுக்கு உண்டியலிலா கை வைக்க முடியும்? யாரிடம் கையேந்துவார்? எனத் தமிழகமே எதிர்பார்த்திருந்தது.


தேர்தலில் முதலீடு செய்யுமளவுக்கு பணம் உள்ளவர் யாராயிருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு உறுதி என அறிவிக்காத குறையாக, கல்வித் தந்தைகளையும், ரியல் எஸ்டேட் தரகர்களையும், தரகு முதலாளிகளையும் வேட்பாளர்களாக தே.மு.தி.க. நிறுத்தியுள்ளது. மாஃபா எனும் நிறுவனத்தின் மூலம் வெளி நாட்டு, உள் நாட்டு நிறுவனங்களுக்கு ஆளனுப்பும் உலகமயத் தரகர் "மாஃபா' பாண்டியராஜன் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடுகிறார்.

 

திண்டுக்கல்லில் இக்கட்சியின் வேட்பாளரான முத்துவேல் ராஜு, உலகமயத்தினால் பலனடைந்து பெரும் பணக்காரரானவர். சென்னையிலும் அமெரிக்காவிலும் கணிணி மென்பொருள் தொழிலுக்கு ஆட்களைப் பிடித்து அனுப்பித் தரகு வேலை பார்க்கும் இவர், அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கே நன்கொடை தரும் அளவிற்கு "முன்னேனறியவர்'. தமிழகத்தில் சுயநிதிக் கல்லூரிகள் கட்டி தே.மு.தி.க. மூலம் மக்களுக்குச் சேவை(!) செய்ய தற்போது களமிறங்கி இருக்கிறார், முத்துவேல் ராஜு.ஆஸ்திரேலியாவில் படித்து திருப்பூரில் ஏற்றுமதி நிறுவன அதிபராகவும் ரியல் எஸ்டேட் முதலையாகவும் இருக்கும் தினேஷ்குமார் திருப்பூர் தொகுதியிலும்; மினரல் வாட்டர் நிறுவனம்ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆரணி தொகுதியிலும்; மும்பையில் தொழில்நிறுவனம் நடத்தி, சென்னையில் சினிமா தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் ராயப்பன் நெல்லை தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் நிற்கிறார்கள். ஆசியாவின் பெரும் பணக்காரரான தயாநிதியை எதிர்கொள்ள தே.மு.தி.க. நிறுத்தியுள்ள ராமகிருஷ்ணனோ, பல தொழில் நிறுவனங்களின் ஆலோசகர். தனியாக ஏற்றுமதி நிறுவனம் நடத்துபவர்.


ரியல் எஸ்டேட் தரகர்கள் துரை காமராஜ், தமிழ் வேந்தன், மகா.முத்துக்குமார், தொழிலதிபர்கள் ஆர்.பாண்டியன், பனியன் ஏற்றுமதி தொழிலதிபர் சண்முகசுந்தரம் எனத் தேர்தலில் முதலீடு செய்து பணம் சேர்க்க ஒரு படையே தே.மு.தி.க.வில் திரண்டுள்ளது.

···


வேட்பாளர் அறிவிப்பிலேயே தேர்தல் ஜனநாயகம் துகிலுறிந்து நிற்க, அதன் மானம் காக்கும் கலியுகக் கண்ணனாக அவதாரமெடுத்திருக்கிறது, @தர்தல் கமிŒன். @தர்தல் நடத்தை விதிகள் என்று புதிதாக எதையாவது இவர்கள் அறிவிப்பார்கள், உடனே அதனை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் எதிர்ப்பார்கள், பிறகு தேர்தல் கமிசனின் மிரட்டலுக்குப் பயந்து அனைத்துக் கட்சியினரும் அடிபணிவார்கள். இப்படிப் பிரமாதமான நாடகக் காட்சிகள் வரிசையாக அரங்கேறுகின்றன.


இந்தத் தேர்தல் கமிசனால் எதையும் கிழிக்க முடியாதென்பதை, திருமங்கலம் இடைத்தேர்தலில் பார்த்தோம். ரொக்கப்பணம், மொபைல் போன், விசிடி பிளேயர் என வாக்காளர்களை விழுந்து விழுந்து கவனித்ததை இவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாதான் நின்றார்கள். நடத்தை விதிகள், நடவடிக்கைகள் என்று திரைப்படத்தில் இடையிடையே வரும் நகைச்சுவைக் காட்சிகளை மிஞ்சும் இவர்களது மிரட்டலையும், அதற்குக் கட்டுப்படுவது போல நடிக்கும் வேட்பாளர்களின் திறமையையும் பார்த்து கோடம்பாக்கத்து வடிவேலே அசந்து போவார்.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்துக் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை, எந்தப் பொருளாதார வீழ்ச்சியும் இதுவரைச் சாதிக்க முடியாததைச் சாதித்துள்ளது. பரம்பரைப் பணக்காரர்களையும், பல கோடிகளுக்கு அதிபதிகளையும் ஒரே இரவில் ஏதுமற்ற ஏழைகளாய் மாற்றிய சாதனையை அது செய்துள்ளது. இப்படி ஏழையானவர்களிலேயே "அன்னை' @Œõனியாவுக்குத்தான் முதலிடம். இவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 18 லட்ச ரூபா# மட்டும்தான். சொந்தமாக வீடு வாசலோ, காரோ கூட கிடையாது. அன்னைதான் இப்படியென்றால், அவரது மகன் ராகுல் காந்தியோ 23 லட்சம் கடனாளியாக நிற்கிறார். மிகப்பெரிய கோடீஸ்வர நேருவின் குடும்பத்தினர், காலம் காலமாக மக்களுக்குச் "சேவை' செய்து, இன்று பரம ஏழைகளாகக் களத்தில் நிற்கின்றார்கள்.


காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் தனது சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை எனச் "சத்தியம்' செய்து களத்தில் இறங்கியுள்ளார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. இவர் சென்றமுறை காட்டிய சொத்துக் கணக்கைவிட இம்முறை காட்டிய சொத்துக்கணக்கு குறைவாயிருப்பதே அந்த "சத்தியத்தின்' சாட்சி.


ஆந்திரத்தின் முன்னாள் முதல்வரும், ஏழைகளின் தோழனுமான சந்திரபாபு நாயுடு, 13 கோடி ருபாய் சொத்து வைத்திருந்தாலும், தனக்கென ஒரே ஒரு அம்பாசிடர் கார் மட்டுமே வைத்துள்ள எளிமையின் சிகரம்.
15 லட்ச ரூபாய் செல்பேசி, 5 லட்ச ரூபாய் கைக்கடிகாரம், 25,000 மதிப்புள்ள காலணிகள், கிலோக்கணக்கில் தங்கம், வெள்ளி, கர்நாடகா முழுவதும் சொத்துக்கள் என ராஜாங்கம் நடத்தி வருகிறார், பா.ஜ.க.வின் வேட்பாளர் குருடப்பா நாகமரபள்ளி.


விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முதலில் களமிறக்கப்பட்டு பின்பு விலக்கிக் கொள்ளப்பட்ட வேலாயுதம் 171 கோடி நில மோசடி செய்த வழக்கில் சி.பி.ஐ.ஆல் விசாரிக்கப்படும் குற்றவாளி. இந்தியாவிலேயே அதிகளவு சொத்துக் கணக்குக் காட்டியுள்ள வேட்பாளர் ஆந்திராவின் லகடபதி ராஜகோபால். இவர் கணக்கு காட்டியுள்ளது மட்டும் 299 கோடிகள்.


ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் என் கட்சிக்கு இரண்டு நிரந்தர மந்திரி பதவி மட்டும் போதும் என்ற உயரிய கொள்கையுடன், தொடர்ந்து மத்திய அரசில் பங்கெடுத்து வருகிறது பா.ம.க. பா.ம.க.வின் ஆர். வேலு ரயில்வே அமைச்சராக இருந்து தன்னை செழுமைப்படுத்திக் கொண்டார். ராமாதாசின் அருந்தவப் புதல்வன் பின்வாசல் பேர்வழி அன்புமணி தேர்தலிலேயே நிற்காமல், ராஜ்யசபா மூலம் சுகாதாரத்துறை மந்திரியாகி "எவ்வளவு' முடியுமோ அவ்வளவு சேவை செய்தார். இந்த தேர்தலிலும் இதே உயரிய கொள்கையை நடைமுறைப்படுத்த ராமதாசின் பா.ம.க. முதலீடு செய்து களம் இறங்கியுள்ளது.


இந்திய மக்களில் 77% பேர் ஒருநாளைக்கு ரூபாய் 20இல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நாட்டில், பத்து ராஜ்யசபை உறுப்பினர்கள் கணக்குக் காட்டியுள்ள அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 1,500 கோடி ரூபா# என்று "இந்தியா டுடே'' பத்திரிகை நடத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பொய்க் கணக்கில் கூட ஏழைகளாக வேசம் கட்ட முடியாத அளவுக்கு சொத் துக் குவித்துள்ள, பண முதலைகளும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளும் தேர்தல் கமிசனால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தங்களது சொத்துக் கணக்கை குறைத்துக் காட்டியுள்ளனர்.


அரசியல் அநாதைகளாகிப்போன சமத்துவ நாயகன் சரத், நடிகர் கார்த்திக் எல்லாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக கூட்டுச் சேர்ந்து மொத்தமாக ஒரு ரேட்டுக்கு பேரம் பேசி வருகிறார்கள். இவர்களுக்கும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கும் தமிழகத்தில் ஓரங்கட்டப்பட்ட பா.ஜ.க. ஆதரவளித்து வருகிறது. சமத்துவ நாயகன் சரத்திடம் ஒரு கோடி பேரம் பேசியது பா.ஜ.க., தொகுதிக்கு ஒரு கோடியா என்று வாயைப் பிளந்த நாட்டாமையை, மொத்தமாகவே ஒரு கோடிதான் என்று வாயடைத்தது பா.ஜ.க. கிடைத்த வரை அமுக்கலாம் என்று கமுக்கமாக ஒத்துக் கொண்டார், "மிஸ்டர்'' சமத்துவம்.

 

எல்லாக் கட்சியும் இவ்வாறு பணநாயகத்தில் மூழ்கி இருந்தாலும் சி.பி.எம். கட்சி மட்டும் எளிமை என யாரும் எண்ணி விட வேண்டாம். மதுரை மோகனும், நாகர்கோவில் பெல்லார்மினும் ஐந்தாண்டுகளாக நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழுக்களில் பதவியில் இருந்தவர்கள்தான்.


பெரும் தொழில்நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் கருப்பட்டிப்பானைதான் இந்த நிலைக்குழுக்கள் என்பதும், சி.பி.எம். உறுப்பினர்களும் இந்தப் பானைக்குள் 5 வருடம் கைகளை வைத்திருந்தனர் என்பதும் ஆழ்ந்த "பொருள்' கொண்டது.


தேர்தல் என்பது இன்றைக்குப் பணம் முதலீடு செய்து அபரிமிதமாக லாபம் எடுக்கும் ஒரு தொழிலாக பயன்படுகிறது என்பதைத்தான் இந்த நிலைமைகள் காட்டுகின்றன. கட்சிகளெல்லாம் கார்ப்பொரேட் நிறுவனங்களாகவும், வேட்பாளர்களெல்லாம் அதன் முதலீட்டாளர்கள் போலவும், தேர்தலே ஒரு தொழிலாகவும் பரிணாமம் அடைந்துள்ளதுதான் 60 வருட இந்தியப் போலி ஜனநாயகம் கண்ட வளர்ச்சி. அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல் படுத்தி முதலாளிகள் காரியம் சாதித்த காலம் போய், அரசு அதிகாரத்தில் நேரடியாக உட்கார்ந்து கொள்வதன் மூலம் தொழிலை இலாபகரமாக நடத்துவதற்காக அதிகார வர்க்கத்துடன் நெருங்குவதற்கும், தொழிலில் ஏகபோகமாக உருவாகத் தடையாக இருக்கும் விதிகளையே மாற்றிவிட நிலைக்குழுக்களில் ஒட்டிக்கொண்டு காரியம் சாதிக்கவும் தேர்தல் பயன்படுவதாலேயே தரகு முதலாளிகள் இந்தத் தேர்தலில் வகை தொகையின்றிக் களமிறங்கியுள்ளனர்.


இன்னொரு பக்கம் எந்த தொழிலும் பார்க்காமல் முதலாளிகளுக்கு அநீதியான ஒப்பந்தங்களை @பாட்டுக் கொடுப்பதன் மூலமும், நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் தரகு வேலை பார்ப்பதன் மூலமும் பல ஆயிரம் கோடிகளில் சுருட்டலாம் என்ற வாய்ப்பு சர்வ கட்சி கேடிகளையும், தரகு முதலாளிகளையும் ஒருங்கே ஈர்க்கிறது. பல கோடிகளைத் தேர்தலில் முதலீடு செய்யும் இக்கும்பல் மக்கள் பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பிக் கொண்டு இனியும் ஏமாற முடியாது.


பணம் காய்ச்சி மரமாக மாறி அம்பலமாகி நிற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் முறையையும் அது உறுதிப்படுத்தும் அதிகாரவர்க்க ஆட்சியையும் ஒழித்துக் கட்டினால்தான், உண்மையான மக்கள் ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.

 

· ரகுபதி 

Last Updated on Wednesday, 13 May 2009 18:39