Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பேரினவாதம் நடத்திய இனவழிப்பு, இன்று பாரிய மனிதப் படுகொலையாகி வருகின்றது

பேரினவாதம் நடத்திய இனவழிப்பு, இன்று பாரிய மனிதப் படுகொலையாகி வருகின்றது

  • PDF

காலாகாலமாக ஒரு இனத்தை ஒடுக்கி, உரிமைகளை மறுத்த அரசு, இன்று ஒரு இனப்படுகொலையை நடத்துகின்றது. காலகாலமாக எந்தனையோ இனவழிப்புக்களை நடத்தியவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்கின்றனர்.

 

அந்த மக்களின் மண்ணில் வைத்து, அதுவும் அரசு தானாக அறிவித்த யுத்த சூனிய பிரதேசத்தில் வைத்து, இவை அனைத்தும் அரங்கேறுகின்றது. தமிழினம் மீது நடத்திய இன ஆக்கிரமிப்பு யுத்தம் மூலம், தமிழினம் மீதான மனித அவலத்தை அரங்கேறுகின்றனர். இவை அனைத்தும் புலிகளின் பெயரில் நியாயப்படுத்தப்படுகின்றது.

 

நாவலன் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல் 'இலங்கையின் மகிந்த குடும்ப அரசிற்கும், அவ்வரசை புடைசூழ்ந்து மக்கள் மீதான அரச பயங்கரவாதத்தைப் பாதுகாக்கும் அனைத்து வல்லரசுகளுக்கும் கூட புலிகளின் அழிவு என்பது பிரதான பிரச்சனையல்ல. புலிகள் என்பது அழிவிற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதம். மக்களை மிரட்டுவதற்காகப் பயன்படும் கருவி. போராட்டங்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறை! இவை தான் இலங்கை அரசினதும் அதனை ஆட்டுவிக்கும் ஏகாதிபத்தியங்களது உள் நோக்கு. நீண்டகாலத் திட்டம்." இவை அனைத்தும் இன்று பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவிரோத நடவடிக்கையில் ஒரு அம்சமாகின்றது. இதை எதிர்த்துப் போராடாமல், இதை வெறும் புலியின் அழிவாக மட்டும் பார்த்தால், இந்த இனவிரோத நடிவடிக்கைக்கு துணைபோவது தான்.    

 

இந்த தமிழினப் படுகொலைக்கு, அவர்கள் வைத்த பெயர் 'மீட்பு" நடவடிக்கை. எல்லா புலியெதிர்ப்புக் கும்பலும் 'மீட்பு" என்று கூறி, இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்துகின்றனர். 'மீட்பு" என்ற பெயரில் பேரினவாதம் நடத்த விரும்புவது, ஒரு இனச் சுத்திகரிப்பைத் தான். இதன் மூலம் இனக்களையெடுப்பை தமிழினத்துக்கு எதிராக முடுக்கிவிட, பாரிய இராணுவ இயந்திரத்தையே கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

 

ஒரு இனத்தில் மேல் வெடிகுண்டுகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் பொழிந்தபடி நடத்துகின்ற இந்த இனவழிப்பு. இதை 'பணயக்கைதிகளை" 'மீட்கும்" நடவடிக்கை என்று இட்டுக்கட்டுகின்றது. இதன் மூலம் தமிழினத்தையே கொன்று குவிக்கின்றது. 

 

கடந்த 30 வருட காலத்தில் ஒரு இலட்சம் மக்களைக் கொன்று குவித்த பேரினவாத அரசு தான், இன்று இந்த மனிதவெறியாட்டத்தை 'மீட்பு" என்ற பெயரால் நடத்துகின்றது. தமிழ் இனத்தை அடக்கியொடுக்கவும், இனக்களையெடுப்பை நடத்தவும் முனைகின்றது. இந்த இனப்படுகொலையை 'மீட்பு" நடவடிக்கை என்று கூறி, உலகத்தை ஏமாற்றியபடி தான் தமிழினத்தைக் கொல்லுகின்றது. தப்பிப் பிழைப்பவர்களை இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கும் வண்ணம், அப்பாவி மக்களை தமது சொந்த திறந்தவெளி சிறைக்கூடங்களில் திட்டமிட்டு அடைத்து வைக்கின்றது. அவர்களை  தனிமைப்படுத்தி அடையாளம் காண, சிறப்பு அடையாள அட்டைகளைக் கூட கொடுக்கின்றது. தப்பி வரும் மக்களை இந்த திறந்தவெளி சிறைக்கூடங்களில் வைத்து, இனக்களையெடுப்பை நடத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழினம் நிமிர்ந்து நிற்க முடியாத வண்ணம் முடமாக்குகின்றனர்.

 

இந்த நூற்றாண்டில் உலகநாடுகளின் துணையுடன் நடக்கும் மற்றொரு இனசுத்திகரிப்புத்தான் இந்த 'மீட்பு" நடவடிக்கையாகும். 

 

பி.இரயாகரன்
20.04.2009

Last Updated on Monday, 20 April 2009 21:23