Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் காற்றில் மாசு கட்டுப்படுத்தல் -4 (Air Pollution Control -4)

காற்றில் மாசு கட்டுப்படுத்தல் -4 (Air Pollution Control -4)

  • PDF

சென்னை நகரில் எந்த அளவு மாசு (காற்றில்) இருக்கும் என்பதை கணிப்பது எப்படி?

இங்கு 1. தூசி, 2. கார்பன் மோனாக்சைடு 3. நாக்ஸ் 4. சாக்ஸ் மற்றும் 5. எளிதில் ஆவியாகும் கரிமப் பொருள் (வீ.ஓ.சி.) ஆகிய மாசுக்களை மட்டும் கவனிப்போம்.

மாசுக்கள் பல இடங்களிலிருந்து வரும். இவற்றை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். வீடுகளில் இருந்து வரும் மாசுக்கள். ஆலைகளில் இருந்து வரும் மாசுக்கள். போக்குவரத்தால் வரும் மாசுக்கள்.

வீடுகளில் இருந்து சமையல் மூலமாக சிறிதளவு மாசு வரும். விறகு அடுப்பினாலும் கரி அடுப்பினாலும் ஓரளவு தூசியும், கார்பன் மோனாக்சைடும், வீ.ஓ.சி. யும் வரும். வீட்டு சமயலில் வெப்ப நிலை மிக அதிகமாக இருக்காது. அதனால் நாக்ஸ் வராது. கரி பயன்படுத்தினால் கொஞ்சம் சாக்ஸ் வரலாம்.

வீட்டில் டீசல் ஜெனரேட்டர் பயன்படுத்தினால் நாக்ஸ், வீ.ஓ.சி., தூசி ஆகியவை வரும்.

சென்னையை எடுத்துக் கொண்டால், ஒரு பகுதியை எடுத்து (உதாரணம் சைதாப்பேட்டை), அங்கு எத்தனை குடிசைகள் இருக்கின்றன, எத்தனை அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இருக்கின்றன, எத்தனை கடைகள் இருக்கின்றன என்று ஒரு survey எடுக்க வேண்டும். பின்னர், எவ்வளவு விறகு ஒரு நாளைக்கு எரிக்கப்படும், எவ்வளவு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படும் என்று கணிக்கலாம். மின்சாரத் தட்டுப்பாடை பொறுத்து எவ்வளவு டீசல் (ஜெனரேட்டர் மூலம்) செலவாகும் என்றும் கணிக்கலாம். பெரும்பாலும் பணக்காரர்கள் வீட்டிலும், கடைகளிலும்தான் ஜெனரேட்டர் இருக்கும். உணவகங்களின் கணக்கையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கையேந்தி பவன், தட்டி விலாஸில் எல்லாம் பெரும்பாலும் விறகு அல்லது கரிதான் இருக்கும். சரவண பவன் போன்ற பெரிய உணவகங்களில் கேஸ் சிலிண்டர் இருக்கும்.

இங்கு நடைமுறை பிரச்சனை என்ன என்றால், யாரும் உங்களுக்கு விவரங்களை சொல்ல மாட்டார்கள். வீடுகளிலோ, கடைகளிலோ எந்த விவரமும் கொடுக்க மாட்டார்கள். அப்படியே சொன்னாலும் அது உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு. இதற்கு காரணம், “இதனால் நமக்கு என்ன பயன்?”, ”வீட்டில் ஜெனரேட்டர் இருக்குன்னு சொன்னா, நாளைக்கு வருமான வரிக்காரன் வந்து விடுவானோ?”, “கேள்வி கேட்கின்ற இவன் உண்மையாக எதற்கு வருகிறான்? ஒருவேளை இடத்தை நோட்டம் இட்டு, நாளைக்கு வந்து திருடுவானோ?” என்பது போன்ற (நியாயமான) கேள்விகள் எழுகின்றன. இவற்றை எல்லாம் தாண்டி விவரம் சேகரித்தால், வீட்டிலிருந்து வரும் மாசுக்களின் அளவை ஓரளவு கணிக்கலாம்.

அதைப்போலவே, ஆலைகளில் இருந்து வரும் மாசுக்களை கணிக்கலாம். உதாரணமாக, மணலி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, கிண்டி, பல்லாவரம்/குரோம்பேட்டை SEZ போன்ற இடங்களில், எந்த எந்த ஆலைகள் உள்ளன,அவற்றின் உற்பத்தி எவ்வளவு என்ற விவரங்களை வைத்து அதிலிருந்து வரும் மாசுக்களை கணிக்கலாம். ஒவ்வொரு நிறுவனத்திலும், அது தயாரிக்கும் பொருள் தயாரிக்கும் முறை, அளவு ஆகியவற்றை பொறுத்து அதிலிருந்து வரும் மாசின் தன்மையும் அளவும் இருக்கும். உதாரணமாக, பட்டறைகளில் உலோகத் தூசுக்கள் அதிகம் வரும். வெல்டிங் செய்யும் இடத்தில் நாக்ஸ் அதிகம் வரும். பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனங்களில் வீ.ஓ.சி. அதிகம் வரும். இங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் உண்மையை சொல்லுவதில்லை. நாமாகத்தான் குத்து மதிப்பாக கணிக்க வேண்டும்.

போக்குவரத்தில் வண்டியில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிவதால் தூசி, நாக்ஸ், வீ.ஓ.சி. ஆகியவை வரும். எங்கெல்லாம் பெட்ரோல் பங்க் இருக்கிறதோ அங்கெல்லாம் வீ.ஓ.சி. வரும். ஏனென்றால், நாம் பெட்ரோல் (அல்லது டீசல்) போடும்போது சிறிதளவு பெட்ரோல் ஆவியாகி காற்றில் கலக்கும். இதனால் வீ.ஓ.சி. அதிகரிக்கும்.

ஒவ்வொரு வண்டியும் அதன் வகையையும் வயதையும் பொறுத்து மாசை ஏற்படுத்தும். உதாரணமாக, 2 stroke வகை பழைய யமாகா வண்டிகளில் அதிக மாசு வரும். 4stroke வண்டிகளிலேயே, புதிய வண்டிகளில் என்ஜின் நன்றாக வேலை செய்யும். பழைய வண்டியில் கொஞ்சம் புகை அதிகம் வரும்.

பற்றாக்குறைக்கு, பெட்ரோலிலும் டீசலிலும் தெரிந்தும் தெரியாமலும் கலப்படம். (ஒரு முறை நான் செல்லும் ஆட்டோவின் டிரைவர் தனது வண்டியில் 40 ரூபாய்க்கு பெட்ரோலும் 10 ரூபாய்க்கு டீசலும் போட்டார். எஞ்சின் கொஞ்சம் சேதாரம் ஆகும், ஆனால் மைலேஜ் அதிகம் என்றார். இது தெரிந்து நடக்கும் கலப்படம்). இதனால் மாசுக்களின் அளவு அதிகமாகும்.

இன்னொரு குறிப்பு: என் நண்பனின் opinion என்ன என்றால், ‘கலப்படம் என்பது எல்லா இடத்திலும் நடக்கிறது. இது வண்டி தயாரிக்கும் நிறுவனத்திற்கும் நல்லது. என்ஜின் 5 அல்லது 6 வருடத்தில் மண்டையைப் போட்டால், நாம் புது வண்டி வாங்குவோம். இல்லாவிட்டால் 20 ஆண்டுகளுக்கு வாங்க மாட்டோம். அதனால் இதில் எல்லோரும் கூட்டாளிகளே. வெளியில்தான் ‘கலப்பட பெட்ரோலை உபயோகிக்காதீர்கள்' என்று போர்டு போடுவார்கள்”.

எப்படியோ, போக்குவரத்தால் ஏற்படும் மாசை கணிக்க, நாம் எவ்வளவு போக்குவரத்து ஒரு நாளைக்கு என்பதை சர்வே எடுக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் அதிகமாக இருக்கும். அது போல விடுமுறை நாட்காளில் குறைவாகவும், மற்ற நாட்களில் அதிகமாகவும் இருக்கும். இதை சில நாட்களுக்கு சைதாப்பேட்டையில் இருக்கும் பல சாலைகளில் எடுத்தால் ஓரளவு விவரம் கிடைக்கும். இதில் எவ்வளவு 2 சக்கர வண்டி, எவ்வளவு ஆட்டோ, எவ்வள்வு கார், பஸ், லாரி என்றெல்லாம் கணக்கெடுக்க வேண்டும்.

பிறகு, ஒவ்வொரு வண்டியிலும் சுமாராக எவ்வளவு பழசு, எவ்வளவு புதுசு என்று தெரிய வேண்டும். இதை அவ்வளவு சுலபமாகக் கண்டு பிடிக்க முடியாது. ஓரளவு தெரியவேண்டும் என்றால், வண்டி நிறுத்தும் இடத்தில் சென்று வண்டி சொந்தக்காரர்களிடம் கேட்டால் தெரியலாம். மிகத் தோராயமாகத் தெரியவேண்டும் என்றால், RTO office இல் எத்தனை வண்டி எந்த வருடங்களில் register செய்திருக்கிறது என்ற விவ்ரம் கிடைத்தால் கணிக்கலாம். ஆனால் இங்கு register செய்த வண்டிதான் இங்கு ஓடும் என்பது இல்லையே.
அதனால் இதெல்லாம் ஓரளவுதான் சரியாக இருக்கும்.

தெருவில் வண்டி செல்லும் பொழுது, அங்கு இருக்கும் புழுதி மேலே கிளம்பும். இதை புழுதியை காற்றில் சேர்த்தல் (road dust resuspension )என்று வகைப்படுத்த வேண்டும். சிறிய அளவில் இருக்கும் புழுதி சுலபமாக மேலே வரும். பெரிய கனமான தூசு அவ்வளவு சுலபமாக மேலே வராது. இதை கணக்கிட தெருவில் இருக்கும் தூசியின் அளவை (small, large, medium என்று) கணக்கிட வேண்டும்.

இதை எல்லாம் சேர்த்தால், ஒரு பகுதியில் (ஏரியாவில்) எவ்வளவு மாசு சேர்க்கப்படுகிறது என்பதை கணிக்கலாம். ஆனால் எல்லா மாசுக்களுமே அங்கேயே தங்காது. காலையிலும் மாலையிலும் கடற்காற்றால் அவை பல இடங்களுக்கு பரப்பப்படும்.

http://fuelcellintamil.blogspot.com/2008/03/4-air-pollution-control-4.html