Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் அகிம்சையின் நோக்கம்

அகிம்சையின் நோக்கம்

  • PDF

ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் வளரத் துவங்கியதும் காங்கிரசு மீண்டும் ஒத்துழையாமை எனக் கூச்சலிடத் துவங்கியது; அகிம்சைவழி என அரற்றியது. உண்மையிலேயே காந்தியினுடைய அகிம்சைத் தத்துவத்தின் நோக்கம் என்ன? கத்தியின்றி ரத்தமின்றிப் போராடுவதன் உள்ளடக்கக் கூறுகள் என்ன?


அகிம்சை என்றால் என்ன என்பதைப் பற்றி காந்தி கூறுவதைக் கேளுங்கள்: "அக்கிரமம் செய்கிறவனைத் துன்புறுத்துவதற்காகத்தான் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என்பது என் கருத்து. பலாத்காரத்துடன் கூடிய ஒத்துழையாமை இயக்கத்தினால் அக்கிரமங்கள் அதிகரிக்கும் என்பதையும், அக்கிரமங்கள் ஒழிய வேண்டுமானால் முற்றிலும் அகிம்சா தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நான் இந்திய மக்களிடையே பிரச்சாரம் செய்ய விரும்புகிறேன். அகிம்சை என்றால் துன்பங்களுக்குத் தானாகவே கீழ்படிதலாகும்.'' துன்பங்களுக்குத் தானாகக் கீழ்ப்படியும் அகிம்சையின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?


1930 மார்ச்சில் வைசிராய்க்கு காந்தி எழுதிய கடிதத்தில் அகிம்சையின் நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. தமது இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் துவக்கப்பட்டது அல்லவென்றும், இந்தியப் புரட்சி இயக்கத்தை எதிர்த்தே அது துவக்கப்பட்டதென்றும் தெரிவித்தார். அவர் கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்: "வன்முறைக் கட்சி வலிமை பெற்று வருகிறது. அதை நன்றாக உணர முடிகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட வன்முறையை எதிர்த்து நிற்பது போலவே, வளர்ந்து வரும் வன்முறைக் கட்சியின் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத வன்முறையை எதிர்த்தும் சக்தியை (அகிம்சையை) இயக்குவது எனது நோக்கமாகும். வெறுமனே கைகட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது மேற்கூறப்பட்ட இரு சக்திகளுக்கும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பளிப்பதாகும்!''


ஆக்கிரமிப்பாளனையும், ஆக்கிரமிக்கப்பட்டவனையும் ஒரே நிலையில் வைப்பதன் ­மூலம் ஆக்கிரமிப்பாளனுக்குச் சேவை செய்தார் காந்தி. "அகிம்சை யினின்று மயிரளவு பிறழ்ந்து வெற்றி பெறுவதைவிட, ஊறுபடாத அகிம்சையோடு படுதோல்வி அடைவதையே நான் வரவேற்பேன்'' என ஒருமுறை "தி டைம்ஸ்' என்ற ஏட்டிற்குப் பேட்டியளித்தார். அரசு எந்திரத்தின் அநியாய வன்முறையை எதிர்த்து மக்கள் நியாயமான வன்முறையைப் பிரயோகிக்கக்கூடாது என்பதுதான் காந்தியாரின் அகிம்சைத் தத்துவம்.