Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்

  • PDF

பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் சந்திக்கும் நெருக்கடி ஒருபுறம் என்றால், இனவாத நடைமுறைகள் தமிழ் மக்களுக்கு மீள முடியாத பேரிடியாக உள்ளது. இதைவிட புலிகளின் வரி அறவிடும் முறையும், அவர்களின் தேசிய பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கம் பேரிடியாகி அவலமாகவே பெருக்கெடுக்கின்றது.


1983 முதல் 2001 வரையிலான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் அழிந்த சொத்துக்களின் மொத்தப் பெறுமதி சுமார் 40,300 கோடி ரூபா எனறு இலங்கை மத்திய வங்கியே 2003-இல் அறிவித்துள்ளது. அதாவது வருடாந்தர இலங்கையின் தேசிய வருமானத்தை விட இது அதிகமாகும். இது அழிந்த சொத்து இழப்பை மட்டும் குறிக்கின்றது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 1983-1987-க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 34 ஆயிரம் வீடுகள் சேதமாகின. 1987-1994-க்கு இடையில் புனருத்தாரணம், புனர்நிர்மானம், நிவாரணமாக 2,265 கோடி ரூபா செலவு செய்யப்பட்டது. போர்ச் செலவீனம் மற்றும் பல்துறை சார்ந்து 1987 முதல் 1998 வரையிலான காலத்தில் (செலவு, சொத்தழிவு, உற்பத்தி இழப்பு) மிக விரிவானது.


1.நேரடிச் செலவு
நேரடியாக போருக்கான அரசின் செலவு          21,232 கோடி ரூபா
பொதுஜன பாதுகாப்பு மேலதிக செலவு              4,000 கோடி ரூபா
புலிகளின் போர்ச் செலவு                                           4,200 கோடி ரூபா
இடம்பெயர்வு சம்பந்தப்பட்ட செலவு                   3,800 கோடி ரூபா
மொத்தம்                                                                           33,392 கோடி ரூபா

 

2.சொத்திழப்பு, புனர்நிர்மாணச் செலவு
1987 - வடகிழக்கு புனர்நிர்மாணச் செலவு          1,040 கோடி ரூபா
1995 - வடகிழக்கு புனர்நிர்மாணச் செலவு          4,900 கோடி ரூபா
வீடுகள் புனர்நிர்மாணம் (வடக்குகிழக்கு)          1,010 கோடி ரூபா
வடகிழக்கு வெளியே வீடமைப்பு                             450 கோடி ரூபா
வடகிழக்கு வெளியே அழிவுகள்                        11,230 கோடி ரூபா
(1998 பெறுமதி)
1995-க்கு பின்                                                                   2,480 கோடி ரூபா

 

3.உற்பத்தி இழப்பு
தொழில் நிபுணர்கள் காரணமான இழப்பு       11,250 கோடி ரூபா
வடகிழக்கு உற்பத்தி இழப்பு1.1982 அடிப்படையில்
உற்பத்தி குறைவு மொத்தமாக                            27,300 கோடி ரூபா
2.தேசிய வளர்ச்சி வீதத்தில்
வடக்குகிழக்கின் உற்பத்தி இழப்பு                    39,200 கோடி ரூபா
உல்லாச பயணத்துறை                                           12,000 கோடி ரூபா
அந்நிய முதலீடு                                                           7,500 கோடி ரூபா
மொத்த போர்ச் செலவு                                       1,51,752 கோடி ரூபா
அழிவுகளைத் தவிர்த்த மொத்த செலவீனம் 130642 கோடி ரூபா


இந்தச் சமூக அமைப்பில் இலங்கையின் இன யுத்தம் தொடங்கிய 15 வருடங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சம் கோடி ரூபாவுக்கு மேல் அழிந்துள்ளது. இதில் பொருட்களின் அழிவுகள் உள்ளடக்கப்படவில்லை புலிகள் 2000மாவது ஆண்டு வரை அண்ணளவாக 4260 கோடி ரூபாவை யுத்தத்துக்குச் செலவு செய்துள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இதே காலத்தில் இராணுவம் 35118 கோடியை செலவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக தேசிய வருமானத்தில் 50 முதல் 60 ஆயிரம் கோடி இராணுவத்துறை சார்ந்து அழிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அவலம் இப்படி உள்ளது என்றால், மனித உறவுகளின் அவலம் இதை விட அகலமானது. சொந்த வாழ்விடத்தில் இருந்து அன்னியமாகும் உளவியல் இழப்பு பல்துறை சார்ந்தது.


2003ம் ஆண்டு மத்தியவங்கி தனது அறிக்கையில் யுத்தத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் 80 ஆயிரத்துக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 23 ஆயிரம் என அறிவித்த மத்தியவங்கி, அப்பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,05,500 எனக் குறிப்பிட்டுள்ளது. ஒரு சமூகமே குடிபெயர்ந்த நிகழ்வால் ஏற்பட்ட அதன் துயரம், யாழ் மேட்டுக்குடி போலி மனப்பான்மையின் வெளித் தோற்றத்தைவிட அடி ஆழத்தில் ஏற்படுத்திய சேதம் வெளிக்கு தெரியாத வடுக்களாகவே உள்ளது. வடக்கில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களின் நிலையோ இதைவிட சோகமானது. வடக்கு கிழக்கு மக்கள் சந்தித்த துயரங்கள் மலையளவானது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.


வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதான உழைப்பு விவசாயமாக இருந்தது. இதன் அழிவு எல்லையற்றது. இதைப் போல் தமிழ் மக்களின் இரண்டாவது பிரதான உழைப்பாக மீன்பிடிப்பு அமைந்து இருந்தது. இந்த உழைப்புக்கு நேர்ந்த அவலமான சேதம் பற்றிய புள்ளிவிபரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளது. யுத்தத்தின் இடைக்காலமான 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வடக்குகிழக்கில மொத்த மீனவர் தொகை 2,69,629 ஆக இருந்தது. 560 மீன்பிடி கிராமங்கள் இருந்தன. தமிழ் மக்கள் தொகையில் மிகப் பெரிய உழைப்பின் ஆற்றலை வழங்கிய இந்த உற்பத்தித்துறை, இன்று முற்றாக முடங்கிக் காணப்படுகின்றது. 1983-இல் யாழ்குடா மட்டும் 48 ஆயிரம் மெற்றிக் தொன் மீன் உற்பத்தி செய்தது. ஆனால் இது 2002 இல் 5 ஆயிரம் மெற்றிக் தொன்னே உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டதாக நலிவுற்றுவிட்டது. யாழ் குடாநாட்டில் 1989-இல் 1,01,177 மீனவர்கள் காணப்பட்டனர். 2000 ஆண்டில் இது 31159 பேராகக் குறைந்து போனது. 1995-க்கு முன் 7,466 மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் சேதமாக்கப்பட்டது. மொத்த மீன்பிடி படகு மற்றும் உபகரணங்களின் சேதம் 182.45 கோடி ரூபாவாகும். இதைவிட 12 ஐஸ் தொழிற்சாலைகள், வள்ளம் கட்டும் இடங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. ஒரு இனத்தின் உற்பத்தித்துறை முற்றாகவே ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டுவிட்டது. மீன்பிடி அறிவியல் மலடாக்கப் பட்டுள்ளது. பரம்பரையான கல்விமுறை சேதமானதால், தேசியப் பொருளாதார அடிப்படை சிதைக்கப்பட்டுள்ளது. அந்த உழைப்பில் இருந்து மக்கள் முற்றாக அன்னியமாகிய நிகழ்வு, அந்த உழைப்பின் மீதான ஆற்றலையே இல்லாததாக்கிவிட்டது. சமாதானம், அமைதி என்ற நாடகத்தில் மீன்பிடி கொஞ்சம் அங்குமிங்குமாக மீள முற்பட்டுமுள்ள நிலையில், புலிகளின் வரி அதன் கழுத்தில் கைவைத்துள்ளது. பல மீனவக் கிராமங்களில் புலிகளின் வரிக் கொடுமைக்கு எதிராகப் போராடியதுடன், மீன் பிடிக்க மறுத்த நிகழ்வுகளும் அங்காங்கே கசிந்து வெளிவருகின்றது. இந்த நிலையிலும் இன்று 82 கிலோ மீற்றர் கடல் பாதுகாப்பு வலையமாகக் காணப்படுகின்றது. புலிகளின் கடல் பாதுகாப்பு வலையம் இதற்குள் உள்ளடக்கப்படவில்லை. 67 மீன்பிடி கிராமங்கள் இராணுவ சூனிய பிரதேசமாகக் கைவிடப்பட்டுள்ளது. ஒருபுறம் யுத்த பிரதேசமாகவும், மறுபுறம் அராஜகத்தை அடிப்படையாகக் கொண்ட சூறையாடலும் அமைதியாகி அதுவே சமாதனமாகியுள்ளது. சொந்த உழைப்பைக் கூட சுதந்திரமாகச் செய்ய முடியாத மக்கள் செய்வதறியாது கையைப் பிசைகின்றனர். ஒட்டு மொத்த வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இழந்து, எதுவுமற்ற தேசத்தின் பிச்சைக்காரர் ஆகின்றனர்.


விவசாயம், மீன்படி என்ற பிரதான உழைப்புத் துறைகள் யுத்தவெறியர்களின் சொந்த நலனுக்குள் சிக்கி அழிந்து வரும் நிலையில், வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்று உள்ளதுடன், வறுமையில் சிக்கியுள்ளனர். இந்த வறுமையின் துயரம் கடுமையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் 60 சதவீதமான மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை. ஒரு சமூகமே கல்வியை இழந்து நிற்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வாழ்வோரில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்து வாழ்பவர்களே. இந்த நிலைமை யாழ் குடாவைவிட கிழக்கில் அதிகமான அளவில் உள்ளது. இதற்கான புள்ளிவிபரங்கள் பெறமுடியவில்லை.


சமூக அவலம் பன்முகத் தன்மை வாய்ந்தவை. யுத்தம் ஆண்களைக் குறி வைத்து வேட்டையாடியதால், பெண்களின் விதவைக்கோலம் சமூகக் கோலமாகியுள்ளது. இவர்களின் வாழ்வை மேம்படுத்த தேசிய வீரர்களிடம் எந்தத் தேசிய வேலைத் திட்டமும் கிடையாது. ஆனால் ஏகாதிபத்தியம் இவற்றைக் கொண்டு நாட்டில் ஊடுருவுகின்றது. 2004 மார்ச் மாதம் தேசிய வீரர்களின் தலைமையகம் உள்ள கிளிநொச்சியில், 4000 விதவைகளுக்கு சுயவேலைவாய்ப்பை வழங்க உலக உணவு திட்டத்தின் கீழ் சுழற்சியான கடனை வழங்கத் தொடங்கியுள்ளது. எந்த சுயவேலைவாய்ப்பும் வாழ்வை ஓட்டக் கூடிய நிலையில் இலங்கை இன்று இல்லை என்ற உண்மை இதற்குள் ஒருபுறம் தொங்கி நிற்கின்றது. மறு தளத்தில் 2004 மார்ச் மாதம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் புதிய மையக் கட்டிடத்தைக் கிளி நொச்சிக்குச் சென்றிருந்த ஏகாதிபத்தியப் பிரதிநிதியான பிரிட்டிஷ் தூதுவர் ஸ்ரீபன் இவன்ஸ் திறந்து வைக்கின்றார். எந்த மாவீரர் குடும்பமும் இதைத் திறக்கவில்லை. சமூக அவலம் இந்தளவும் மலினமாக்கப்பட்ட நிலையில், கொள்ளைக்காரர்களிடம் மறுபடியும் சூறையாட தாரைவார்க்கப்பட இருப்பதை இவை சூளுரைத்து நிற்கின்றது. காட்டிக் கொடுப்புகள் அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மனித அவலங்கள் மறுபக்கத்தில் எல்லையற்றதாக உள்ளது.


மனித அவலங்களின் பல்வேறு புள்ளி விபரங்கள் முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், சில புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. மனிதனுக்கு விடிவைத் தராத யுத்தம் வடக்கு கிழக்கில் 30 ஆயிரம் பேரை அங்கவீனராக்கி உள்ளது. இவர்களுக்கு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பையும், வழிகாட்டுதலையும் தமிழ் தேசியத் தலைவர்கள் வழங்கியதில்லை. இது போன்று யாழ் மாவட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மொத்தமாக 25 ஆயிரத்து 773 பெண்கள் கணவனை இழந்துள்ளதாக செயலகப் பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது. கணவனை இழந்தவர்களில் 16 வயதிற்கு உட்பட்ட 9 பேரும், 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட 937 பேரும், 31 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 989 பேரும், 50 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 838 பேரும் உள்ளனர். இந்த விதவைகளின் உற்பத்தி, கிழக்கிலேயே அதிகமானது. கிழக்கில் படுகொலை அரசியல் அன்றாட அரசியல் நிகழ்வாகக் காணப்பட்டது. பெண்களின் விதவைக் கோலத்துக்கு அப்பால், பெண்கள் கணவன் தந்தை மற்றும் மகனைப் பிரிந்து வாழ்தல் ஒரு விதியாகியுள்ளது. இதனால் பொருளாதார ரீதியான சமூகச் சிதைவும், புதிய தலைமுறையின் நலிவுற்ற வாழ்க்கைக்கு தீர்வுகான வக்கற்ற ஒரு சமூகமாகவும் பரிணமிக்கின்றது.


இலங்கை அரசின் உலகமயமாதல் கொள்கை, இன அழிப்புக் கொள்கை சாதாரணமாக தமிழ்க் குடும்பங்களில் காணப்பட்ட அடிப்படையான சில பொருளாதார ஆதாரங்களைக் கூட அழித்துள்ளது. யாழ்குடா நாட்டில் மட்டும் சுமார் 4509 ஹெக்ரேயர் பயிர்ச் செய்கை நிலப்பரப்பு, உவர் நிலமாக மாற்றமடைந்துள்ளது. யாழ்குடா நாட்டில் மட்டும் கடந்த கால யுத்ததினால் 5 லட்சம் தென்னை மரங்கள் அழிந்துள்ளன. இதன் மூலம் குறைந்தபட்ச பொருளாதார அடிப்படையைக் கூட குடும்பங்கள் இழந்து நிற்கின்றன. ஒரு தென்னை மரத்தை மீள நட்டுப் பராமரிப்பதற்கு சுமார் 5 ஆயிரம் ரூபா வரை தேவைப்படுகின்றது. இதை மீள புனரமைக்க முடியாத அரசியல் தலைமைகள், அனைத்துக்கும் அன்னியனிடம் கையேந்தும் தலைவர்களைக் கொண்ட அரசியல் பிச்சைக்காரர்கள் ஒருபுறமும் மறுதளத்தில் வக்கற்றுப் போன சமூகமாகத் தமிழ் இனம் மாறிவிட்டது. அன்றாடச் சுற்றுச்சூழல் வழங்கிய பொருளாதார வளங்களான பனை, மா, பலா என்று அனைத்தும் அழிந்து விட்ட நிலையில், ஒரு சமூகத்தின் இருத்தல் என்பது பன்முகத் தன்மையில் கேள்விக்குள்ளாகியுள்ளது.


வடக்கு கிழக்கு கல்வியை எடுத்தால் அதன் பாதிப்பு அகலமானது. யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் உள்ள 2008 பாடசாலைகளில் 156 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. யுத்த சிதைவால் சுமார் 144 பாடசாலைகள் வேறு இடங்களில் இயங்குகின்றன. மிகப் பின்தங்கிய பிரதேசங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளது. தீவக வலையத்திலுள்ள 76 பாடசாலைகளில் 30 பாடசாலைகளும், வலிகாமம் வலையத்திலுள்ள 152 பாடசாலைகளில் 21 பாடசாலைகளும், திருமலை வலையத்திலுள்ள 80 பாடசாலைகளில் 15 பாடசாலைகளும், மன்னார் வலையத்திலுள்ள 75 பாடசாலைகளில் 14 பாடசாலைகளும், யாழ் வலையத்திலுள்ள 119 பாடசாலைகளில் 11 பாடசாலைகளும், தென்மராட்சி வலையத்திலுள்ள 68 பாடசாலைகளில் 10 பாடசாலைகளும், வவுனியா வலையத்திலுள்ள 83 பாடசாலைகளில் 22 பாடசாலைகளும், மடு வலையத்திலுள்ள 41 பாடசாலைகளில் 5 பாடசாலைகளும், துணுக்காய் வலையத்திலுள்ள 54 பாடசாலைகளில் 5 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதைவிட வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஒருவரே ஆசிரியராகவும், அதிபராகவும் உள்ள 85 பாடசாலைகள் உள்ளன. இரு ஆசிரியர்களைக் கொண்ட 149 பாடசாலைகளும், மூன்று ஆசிரியர்களைக் கொண்ட 138 பாடசாலைகளும் உள்ளன. கல்வி என்பது வடக்கு கிழக்கில் நலிந்து சிதைந்து செல்லுகின்றது. இன்று வடக்கு கிழக்குப் பகுதியில் 8000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 500 இற்கு மேற்பட்ட அதிபர்களும், 200-இற்கு மேற்பட்ட கல்விப் பணிப்பாளர்கள் இருந்த போதும் கல்விக்கான ஆசிரியர் பற்றாக்குறை மிகப் பெரியதாகி வருகின்றது.


மருத்துவத் துறையை எடுத்தால் என்றும் இல்லாத அவலத்தை யாழ் குடா சந்திக்கின்ற நிலையை ஒப்பிடும் போது, மற்றையப் பிரதேசங்களை நாம் கற்பனை பண்ணமுடியும். யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 7 ஆண்டுகளில் 6,480 பேர் உயிரிழந்துள்ளனர். மருந்துத் தடை, தமிழ் வைத்தியர்கள் மக்களின் வரிபணத்தில் படித்துவிட்டு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடுதல், புலிகளின் அதிகார அடக்குமுறைக்கு உள்ளாகி மருத்துவர்கள் வெளியேறுதல், பொதுவான கல்வி தர வீழ்ச்சி, சமூகப் பலவீனங்கள் என்பன உயிரிழப்புக்களை பலமடங்காக்கியுள்ளது. மலேரியா, புற்றுநோய், நெருப்புக் காய்ச்சல், வயிற்றோட்டம் மற்றும் வீதி விபத்துக்கள் என்பன என்றும் இல்லாத அளவில் மரண விகிதத்தை அதிகரிக்க வைத்துள்ளது. 1997-ஆம் ஆண்டு 820 பேரும், 1998-ஆம் ஆண்டு 883 பேரும், 1999-ஆம் ஆண்டு 875 பேரும், 2000-ஆம் ஆண்டு 770 பேரும், 2001-ஆம் ஆண்டு 932 பேரும், 2002-ஆம் ஆண்டு 1012 பேரும் 2003-ஆம் ஆண்டு 932 பேரும் உயிரிழந்துள்ளனர். உண்மையில் மருத்துவர் பற்றாக்குறையும், வசதி இன்மையும் மிக அவலமானதாக உள்ளது. உதாரணமாக யாழ் ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவில் 2004 பெப்.1 முதல் 10நாள்களில் 6,605 சிகிச்சை பெற்றனர். nhருமளவில் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றுக்கு நாள் ஒன்றுக்கு, யாழ் பிரதான மருத்துவமனைக்கு 1000 பேரளவில் சிகிச்சைபெற வருகின்றனர். இது 2003 ஜனவரி மாதத்தில் மட்டும் யாழ். போதனா மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவில் 24136 பேர் சிகிச்சைக்காக வந்தனர். நாளாந்தம் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நாள் கணக்காக ஏழை நோயாளிகளே வரிசையில் தூங்க வேண்டியுள்ளது.


இது இப்படி இருக்க, வடக்குகிழக்கில் 400 சுகாதார நிலையங்கள் சேதமடைந்துள்ளது. இதில் 49 முற்றாக இயங்க முடியாது போயுள்ளது. 15 ஆயிரம் கல்விக்கூடங்கள் முற்றாகத் தகர்ந்துள்ளது. 3,26,700 வீடுகள் முற்றாக அழிந்துள்ளது. 60 சதவீதமான வீதிகள், 10 புகையிரதப் பாலங்கள், 29 புகையிரத நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளது. இப்படி பற்பல. இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளை புனர்நிர்மானம் செய்ய 4593 கோடி ரூபா தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில்


இடம் பெயர்ந்தவர் மீள் மிள்குடியேற்றம்             568 கோடி ரூபா
சுகாதாரம்                                                                                353 கோடி ரூபா
கல்வி                                                                                        205 கோடி ரூபா
வீடமைப்பு                                                                            1005 கோடி ரூபா
உள்கட்டமைப்பு                                                                 1651 கோடி ரூபா
விவசாயம்                                                                              509 கோடி ரூபா
வீதி புனரமைப்பு                                                                  191 கோடி ரூபா
நீர் மின்சக்தி                                                                          111 கோடி ரூபா


இந்தப் பணத்துக்காகப் புலிகளும் அரசும் ஏகாதிபத்தியங்களின் கால்களினை நக்கிப்பிழைக்க முனைகின்றனர். தேசம் தேசியம் என்பது வெறும் வேட்டாகவே உள்ளது. இதற்கு வெளியில் தமிழ் மக்கள் தமது சொந்த இருப்பிடத்தை, வாழ்வியல் சார்ந்த சுற்றுச்சூழலைக் கூட இழந்து நிற்கின்றனர். சுமார் 42260 ஏக்கர் விவசாய நிலம் அதிஉயர்பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் முடக்கப்பட்ட காரணத்தால் சுமார் 16 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 தொழிற்சாலைகள் இவ்வலையத்தினுள் முடக்கப்பட்டுள்ளமையினால் சுமார் 1700 தொழிலாளர் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 82 கிலோமீற்றர் நீளமான கடற்கரை பயன்படுத்த முடியாத பாதுகாப்பு வலையமாகியுள்ளது. இதனால் 4,436 மீனவக் குடும்பங்கள் நேரடியாக பாதிப்படைந்துள்ளனர். பாதுகாப்புப் பிரதேசம் அல்லாத இடங்களில் பொதுமக்களின் 400 வீடுகளைப் படையினர் இன்னமும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மேலும் 290 பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் படையினர் வெளியேறவில்லை என புள்ளி விபரங்களின் மூலம் அறியவருகிறது. யாழ் மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலையங்கள் காரணமாக 29,525 வீடுகள் பயன்படுத்த முடியாது போயுள்ளது. சுமார் 300 பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு இடங்களுக்குப் பொது மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இருபத்தைந்திற்கும் அதிகமான முக்கிய வீதிகள் பொதுமக்கள் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. பல ஆஸ்பத்திரிகள் முதல் மக்களின் வாழ்வோடு தொடர்புடைய பல கட்டிடங்கள் வரை பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் 3700 வீடுகளை இராணுவம் தனது பாவனைக்கு என ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதை ஆக்கிரமிப்பு இராணுவம் செய்கின்றது. என்றால், புலிகளோ தமிழ் மக்களின் பல ஆயிரம் வீடுகளை, சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளனர். இதைவிட முஸ்லீம் மக்களின் விவசாய நிலங்களை, குடியிருப்புகளைக் கூட புலிகள் ஆக்கிரமித்துள்ளனர்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இழந்த சொத்துகளின் பெறுமதி 11 கோடி டொலர் (1100 கோடி ரூபா) என மதிப்படப்படுகின்றது. வடக்கு கிழக்கில் புலிகள் முஸ்லிம் மக்களைத் தமிழ் மக்கள் என்று கூறியபடி நடத்திய, முஸ்லிம் விரோத நடவடிக்கையால் முஸ்லிம் மக்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை புலிகளிடம் இழந்துள்ளனர். மொத்தம் 21614 குடும்பத்தைச் சேர்ந்த 1,02,867 நபர்களை வடக்கு கிழக்கில் இருந்து புலிகள் வெளியேற்றினர். அவர்கள் தமது சொந்த வீடு, நிலம், வியாபார நிலையங்கள் அனைத்தையும் புலிகளிடம் இழந்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் சொந்த 3,537 வீடுகளை முழுச் சொத்துடன் புலிகளிடம் இழந்தனர். அவர்கள் வசித்த 194 அரசாங்க வீடுகளையும், 6 பாடசாலைகளையும், 16 மத வழிபாட்டு இடங்களையும் கூட புலிகளிடம் இழந்தனர். இதைவிட வர்த்தகம், மீன்பிடி இழப்பும் பாரியது. இன்று 20 சதவீத வரியைப் புலிகள் முஸ்லிம் பகுதிகளில் தொடர்ந்து அறவிடுகின்றனர். இதில் இருந்து முஸ்லிம் பகுதிகளில் அடிக்கடி வன்முறைகள் நிகழ்கின்றன.
மக்களின் நலன்களில் சிறிதும் அக்கறையற்ற யுத்த வெறியர்களாலும், இராணுவ நலன் சார்ந்து அராஜக வழிகளைத் தமக்குச் சாதகமாக்கி சூறையாடுபவர்களாலும், அப்பாவி மக்கள் தமது பொருளாதார சமூக வாழ்வை இழப்பது அதிகரித்துச் செல்லுகின்றது. ஒரு போராட்டம் மக்களின் வாழ்வில் சுபீட்சத்தைக் கொடுக்கும் போது அடிப்படையில் அது முற்போக்கானது. மற்றைய நாட்டிடம் பிச்சை எடுத்தும், கடன் வாங்கியும் முன்னேற்றுவோம் என்பது ஏமாற்றுபவர்களின் அரசியல் வித்தையாகும். இதைத் தான் அரசாங்கம் செய்கின்றது என்றால், புலிகளும் தாமும் அவ்வழியே செய்வோம் என்று கொக்கரிக்கின்றனர். மக்களுக்கு சுபீட்சத்தைக் கொடுப்பதற்குப் பதில் அதுவே மக்களுக்கு எதிரானதாக மாறிவிடும் போது, அந்தப் போராட்டம் கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்கி அவர்களை நலிவுற்றவர்களாக்கியது என்றால், அதற்கு எதிரான போராட்டம் அதில் இருந்து மீட்சியைக் கொடுக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் இரண்டும் தமிழ் மக்களை அக்கபக்கமாக ஒடுக்கி வருகின்றது. மக்கள் தமது சொந்த வாழ்வின் அனைத்து சமூக அடித்தளத்தையும் இழந்து விட்டனர்.


மக்களின் வாழ்வுடன் அன்னியமான போராட்டம் மக்களின் வாழ்வை நேரடியாகவே பல்வேறு துறைகளைச் சீரழிக்கின்றது. வறுமையை ஒரு போக்காக்கி உள்ளது. யுத்தமும், உலகமயமாதலும் மட்டகளப்பில் தாய்மையும், குழந்தை பிறப்பும் என்பதை, மரணத்தின் எல்லையில் ஊசலாடப் வைத்துள்ளது. இதன் அடிப்படையில் வெளியாகியுள்ள சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.


வருடம்                                                                    1987                2000             2001                     2002
சிசு மரணம்                                                              54                 121                 117                        166
தாயின் இறப்பு                                                       12                    07                   09                           07
இறந்த நிலையில் குழந்தை பிறப்பு          71                 138                  167                        145
மொத்த இறப்பு                                                   137                  266                 293                        318


மட்டகளப்பில் குழந்தையின் இறப்பு கடந்த 15 வருடங்களில் அண்ணளவாக மூன்று மடங்காகி உள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து இன்மை பெருக்கெடுத்துள்ளது. குழந்தைகள் பாடசாலை செல்வது குறைந்து வருகின்றது. சிறுவர் உழைப்பு பெருகி வருகின்றது. சிறுமிகள் மேலான பாலியல் வன்முறை பெருகி வருகின்றது. குழந்தை உழைப்பு என்பது உயர் அந்தஸ்த்தில் உள்ளோரின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் ஊடகமாகியுள்ளது. பாடசாலைகளில் வன்முறை பெருகியுள்ளது. ஆசிரியர்கள் அதிபர்கள் இணைந்து பெண் குழந்தைகளைப் பாடசாலையில் பாலியல் ரீதியாக சுரண்டுவது அம்பலமாகியுள்ளது. வறுமை காரணமாக வேலைக்குச் சென்ற சிறுமியைப் பாலியல் ரீதியாகக் கற்பழித்த சொந்த கணவனை மன்னித்த மனைவி, சிறுமியின் பெண் உறுப்பில் சூடுபோட்ட சம்பவங்கள் கூட மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. இவர்கள் சமூகத்தின் உயர் அந்தஸ்துடையவர்கள். இவர்கள் தமிழ் தேசிய வாதிகளின் தீவிர ஆதரவாளர்கள். இப்படிப் பல பாலியல் ரீதியான சம்பவங்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆழமாகவே நலிந்து சிதைந்து வரும் ஏழைத் தமிழ் மக்களின் அவலம், கேட்பாரற்ற ஒரு சமூகப் போக்காக மாறிவிட்டது.


வடக்கு கிழக்கு சமூகமே அகதியாகி உள்ள நிலைமை என்பது, தனது சமூக இருத்தலின் மேலான கையாலாகாத் தன்மையை எதிரொலிக்கின்றது. அகதிகளுக்கான சர்வதேச அறிக்கை ஒன்றில் சொந்த வாழ்விடத்தை விட்டு 8 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தச் சமூகத்தின் சமூக இருப்பு என்பது, வரைமுறையற்ற வகையில் கேள்விக்குள்ளாகியுள்ளது. இவர்களின் நலன்களில் அரசும் சரி, புலிகளும் சரி அக்கறைப்படுவதில்லை. தத்தம் இராணுவ அரசியல் நலனுக்கு இசைவாக, இவர்கள் வெறும் கருவிகளாகவே பயன்படுத்தப்படுகின்றனர். அமைதி சமாதானம் என்ற பெயரில் யுத்த நிறுத்தம் தொடங்கியது முதல் இவர்களின் மீள்குடியேற்றம் என்பது வரை அனைத்தும் தேசியத் தலைவர்களின் வேண்டாவெறுப்பான ஒரு விடையமாகவே இருந்தது. மேலும் இது சர்வதேச நாடுகளின் விடையமாகியது. இதன் மூலம் சர்வதேச அமைப்புகள் மக்களுக்குள் ஆழமாக ஊடுருவும் ஒரு நெம்பு கோலாகியது. சர்வதேச அமைப்புகளின் தயவிலும் மற்றும் தன்னியல்பாகவும் மீள் குடியேற்றம் நடைபெற்றது. முதல் 18 மாதங்களில் 3,11,000 பேர் தமது பழைய இருப்பிடத்துக்குத் திரும்பியுள்ளனர். மீள்குடியேற்றம் ஒரு சுடுகாட்டின் மேலானதாகவே தொடங்கியது. இந்தச் சுடுகாடான வடக்கு கிழக்கில் 3,27,000 வீடுகள் சிதைந்துள்ள நிலையில் மீள் குடியிருப்பு என்பது வேதனையான ஒன்றாகவே தொடங்கியது. எந்த நிவாரணத்தையும், எந்தத் தேசிய வழிகாட்டுதலையும் தமிழ் தேசியத் தலைமைகள் வழங்கவில்லை. சிதைந்த தேசிய சுடுகாட்டில் அன்னிய நாட்டுப் பேய்களின் வழிகாட்டுதலுக்கே உட்பட்டுள்ளனர். நேரடியாக அன்னியனும், இனவாத அரசுக்கு ஊடாக அன்னியனும் வழங்கிய சில நிவாரணங்களான உணவு மற்றும் நிதியில் ஒரு பகுதியை கட்டாயமாகவே தமிழ்த் தேசியவாதிகள் சூறையாடி வருகின்றனர்.


இதைத் தாண்டி மீள் குடியேற்றம் கூட ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. பலர் தொடர்ச்சியாக கண்ணிவெடி தாக்குதலுக்கு நாளாந்தம் உள்ளாகின்றனர். வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் உத்தியோக பூர்வமாக 10 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது 20 லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் இது கணிசமானது. 55 கண்ணிவெடிக்கு ஒன்று இலங்கையில் புதைக்கப்பட்டுள்ளது. உலகளவில் புதைக்கப்பட்ட மொத்த கண்ணிவெடிகள் 11 கோடிக்கும் மேலாகும். இதை அகற்ற 3300 கோடி டொலர் (330000 கோடி ரூபா) தேவை. ஒட்டு மொத்தமாகவே புதைக்கப்பட்டவற்றை அகற்ற 1100 வருடங்கள் தேவை. இலங்கையில் 2002 வரையான காலத்தில் 35,000 பேர் கண்ணிவெடிக்குப் பலியாகியுள்ளனர். 27,000 பேர் கால்களை அல்லது வேறு உறுப்புகளை இழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 15 ஆயிரம் பேர் இராணுவ வீரர்களாவர். வடக்கு கிழக்கில் முழுமையாக கண்ணி வெடியை அகற்ற 20 வருடங்கள் தேவை. மொத்தமாக இவற்றை அகற்ற 6000 கோடி ரூபா தேவை. இந்த நிலையில் கண்ணிவெடியைத் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு அகற்ற 272 கோடி ரூபாவை பல்வேறு நாடுகள் வழங்கியுள்ளது. இந்த நிலையில் மக்கள் வாழ வழியற்ற நிலையில் இந்த கண்ணிவெடிகளின் மேல் குடியேறுகின்றனர். சமாதானம், அமைதி என்பது நாளந்தம் கண்ணிவெடி வெடிச் சிதறல்கள் மேல் தான் அரங்கேறுகின்றது. கண்ணிவெடியை அகற்ற சர்வதேச அமைப்புகள் கொடுக்கும் கூலியின் பெரும் பகுதியை புலிகள் பறித்து எடுக்கின்றனர். தர மறுத்தவர்களை கூட்டமாகவே வைத்து தாக்கப்பட்ட சம்பவங்களும் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் குறைந்த பட்சம் கண்ணிவெடி அகற்றலைக் கூட சுயமாகத் தேசியவாதிகளால் செய்ய முடியாது என்ற நிலையில், எப்படித் தான் தமிழ்த் தேசத்தை நிர்ணயம் செய்யப் போகிறார்கள்?


உண்மையில் இந்த வேதனைக்குரிய தமிழச் சமூகம், மத்தளம் போல் மோதப்படுவதன் ஊடாகவே இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் ஜனநாயகத் தோற்றத்தில் பொம்மி நிற்கின்றது. சமூகமே புலம் பெயர்ந்து அகதியாகி மீள குடியேறத் துடிக்கும் தமிழ் மக்களின் வாழ்வோ என்றுமில்லாத வேதனைகளால் அல்லல் உறுகின்றது. சமாதானம், அமைதி மீண்டுவிடும் என்ற நம்பிக்கையில், அதை பலப்படுத்தும் எல்லாவிதமான மனித விரோதப் போக்கையும் கூட ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களின் தலைவிதி என்பது துயரமானது. யூனிசேவ் அறிக்கை ஒன்று வடக்கில் 69 சதவீதமான குழந்தைகள் அகதி முகாம்களில் வாழ்வதாக தெரிவித்துள்ளது. இந்த இளம் குழந்தைகளின் தலைமுறை வாழ்வு ஒரு சமூகப் போக்கின் வளர்ச்சிக்கே நேர் எதிராகவே தொடங்குகின்றது. அதுவும் யாழ் சமூகத்தின் நிலையே இது என்றால், மொத்த தமிழ் சமூகத்தின் வீழ்ச்சி என்பது பள்ளத்தில் உருண்டு ஓடுவதைத் தாண்டி எதுவும் இருக்கப் போவதில்லை.


இதன் துயரத்தைச் சில புள்ளிவிபரங்கள் மெய்ப்பிக்கத் தொடங்கிவிட்டது. 5வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 94 ஆயிரம் சிறுவர்கள் பாடசாலை செல்வதை இடைநடுவில் கைவிட்டுள்ளனர் என வடக்கு - கிழக்கு மாகாண கல்வி அலுவலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வன்னி மாவட்டத்தில் ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 20 சதவீதத்திற்கும் கூடுதலான புள்ளிகளைப் பெறுவதில்லை என யூனிசெவ் அறிவித்துள்ளது. வறுமை, இயலாமை, சமூக அடிப்படையற்ற அனாதை வாழ்க்கை, அரசியல் ரீதியான மிரட்டல் வாழ்வுமுறை என்பன, உயிர்த் துடிப்புள்ள எந்தக் கட்சியையும் நுனியிலேயே கிள்ளி எறிகின்றது. ஒரு சமூகத்தின் அடிப்படைக் கல்வியை இழப்பது, தமிழ் இனத்தின் அழிவை மேலும் துரிதமாக்கின்றது. யாழ்குடாவை எடுத்தால் மொத்த மக்களின் எண்ணிக்கையே மிகக் குறைவானது. இனப்பிரச்சனை தொடங்கும் முன் இருந்த மக்களின் எண்ணிக்கையை விடக் குறைவானது. யாழ்குடா நாட்டில் 2003-இல் 1,43,170 குடும்பங்களைச் சேர்ந்த 4லட்சத்து 99 ஆயிரத்து 195 பேர் வசித்து வருவதாக யாழ் செயலகப் பதிவுகளில் இருந்து தெரிய வருகின்றது. எண்ணற்ற தமிழ் மக்கள் காணாமல் போய் விட்டனர். இந்த மிகக் குறைந்த மக்கள் கூட வறுமையில் சிக்கிவிட்ட நிலையில், ஒரு பணக்காரக் கும்பல் மட்டும் திமிருடன் உருவாகி உள்ளது. அது எல்லாவிதமான மோசடியிலும் ஈடுபடுகின்றது. நலிவுற்ற சமூகத்திடமே பணம் கறப்பதை அடிப்படையாகக் கொண்ட கும்பல்தான் தமிழ்ச் சமூகத்தை வழிநடத்துகின்றது.


94 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாகக் கல்வியை இழந்துள்ள நிலையில், யாழ் மாவட்டப் பாடசாலைகள் சிலவற்றில் பொறுக்கித் தின்னும் கும்பல் ஒன்று மாணவர்களைப் பாடசாலையில் சேர்ப்பதற்கு 15 ஆயிரம் ரூபா தரும்படி நிர்பந்திக்கின்றனர். நிதி கோருவது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் கல்வித் திணைக்களத்துக்கே சென்று முறையிட்ட போது, தம்மையொன்றும் செய்யமுடியாது என்று கூறும் அளவுக்கு அதிகாரத் திமிர் நிறைந்த கும்பல் ஒன்று உருவாகியுள்ளது. ஆகக் குறைந்தது 3 ஆயிரம் ரூபா கட்டவேண்டும் என்று கோருவது அரசாங்கமல்ல. தமிழ் மக்களிடையே உருவாகியுள்ள திடீர் பணக்கார கும்பலே. இதில் தேசியம் பேசும் புலிகளும் இணங்கிப் போவது மட்டுமல்ல, தமிழ் மக்கள் என்று மூச்சிறைக்க கோஷம் போடும் பினாமிப் பல்கலைக்கழகம் கூட இந்த மனித விரோதக் கொள்ளைக்கு எதிராக மூச்சுவிடுவதில்லை.

Last Updated on Saturday, 30 August 2008 18:49