Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மக்களை குடிகாரர்களாக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது

மக்களை குடிகாரர்களாக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது

  • PDF

1997-ஆம் ஆண்டுக்கும் 2002-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,096 பாடசாலைகளை உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க மூடிய அரசு, 2000-க்கும் 2003-க்கும் இடைப்பட்ட காலத்தில் புதிதாக 9882 மதுபான விற்பனையகங்களைத் திறந்துள்ளது.


வருடம் புதிதாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கல்
2000              2684
2001              3200
2003             3998


மக்களை மந்தைகளாக்கி, அவர்களைக் குடிகாரர்களாக்குவது தேசியக் கொள்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. மக்களின் அடிப்படைத் தேவையை நிராகரிப்பதும், அவர்களை மந்தைகளாக்குவது, குடிகாரர்களாக்குவது, வக்கிரம் பிடித்தவர்களாக உருவாக்குவது இலங்கையின் தேசிய அரசியலாகியுள்ளது. நவீன டிஸ்கோக்கள், நிர்வாண நடனச் சாலைகள், மசாஜ் மையங்கள், சூதாட்ட விடுதிகள், மதுபான மையங்கள், ஆபாச சினிமா மையங்கள் என்று இலங்கை பூராவும் பல்கிப் பெருகுகின்றது. இதை மறுத்து நிற்பவர்களைத் தற்கொலை செய்யக் கோருகின்றது. மறுதளத்தில் வைத்தியசாலைகளையும், பாடசாலைகளையும், போக்குவரத்து வசதிகளையும் மறுக்கின்றது. அதாவது மக்களின் அடிப்படையான சேவைத்துறைகள் இழுத்து மூடப்படுகின்றது. இவை லாபம் தராத ஒன்றாக இருப்பதால் இவைகள் இழுத்து மூடப்படும் அதே நேரம், இத்துறைகள் தனியார்மயமாக்கப்படுகின்றன.


இலங்கையில் மது பயன்பாட்டை ஆராய்ந்தால் அதிர்ச்சிதான் ஏற்படும். 2002-ஆம் ஆண்டு மதுபானத் திணைக்களம் அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்தியது 900 கோடி ரூபா. இது மக்களின் வாழ்வை போதையில் மயக்கி, அவர்கள் அறியாமல் பிடுங்கும் தேசிய வருமானமாகிவிட்டது. இந்த வரி அறவிட்டைக் கடந்து, மதுபானத் திணைக்களம் திரட்டிய நிகரலாபம் 51.7 கோடி ரூபாவாகும். 2002-ஆம் ஆண்டு இலங்கை மக்களையே தேசிய குடிகாரர்களாக்கும் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்ட அரசு, 6.24 லட்சம் லீற்றரால் உற்பத்தியை அதிகரிக்க வைத்து குடிகாரர்களின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதன் விளைவு என்ன? மதுபாவனை தொடர்பான வைத்திய அறிக்கை ஒன்று இதை தெளிவுபடுத்தியுள்ளது. 25 முதல் 44 வயதுடையவர்களின் இறப்பில், பிரதானமானது மதுவை அடைப்படையாக கொண்டே நிகழ்கின்றது என்ற அறிக்கையும் வெளியாகியுள்ளது. மதுவினால் ஏற்படும் சிரோசிஸ் நோய், இலங்கையில் வருடாந்தம் 10,069 பேரை பாதிக்கும் அதே நேரம், 10,000-க்கு 55 பேர் இதன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உலகமயமாக்கும் சமூக வக்கிரம் இலங்கையில் சில பகுதிகளில் பெண்களையும் குடிக்கு அடிமையாக்கியுள்ளது. சிறுவர் சிறுமிகளையும் கூட பண்பாட்டு சமூச் சீரழிவின் ஒரு அங்கமாக, குடி நவீன கலாச்சார நுகர்வாக மாறி நிற்கின்றது.


குடியை எடுத்தால் இலங்கையில் தனிமனித பாவனை 4 லீற்றராக இருக்க, அதுவே ஆணுக்கு 15.2 லீற்றராக உள்ளது. சமூக வறுமையுடன் கூடிய அவல வாழ்க்கையை மறக்க, குடி ஒரு தீர்வாகக் கையாளப்படுகின்றது. அதிர்ஷ்ட லாபச் சீட்டு வாங்கி சொந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்ற கண்ணோட்டத்தை ஒத்தவகையில், குடி சமூகப் பிரச்சனைக்கு வடிகாலாகின்றது. இதன் விளைவாக நகர்புற குடிசைப் பகுதிகளில் 43 சதவீதமானவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். பெருந் தோட்டப் பகுதியில் இது 55 சதவீதமாக உள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இதன் சமூக விளைவு அதிர்ச்சிகரமானதே. சராசரியாக இலங்கையில் ஒரு ஆண் மதுவுக்கு தனது வருமானத்தில் 30 சதவீதத்தை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தின் நுகர்வு குறைவதுடன், பெண்களும் குழந்தைகளும் மேலும் ஆழமாக ஆரோக்கியமான வாழ்வை இழக்கின்றனர். குடும்ப தகராருகளும், உளவியல் நெருக்கடியும் நிரந்தரமான சமூக விதியாகிவிட்டது. பிளவுகளும், மனநோயாளிகளும், தற்கொலைகளும், குற்றங்களும் தலைவிரித் தாடும் ஒரு சமூகப் போக்கை அங்கீகரிக்கும் பண்பு உருவாகிவிட்டது.


இதன் சில விளைவுகள் அதிர்ச்சிகரமானவையாக இருப்பதில்லை. இலங்கையின் மொத்தக் குற்றச் செயல்களில் 38 சதவீதமானவை, மது பாவனையால் ஏற்படுகின்றது. அதாவது போதையினால் ஏற்படுகின்றது. 2001 இல் நடந்த மொத்த வாகன விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 2800 ஆகும். இதில் 90 சதவீதமானவை மதுவினால் நடந்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் கொலை, பாலியல் வன்முறை, விபச்சாரம் போன்றவை தேசிய பண்பாகி கொடிகட்டிப் பறக்கின்றது. போதையில் மகன் தாயைப் புணர்ந்த நிகழ்வுகள், தந்தை மகளைப் புணர்ந்த சம்பவங்கள் பல நடந்துள்ளது. மதுப் பாவனையுடன் கூடிய பண்பாடு மனைவி மற்றும் மகள் மேலான பாலியல் சந்தேகத்தை விரிவாக்கியுள்ளது. குடி ஒருபுறம் தலைவிரித்தாட புகைத்தல் அதன் அண்ணனாக தலைவிரித்தாடுகின்றது. உலகமயமாதலின் நவீனம் புகைக்கும் அழகில், குழந்தைகளையும், சமூக உளவியலையும் சுண்டி இழுக்கின்றது. இதன் மூலம் புகைக்கும் போதையை மெதுவாக உடலில் ஏற்றி விடுகின்றது. இதன் விளைவு என்ன?.


இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 55 சதவீதம் பேர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர். வயது வந்தோரில் 33 சதவீதம் பேர் புகைத்தலுக்கு அடிமையாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பீடி போன்றவற்றையே புகைக்கின்றனர். தோட்டப் பகுதிகளில் 64.4 சதவீதம் பேர் புகைக்கின்றனர். நகர்ப்புற குடிசைகளில் இது 85 சதவீதமாக உள்ளது. வறிய சேரிப்புறங்கள், மற்றும் உடல் உழைப்பில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர். வாழ்வின் துயரங்களை எல்லாம் சுமையாக்கி வாழும் இம் மக்கள், கடும் உழைப்பில் சிக்கி மூச்சு விடா முடியாத ஒரு நிலையில் புகைத்தல் இவர்களுக்கு சில கணங்கள் அற்ப இன்பத்தை ஏற்படுத்தி விடுவதை இது காட்டுகின்றது. அதனால் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். இவர்கள் பெருமளவில் மலிவான புகைக்கும் பொருட்களைச் சார்ந்து உள்ளனர். மறுபுறத்தில் சிறுவர் சிறுமிகளின் முன்னான பண்பாடு, புகைத்தல் என்பது நவீன கவர்ச்சிகரமான ஊடகமாக அவர்கள் முன் உள்ளது. தன்னைத் தான் அங்கீகரிக்கும் ஒரு சமூகப் பண்பாடாக இது மேலெழுந்து வருகின்றது. இதன் விளைவு இலங்கையில் புகைக்கும் எண்ணிக்கையை 55 சதவீதமாக உயர்த்தியுள்ளது. வயது வந்தோர் புகைத்தல் 33 சதவீதமாக இருக்க, சிறுவர்களை உள்ளடக்கிய புகைத்தல் 55 சதவீதமாக இருக்கின்றது. இது 12 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்ட பெரும் பகுதியை புகைத்தலுக்கு அடிமையாக்கியுள்ளது. புகைத்தல், மது, மங்கை (மறு தளத்தில் ஆணுடன் விபச்சாரம் என்ற சிறுமிகளின் பண்பாடும்) இன்று, இலங்கைப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வமற்ற மாற்று கல்வியாகிவிட்டது.


இலங்கையில் 13 லட்சம் பேர் ஒவ்வொரு நாளும் புகைக்கின்றனர். இதன் மூலம் 2500 கோடி ரூபா வரியாக அரசுக்குப் புகையிலைக் கம்பனி வழங்குகின்றது. மறு தளத்தில் சட்டவிரோதமான சிகரெட்டுக்கள் நாட்டின் உள்ளே கடத்தப்படுவதால், அரசாங்கம் வருடம் 90 கோடி ரூபாவை இழப்பதாக அறிவிக்கின்றது. இந்த நவீன மூலதனச் சந்தையின் பலம், மக்களின் சுகாதாரக் கேட்டின் படிகற்களாக இருப்பதைக் காட்டுகின்றது. இலங்கை மருத்துவச் செலவான 2600 கோடி ரூபாவில் 10 முதல் 15 சதவீதம் புகைத்தலால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த செலவு செய்யப்படுகின்றது. அதாவது 260 முதல் 390 கோடி ரூபா புகைத்தல் சார்ந்த நோய்க்காக தாரைவார்க்கப்படுகின்றது. மது அருந்தல், புகைத்தல் தேசிய கொள்கையாகிவிட, அதை ஊக்குவிப்பதை அரசு திட்டமிட்டே செய்கின்றது. உலகமயமாதலின் பண்பாடு, கலாச்சார அடித்தளத்தில் இதுவே தேசிய இலட்சியமாகின்றது. மதுபான விற்பனையகங்களை அரசு பெருக்குகின்றது. சட்டவிரோதமாகவும், சட்டப்ப+ர்வமாகவும் சிகரட் நாட்டின் உள் கட்டமைப்பபையே அரிக்கின்றது. இவை ஊக்குவிக்கப்பட, மறுதளத்தில் குழந்தைகளின் கல்வி மறுப்பது அரசின் அடிப்படை கொள்கையாகி வருகின்றது.

Last Updated on Friday, 29 August 2008 21:38