Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்

சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்

  • PDF

"தெ ன்னாசியச் சமூகத்தில் பெண்நிலைவாதம்"68 என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை, தென்னாசியப் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் எழுதப்பட்ட நூலில் இருந்து எடுத்து, எக்ஸிலில் (முன்னைய எக்ஸிலில்) முன்வைத்துள்ளனர். இதை ஆராய்வோம்.


"சமூகத்தில் நிலவும் பால் அடிப்படையிலான ஒடுக்குதல், ஆணாதிக்கம், தந்தைவழிச் சமூகம் என்பவற்றின் இருப்பைக் கண்டுகொண்டு, இவற்றிற்கு எதிரான ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் பெண்ணியவாதி ஆவார்"68 எனக்கூறுவதன் மூலம் கட்டுரை, பெண்கள் மீதான ஒடுக்குமுறையை மறைமுகமாக மறுத்தும், இயங்கியலை மறுத்தும் கூறும் அதேநேரம், பெண் விடுதலையின் ஆரம்பப் பார்வையே ஆணாதிக்கத்தில் இருந்து தொடங்குகின்றது.


முதலில் ஒரு பெண் பெண்ணாக இருக்கிறாள் எனின், அவளின் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தான் அவள் உயிர்வாழ்கின்றாள். ஆணாதிக்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இன்றி உலகில் எந்தப் பெண்ணும் உயிர்வாழ்வதில்லை. இதுதான் பெண் உயிர் வாழ்தலின் உயிரியல் அடிப்படையாகும். ஆனால் இப்போராட்டம் தன்னியல்பாக நாள் தோறும் அவர்களை அறியாமலும் அறிந்தும் நீடித்தவண்ணம் உள்ளது. முதலில் ஒரு பெண் பெண்ணாக இருக்கும் போக்கில் போராட்டம் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கின்றது. ஆகவே போராட்டத்தை ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தெரிந்தும் தெரியாமலும் தன்னிச்சையாகவும் செய்யும் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை. மாறாக, பெண்களாக உள்ளனர். பெண் பெண்ணாக இருக்கின்றாள் எனின் ஆணாதிக்கத்துக்கு எதிராக இருக்கின்றாள்.


பெண்ணியவாதி, பெண் ஒடுக்குமுறை எப்படி தொடங்கி ஆணாதிக்கமாக எப்படி வளர்ச்சி பெற்றது? என்பதை, வரலாற்று இயங்கியலில் புரிந்து கொண்டு, அதை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்? என்பதை விஞ்ஞானப்பூர்வமாகப் புரிந்து, அதற்காகப் போராடுபவர்கள் மட்டும்தான் பெண்ணியவாதிகள் ஆவர்.


சமுதாயத்தில் பெண் ஒடுக்குமுறைக்குக் காரணமான உபரியும் அதன் அடிப்படையிலான சுரண்டலில் தொடங்கி, பெண்ணைச் சுரண்டி, அடிமையாக்கிய பெண் மீதான பாலியல் சுரண்டலைத் தொடங்கியது முதல், இதை ஒழித்துக் கட்டும் போராட்டம் இறுதியானதும் முடிவானதுமான ஆணாதிக்கத்தால் வளம்பெற்ற சுரண்டலை ஒழித்துக்கட்டும் போராட்டத்துடன் தொடர்புடையது. இதைப் புரிந்து, இதற்காகப் போராடாத எவரும் பெண்ணியவாதியாக இருப்பதில்லை. ஏனெனின், இதை மறுக்கும் யாரும் பெண்களுக்குச் சலுகை கோருவதற்கு அப்பால் ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்ட போராடுவதில்லை. மாறாக ஆணாதிக்கத்திடம் சலுகை பெற்று ஆணாதிக்கப் போக்கில் ஆணாதிக்க நிலையை அடைவது மட்டும் நிகழ்கின்றது.


இன்று பொதுவாக ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டுவதை மறுக்கின்ற, ஆணாதிக்கத்தின் தோற்றத்தைப் புரிந்து கொள்ளாத பலர் பெண்ணியவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த வகையில் இருக்கும் சமூக எல்லையைத் தாண்ட கோரும் (கட்டுடைப்பை), எல்லாச் செயல்களிலும் ஈடுபடும் அனைவரும் பெண்ணியவாத வேஷம் போட்டுக் கொள்கின்றனர்.


ஒரு கவர்ச்சி மொடலிஸ்ட் முதல் சீர்திருத்தத்தை முன்வைக்கும் அனைவரும் வரை உண்மையில் பெண்ணியவாத வேஷத்துடன் ஆணாதிக்க இருத்தலுக்காக, அதன் வழியில் சலுகையை ஆணாதிக்கத்திடம் பெற்று முண்டுகொடுக்கின்றனர்.


அதாவது சமூகத்தில் வேறுபட்ட பல்வேறு ஒடுக்குமுறைகளில் ஒடுக்குவதற்கு சாதகமாக இருந்தபடி, பெண்ணியவாதிகள் வேஷத்துடன் பெண்களை ஏமாற்றி சீரழிக்க ஆளும் வர்க்கங்களால் கோட்பாட்டுச் செயல் தளங்கள் இடப்படுகின்றன. இன்று ஏகாதிபத்தியத்தால் பெண்விடுதலை கோஷங்களுடன் கட்டியமைக்கப்பட்டு, களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தன்னார்வப் பெண் விடுதலைக் குழுக்களின் பிரதிநிதிகள் கூட, பெண்ணியவாதிகளாக உலா வருகின்றனர். இன்னுமொரு புறத்தில் மாறுபட்ட பொருளாதார (நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்) இடைவெளிகளில் பெண்களின் ஒடுக்குமுறையின் வடிவங்கள் மாறுபடும் போது, அதை மறுத்து (பிந்தியதை) மற்றதைக் கோருவது பெண்விடுதலையாகக் காட்டப்படுகின்றது.


சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலைக்கும் உதவும் வகையில் இல்லாத எல்லா பெண்ணியவாதக் கோரிக்கையும், ஆணாதிக்கத்தைத் தக்கவைக்கும் முயற்சியின் அங்கமாக உள்ளதுடன், மனிதப் பிளவுகளில் உயிர் வாழும் நச்சுக் காளான்களாக உள்ளனர். பெண்ணியவாதி யார் என்ற விளக்கத்தின் ஊடாக ஏகாதிபத்திய நஞ்சுகளுக்கும் பால்வார்த்து வளர்க்க விரும்பும் தொடர்ச்சியில்தான் இக்கட்டுரை நகர்கின்றது. பெண்விடுதலையை அடையும் வழியில் முன்வைக்கும் மோசடித்தனத்தைப் பார்ப்போம்.


".....ஒருத்தி, ஒருவன் பெண்ணியவாதியாக இருப்பதற்கு ஒரு குழுவில் அல்லது ஓர் அமைப்பில் அங்கம் வகிக்கவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் எதையாவது காத்திரமாகச் செய்வதற்கு ஒரு குழுவில் அமைப்பில் இருத்தல் நன்று."68


எவ்வளவு மோசடி. பெண் விடுதலையடைய, அமைப்பின்றி சாத்தியம் என்பது இருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தை கட்டிக் காக்கும் நனவான கனவுகளில் பெண் விடுதலையின் பெயரால் முன்வைப்பதுமாகும். தனிநபர் அமைப்புக்கு வெளியில் காத்திரமாக எதுவும் செய்ய முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டு, நடைமுறையில் மக்களுக்குள் போராடாது பெண் விடுதலையின் பெயரில், புத்தக மார்க்சியவாதிகள் போல் பெண்களைப் பற்றி திண்ணை விடுதலை பேசுவதை அங்கீகரித்து, பிழைக்க பின்நிற்கவில்லை. அத்துடன் அமைப்பைக் கோரும் பெண்ணியவாதமும், தனிநபர் அமைப்பில் சேருவதை எதிர்க்கும் அராஜகப் பிரிவினருடன் கோட்பாட்டு நடைமுறை விவாதத்தைத் திட்டமிட்டே, தனது கோட்பாட்டில் மறுக்கின்றது. அதாவது அமைப்பை மறுக்கும் அராஜகவாதப் பெண்ணியம் பேசுவோரின் கோட்பாட்டுக்குச் சலுகை வழங்கி பெண்களை ஏமாற்றவும் ஆணாதிக்கத்துக்குக் கம்பளம் விரிக்கவும் தயாராக உள்ளதைக் கோடிட்டுக் காட்டுகின்றார்.


இதைச் செழுமைப்படுத்தும் வகையில், "பெண்ணியவாதியாக இருப்பதற்குச் சொற்கள் அல்லது சொற்கட்டுகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கோட்பாடு அல்லது தத்துவத்தைக் கொண்டிருக்கத் தேவையில்லை. தேவையானது எல்லாம் ஆணாதிக்கத்தைக் கண்டுகொள்ளலும், இரட்டை நிலைப்பாடுகளையும், அநீதியையும் ஆணாதிக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான துணிவைக் கொண்டிருப்பதும் தான்"68 என்று கூறுவதன் மூலம் ஆணாதிக்கத்தைத் தக்க வைக்க கோட்பாடற்ற பூர்சுவா பெண்களையும், ஆண்களையும் பெண்ணியவாதிகளாக முன்மொழிகின்றனர். திரொஸ்கி கட்சி உறுப்பினராக இருப்பதற்கு எல்லாத் தொழிலாளிகளுக்கும் தகுதி உண்டு எனச் சொன்னதைத் தான், பெண்ணியவாதத்துக்கும் பூர்சுவா பெண்நிலைவாதிகள் மீள முன் வைக்கின்றனர்.


ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை மட்டும் கோரும் பெண்ணைப் பெண்ணியவாதியாகச் சித்தரிப்பதன் மூலம், பெண்களை ஏமாற்றி பிழைக்க பூர்சுவா வர்க்கம் முயல்கின்றது. இந்தியாவில் பார்ப்பனியப் பாரதிய ஜனதாக் கட்சியிலுள்ள பெண்கள் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றனர். ஏன் பாராளுமன்றத்தில் பெண்பிரதிநிதித்துவத்திற்காகப் போராடுகின்றது.


அண்மையில் இந்தியாவில் அழகுராணி போட்டியை எதிர்த்து சிவசேனை கட்சியின் பெண்கள் அமைப்பு நிலப்பிரபுத்துவ இந்துக் கோட்பாட்டில் இருந்து போராட, பாட்டாளிவர்க்கம் ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பண்பாட்டை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உயர்த்தி போரிட்டது. இங்கு இரு போராட்டமும் நேர் எதிர்த்தன்மை கொண்டன. இங்கு ஆணாதிக்கத்தை எதிர்த்த என்ற எல்லைக்குள் பெண்ணியவாதியாகச் சிவசேனைக் கட்சியின் பெண்கள் அமைப்பை அங்கீகரிக்க முடியாது.


நடைமுறையில் இயல்பாக எப்போதும் பெண்கள் கோட்பாடு தெரிந்தோ, தெரியாமலோ ஆணாதிக்கத்துக்கு எதிராக எப்போதும் போராடியபடிதான் உயிர்வாழ்கின்றனர். இவைகள் ஊடாகச் சில வெற்றிகளைப் பெறவோ, சலுகைகளைப் பெறவோ முடிகின்றது. இவை இறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்லும் போராட்டத்தை நடத்தி விடுவதில்லை. இவர்கள் பெண்ணியவாதிகளாக இருந்து விடுவதில்லை. மாறாகத் தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதால் மட்டும் பெண்களாகத் தொடர்ந்து உயிர் வாழ்கின்றனர். பெண்ணியவாதிகள் இவர்களில் இருந்து மாறுபட்டுப் பெண்ணின் ஒடுக்குமுறையை, விடுதலையை விஞ்ஞானப்பூர்வமாகப் புரிந்து சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளையும், ஒடுக்கும் மக்கள் சார்பாக நின்று, முரணின்றி எதிர்த்துப் போராட தத்துவார்த்தக் கோட்பாட்டில் அமைப்பைக் கோருபவளும், அமைப்பில் இருப்பவளும் மட்டும்தான் பெண்ணியவாதியாவள். இதற்கு வெளியில் பெண்ணின் ஒடுக்குமுறையில் ஏதாவது ஒன்றை உயர்த்தும் போது இவை சுரண்டல் சமுதாயத்தில் ஆணாதிக்கத்துக்கு உட்பட்ட ஜனநாயகக் கோரிக்கையாக மட்டும் இருக்கின்றது. இது சில சலுகைகளை ஆணாதிக்கத்திடம் பகிர்ந்துண்ண கோருவதற்கு அப்பால், ஆணாதிக்கத்துடன் இணைந்துகொள்வதுடன் தொடர்ச்சியாக அதன் போக்கில் பெண்ணுக்கு எதிராக வளர்ச்சி பெறுகின்றது.


இன்று காணப்படும் பெரும்பாலான அமைப்புகள் இந்த எல்லைக்குள்தான் செயல்படுகின்றன. விஞ்ஞானப் பூர்வமாக ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்ட ஒரு பெண்ணியவாத அமைப்பு உருவாகும் பட்சத்தில், இச்சமூக அமைப்பு ஆட்டம் காணத் தொடங்கிவிடும். இது சமூகத்தின் எல்லா முரண்பாடுகள் மீதும் போராடுவதன் மூலம் இச்சமூக அமைப்பைத் தலைகீழாக்கி விடுகின்றது. இதுமட்டும் தான் பெண்ணியவாதியின் ஒரே பாதையாக இருக்கமுடியும்.


இதை மறுத்து வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். "இதனுடைய இறுதித்தீர்வு ஒரு குழுவின்மேல் இன்னொன்று வெற்றிவாகை சூடுவதில்லை. (இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் - ஆணின் மேல்) ஆணினால் சமூகத்தின் எல்லா விஷயங்களிலும் ஒரு மீள் சிந்தனை, ஒரு மீளமைப்பு. ஏனைய வர்க்கங்கள் தந்தைவழி ஆதிக்கஃஆணாதிக்க அமைப்பினுள்ளேயே தங்களுடைய குறிக்கோள்களை அடையமுடியும். தங்களுடைய விரோதிகளை வென்றோ அல்லது அழித்தோ அவர்கள் வெற்றியை அடையமுடியும். அவர்கள் உள் வர்க்க, சாதி, மத, இன வேறுபாடுகளற்ற ஒரு பொதுக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் பெண்கள் அமைப்புஃஇயக்கம் இவைகளில் எதையும் செய்ய முடியாது. அது அதனுள்ளேயே வர்க்கம் மற்றும் வேறுபாடுகளைக் களைந்து வெல்லுதல் வேண்டும். அது சமூகத்தின் சாராம்சத்தை மாற்ற வேண்டும். அது விரோதப்போக்கைத் திசை திருப்ப வேண்டும்"68 என்று தமது பெண்விடுதலை கண்டுபிடிப்பைப் பகிர்ந்து உண்ணும் போக்கில் முன்வைக்கும் வாதத்தைப் பார்ப்போம.


ஆண்களின் போராட்டங்கள் முரண்பாடற்ற பொதுக்கோரிக்கையில் வெல்ல முடியும் என்கின்றனர். அதாவது நோக்கத்தை வைக்காது, நடைமுறையைக் கோராது, போராடாது பேசிக் கொள்ளும் வகையாறுகள் தான் எவ்வித குறிக்கோள்களுமின்றி இருக்க முடிகின்றது. சமூகத்தின் உயிர் ஓட்டமுள்ள எல்லாப் பிரச்சினைகளிலும் பொது நீரோட்டம் ஒன்றை ஆணும் சரி பெண்ணும் சரி வந்தடைய இந்த வர்க்கச் சமுதாயத்தில் ஒருக்காலும் முடியாது. எல்லா முரண்பாடுகளும், எல்லா கோரிக்கைகளும் வர்க்கச் சமுதாயப் பிளவுகளால் எதிர்நிலைப் போராட்டத்துக்கு உட்பட்டுத்தான் யதார்த்தத்தில் உள்ளது. பெண் விடுதலைப் போராட்டம் ஆண் - பெண் வேறுபாடின்றி ஒரே தளத்தில் நடப்பதுடன் பொதுவாக ஆண் சார்பு நிலைக்கு எதிராக நடக்கின்றது. இங்கு விரோதப் போக்கை இல்லாது ஒழிக்கும் கற்பனைகளில் அல்ல. மாறாக, ஆணாதிக்கக் கருத்து நிலைக்கு எதிராக, அதன் ஆதிக்கப் பிரிவுகளுக்கு எதிராக வர்க்க விரோதத்துடன் தனது அதிகாரத்துக்காகப் போராடக் கோருகின்றது உண்மையான பெண்ணிலைவாதம்.


ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் சமூகத்தின் அனைத்து முரண்பாடுகளுக்கும் வெளியில் நடக்க முடியும் என்பது கற்பனையான கருத்துமுதல்வாதம். ஏனெனின் முரண்பாடும், வர்க்கப் பாதையும் இன்றி யதார்த்தம் இருப்பதில்லை. அது போல் யதார்த்தத்தை ஒட்டி நடைமுறை இருப்பதால் அனைத்து முரண்பாடுகளும் ஆணாதிக்கத்துக்குள்ளும் எழுகின்றது.


அதாவது பெண் விடுதலை என்பது மற்ற முரண்பாடுகளுக்குள் புதைந்து போயுள்ளது. பெண் ஒடுக்குமுறை மற்ற முரண்பாடுக்கு வெளியில் உருவானதல்ல. சுரண்டல் எப்போது தொடங்கியதோ அப்போதே பெண்மீதான ஒடுக்குமுறை தொடங்கியதுடன், அதன் வேறுபட்ட பண்பியல் மாற்றங்கள் காலத்துக்குக் காலம் இணைந்து கொண்டன. பெண்ணியவாதிகள் எனக் கூறிக் கொள்ளும் பலர் சுரண்டலைப் பேசுவதில்லை என சபதம் எடுத்துதான் பெண்விடுதலை பேச முனைகின்றனர்.


அதாவது பெண் எப்படி ஒடுக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டாள் என்ற வரலாற்று இயங்கியலை மறுத்து இயங்கியல் மறுப்பை முன்வைத்து உண்மையைப் பார்க்க மறுக்கின்றனர். பின் எம் ஒடுக்குமுறைக்கு எதிராக நாம் ஏன் போராடக் கூடாது எனக் கேட்பதன் மூலம் பெண்விடுதலை பேசுவதாகப் பாசாங்கு செய்கின்றனர். இங்கு இவர்கள் ஆணாதிக்கவாதிகளிடம் சலுகைகளைக் கோரிப் போராடுகின்றனரேயொழிய ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டப் போராடுவதில்லை.


ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமாயின் அது ஆணாதிக்கச் சுரண்டல் சமூகத்துக்கு எதிராகப் போராடும் ஒரே ஒரு பாதையில் மட்டும் நிகழ்வதாக உள்ளது. ஏனெனின் பெண் ஒடுக்குமுறை என்பது சுரண்டலைத் தொடங்கியதில் இருந்துதான் உருவானது. மருத்துவர் போல் அடிப்படைக் காரணத்தைத் தெரிந்து மருத்துவம் செய்வது போல் ஆணாதிக்கத்தை ஆராய மறுக்கும் அரசியல் நோக்கம் கபடம் நிறைந்தது.


இன்றைய சுரண்டல் சமுதாயத்தைப் பற்றி கேள்விகேட்காத அமைதிப் பெண்ணியவாதம் பேசி சலுகைகள் கேட்பதன் மூலம், தொடர்ந்து ஆணாதிக்கச் சுரண்டலுக்குள் ஆணாதிக்கச் சலுகை பெற்று ஆணாதிக்கச் சமுதாயத்தைக் காப்பாற்ற கனவான நனவுகளுடன் செயல்படுகின்றனர். இதுதான், வேறுபாடுகளைக் களைந்த பெண்ணிய அமைப்புகளை வர்க்கம் கடந்து முன்வைக்கின்றனர்.


வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க எல்லை தாண்டாத நிலையில், வர்க்கம் கடந்த போராட்டம் நடத்த வேண்டும் என்பது நஞ்சுத்தனமான ஆணாதிக்க முன்மொழிவாகும். பெண்விடுதலையைக் கோரிப் போராடும் போது ஆணாதிக்க சுரண்டலை இனம் கண்டு அதற்கு எதிராக வர்க்க எல்லைக்குள் போராடுவதன் மூலம், எந்த வர்க்கம் பெண் ஒடுக்குமுறையின் காரணமாக யதார்த்தத்தில் நடைமுறையில் உள்ளதோ, அதை ஒழித்துக் கட்ட நடைமுறையில் போராடுகின்றது.


நாம் இந்தப் பெண்ணியவாத ஆணாதிக்கவாதிகளின் அடுத்த கூற்றைப் பார்ப்போம். "ஏனைய பல இசம்கள் தரமுடியாததைப் பெண்ணியவாதம் தரமுடியும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகின்றோம். இவற்றில் அநேகமானவை மனித குலத்தின் பாதியை மறந்தன அல்லது புறக்கணித்தன" என்று தமது ஆணாதிக்க இஸத்தை முன்வைக்கின்றனர். இந்த ஆணாதிக்க இசத்தைப் பார்ப்போம்.


பெண்ணியவாதம் எப்படி தனியாக ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டும் எனக்கூற முடியாத வார்த்தைப் புரட்சிதான், ஆணாதிக்க இஸமாக வெளிவருகின்றது. பெண்ணியவாதம் எப்படி எங்கிருந்து சமுதாயத்துக்குள் புகுந்துகொண்டது? ஆணாதிக்கச் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் மீதான ஒடுக்கு முறைகளின் மீது பிறக்கும் போராட்டம், அதன் இருப்புகளைக் கேள்விக்குள்ளாக்குவதன் ஊடாக, அதற்கு எதிரான போராட்டத்தில் மட்டும்தான் பெண்ணியவாதம் இருக்கமுடியும். இதை முன்வைக்காத பெண்ணியவாதம் உண்மையில் ஆணாதிக்கப் பெண்ணியவாதமாக உள்ளது. மற்றைய இசங்கள் தரமுடியாததைப் பெண்ணியவாதம் தரமுடியும் என்கிற போது, எதைக் குறித்த தாக்குதலாக வெளிவருகின்றது என்பதை ஆராய்வோம்.


பெண் விடுதலையை முன்வைத்த ஒரே கோட்பாடு மார்க்சியமாக உள்ளது. மற்ற எல்லாப் பெண்களுக்குச் சலுகைகளைக் கோரினவே ஒழிய பெண் விடுதலையை அதன் தொடக்க (ஆரம்ப) ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கோரவில்லை. அத்துடன் பெண்ணியவாதம் எங்கும் எந்தப் பிரிவும் தனித்துவமான கோட்பாட்டை மற்றவற்றில் இருந்து சுயமாக வைத்ததில்லை. வைக்காத நிலையில் வம்பளப்பதற்குப் பின்னால் உண்மையில் பாதுகாக்க முனைவது பூர்சுவா கோட்பாடுகளையே. மார்க்சியம் அதை விமர்சித்து அதன் பூர்சுவாத்தனத்தை அம்பலப்படுத்தும் போது, அது தனித்துவமான பெண்களின் பெண்ணியக் கோட்பாடு என புலம்புவதும், பாதுகாக்க முனையும் போது எழுவதே, இந்தத் தனித்துவச் சுதந்திரமான பெண்ணியல் கோஷங்கள் கோட்பாடுகள்.


மார்க்சியம் சரிபாதி பெண்களின் விடுதலையைப் பேசவில்லை என்று மறைமுகமாகக் கூற முனைவது சுரண்டல் வர்க்கத்தைப் பாதுகாக்க முனையும் போக்கில், பூர்சுவா வர்க்கக் கோட்பாட்டில் பெண் விடுதலை என்ற பெயரில் முன்வைக்கும் ஆணாதிக்க நனவுகளில் முளைத்தெழுகின்றது.


மார்க்சியம் மட்டும்தான் பெண்விடுதலையைச் சரியாக இனம்காட்டுவதன் ஊடாக, அதை ஏற்றுக் கொண்ட பெண்கள் அமைப்பு மட்டும்தான் பெண்ணியவாத நிலைப்பாட்டில் மிகச்சரியாகவும், ஆராய்ந்தும் போராடுகின்றது. ஏனெனின் பெண் ஒடுக்குமுறை ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாய விளைவுகளாக உள்ளதால் அதை எதிர்த்துப் போராட்டத்துக்கு வெளியில் பெண் விடுதலை சாத்தியமில்லை. இதற்கு வெளியில் பெண்ணியவாத இசங்கள் எல்லாம் சுரண்டல் சமுதாயத்தைக் கேள்விக்குள்ளாக்கி போராடாத சமரசச் சலுகைக்காக, ஆணாதிக்கச் சமூகத்திடம் கையேந்துகின்றன.


மார்க்சியம் மட்டும்தான் சமுதாயத்தின் எல்லா முரண்பாடுகள் மீதும் முரண்நிலையின்றி பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக, நியாயமாக யதார்த்தத்தில் நடைமுறையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரேயொரு தத்துவமாக, போராட்ட அமைப்பாக உள்ளது. இதை யாராலும் மறுக்கமுடியாது.