Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் கூவாய் கருங்குயிலே

கூவாய் கருங்குயிலே

  • PDF

எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே!

கன்னடம் தெலுங்குமலை யாளம் களிதுளுவம்
முன்னடைந்தும் மூவாது மூள்பகைக்கும் சோராது
மன்னும் தமிழ்தான்இவ் வையத்தை யாள்கஎனக்
கன்னற் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!

வராதெனச் சொன்னாரும் வருந்தத்தன் ஆட்சி
இராத இடமில்லை என்றநிலை நாட்டத்
திராவிட நாடு சிறைநீங்க என்று
குரலே முரசாகக் கூவாய் கருங்குயிலே!

உண்ணல் உடுத்தல் உயிர்த்தல்எனச் செந்தமிழை
நண்ணலும் ஆம்என்று நாட்டுக; வேறுமொழி
எண்ணல் நிறுவல் இலாதுகல்வி கட்டாயம்
பண்ணல் பயன்என்று கூவாய் கருங்குயிலே!

செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!

இளைஞர் துடிக்கின்றார் தமிழின் நிலைஎண்ணிக்
கிளைஞர் அடைகின்ற கேடுபொறார் இங்கு
விளையாட வேண்டாமே ஆளவந்தார்! வாழ்வின்
களைநீக் குகஎன்று கூவாய் கருங்குயிலே!

பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும்
ஆலோடு வேர்என் றறிந்திருந்தும் ஆளவந்தார்
மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி
சாலோடு நீர்என்று சாற்றாய் கருங்குயிலே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt240