Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

வானம்பாடி

  • PDF

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?

வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்,

நீநம்பாய் என்று நிமிர்ந்தஎன் கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்.

உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே யிருப்பாய்! பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண் டேயிருப்பார் தென்பாங்கை உன்பால்!

அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt206