Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் இளம் அரசியல் ஊழியர்களுக்கு

இளம் அரசியல் ஊழியர்களுக்கு

  • PDF

(1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே ஒருவிதமான சமரசம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காற்று வாக்கில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த ஆவணத்தின் மூலம், பகத்சிங், எந்த சமயத்தில் சமரசத்தை அனுமதிக்கலாம், எப்போது அனுமதிக்கக் கூடாது என்று விளக்கினார். அவர் மேலும், காங்கிரஸ் இயக்கத்தை நடத்திய விதம், அப்படிப்பட்டதோர் சமரசத்தில் முடிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதினார். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை - விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிடும்படியும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்த்திடும்படியும் அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் போட்டோ நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.)

பெறுநர்
இளம் அரசியல் ஊழியர்கள்.

அன்புத் தோழர்களே,

நமது இயக்கம், தற்சமயம் மிக முக்கியமானதொரு கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு கால கடும் போராட்டத்திற்குப் பின்னர், வட்ட மேசை மாநாட்டின் மூலம் அரசியலமைப்புச் சட்டத் சீர்திருத்தங்கள் தொடர்பாக சில தெளிவான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்கள் இயக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இதற்கு ஆதரவாக முடிவெடுக்கிறார்களா அல்லது எதிராக முடிவெடுக்கிறார்களா என்பது நமக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஏதோ ஒரு வழியில் சமரசத்தில் தான்முடியும். கட்டாயம் ஏதாவது ஒரு சமயத்தில் சமரசம் செய்து கொள்ளப்படலாம்.சமரசம் என்பது பொதுவாக நாம் நினைப்பது போல் பழிப்பிற்கும் பரிதாபத்திற்கும் உரியது அல்ல. இன்னும் சரியாகச் சொன்னால், அரசியல் போர்த்தந்திர நடவடிக்கைகளில் சமரசம் என்பது தவிர்க்க முடியாத காரணியாகும். எந்தத் தேசத்திலும் அடக்கு முறையாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இயக்கங்கள் ஆரம்பத்தில் தோல்வியுறும், மத்திய காலங்களில் சமரசங்களின் மூலம் சிறிதளவு சீர்திருத்தங்களைப் பெறும். இறுதிக் கட்டத்திலேயே - நாட்டின் அனைத்து சக்திகளையும் வாய்ப்பு வளங்களையும் முழுமையாக ஒருங்கிணைத்து - அரசாங்க எந்திரத்தைத் தகர்த்தெறிவதில் வெற்றி அடையக்கூடிய கடைசி அடியை அதனால் கொடுக்க முடியும். அப்போதும் கூட அது தோல்வியடையலாம். அதன் காரணமாக, ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகலாம். இதனை ரஷ்ய உதாரணத்தின் மூலம் சிறப்பாக விளக்க முடியும்.ரஷ்யாவில் 1905ம் ஆண்டில் புரட்சி இயக்கம் வெடித்தது. எல்லாத் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தனர். வெளிநாட்டில் தலைமறைவாய் இருந்த லெனின் நாடு திரும்பினார். அவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மக்கள் அவரிடம் வந்து, பன்னிரண்டு நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டனர் என்றும், அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இருந்த அவர்களது மாளிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் கூறினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் லெனின் அப்போது அவர்களிடம், ‘திரும்பிச் செல்லுங்கள், 1200 நிலப்பிரபுக்களைக் கொல்லுங்கள், அவர்களது அரண்மனைகளையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கொளுத்துங்கள்’ என்றார்.அவரது மதிப்பீட்டில், ஒரு வேளை புரட்சி தோல்வியடைந்தாலும் அது ஏதோனுமொரு விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதாகும்.ரஷ்ய பாராளுமன்றமான டூமா அறிமுகப்படுத்தப்பட்டது. அதே லெனின் ரஷ்ய பாராளுமன்றமான டூமாவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து நின்றார். 1907ல் இது நடந்தது. ஆனால் 1906ல் அவர் முதல் டூமாவில் பங்கெடுப்பதை எதிர்த்தார். காரணம், அப்போது அப்போது அதன் உரிமைகள் வெட்டிக் குறைக்கப்பட்டிருந்தன. சூழ்நிலைகள் மாறியிருந்ததுதான் அதற்குக் காரணம். அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. லெனின் டூமாவைப் பயன்படுத்தி. சமூகப் பிரச்சனைகளை விவாதிக்கும் மேடையாக மாற்றத் திட்டமிட்டிருந்தார். மீண்டும் 1917 புரட்சியின்போது, மறுபடியும், 1917 புரட்சிக்குப் பின்னர், பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் (சமாதான) உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு போல்ஷ்விக்குகள் நிர்பந்திக்கப்பட்டபோது, லெனினைத் தவிர மற்ற அனைவருமே அதனை எதிர்த்தனர். ஆனால் லெனின், “ ‘சமாதானம்’, ‘சமாதானம்’, மீண்டும் ‘சமாதானம்’ வேண்டும். என்ன விலைகொடுத்தேனும் சமாதானம் - ரஷ்யாவின் பல மாகாணங்களை ஜெர்மன் யுத்தப் பிரபுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தாலும், சமாதானம் வேண்டும்’’ என்றார். அப்போது சில போல்ஷ்விக் எதிர்ப்பாளர்கள் இந்த உடன்படிக்கைக்காக லெனினைத் தூற்றியபோது, லெனின், “ஜெர்மனியின் கடுந்தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் போல்ஷ்விக்குகள் இல்லை. எனவே, அவர்கள் போல்ஷ்விக் அரசாங்கம் முற்றாக அழித்தொழிக்கப் படுவதற்குப் பதிலாக, உடன்படிக்கையை தேர்ந்தெடுத்தனர்’’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், சமரசம் என்பது, போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் இடையிடையே பிரயோகிக்கப்படவேண்டிய இன்றியமையாத ஆயுதமேயாகும். ஆனால், எதற்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோமோ அதன் லட்சியம் குறித்தும், அதில் நாம் எய்தியுள்ள சாதனைகளின் அளவு குறித்தும் சரியாகக் கணித்திட வேண்டும். இதனை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இயக்கம் பற்றிய எண்ணமே. எதனை அடைவதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோமோ அந்த இலக்கைக் குறித்த தெளிவான கொள்கையை நாம் எப்போதும் அழியாமற் காத்து வரவேண்டும். அதுவே, நமது இயக்கத்தின் வெற்றி, தோல்வியை சரிபார்ப்பதற்கு நமக்கு உதவும். நமது எதிர்கால செயல் திட்டத்தையும் நம்மால் எளிதாக வகுக்க முடியும். திலகருடைய கொள்கை- அவரது குறிக்கோள் நீங்கலான அவரது கொள்கை, அதாவது அவரது போர்த் தந்திரம் சிறப்பானது. உன்னுடைய எதிரியிடமிருந்து பதினாறு அணாக்களைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறாய். ஒரேயரு அணா மட்டுமே உனக்குக் கிடைக்கிறது. அதை வாங்கிக் கொள், மீதமுள்ள அவர்களுக்காகப் போராடு. மிதவாதிகளின் இலக்கில் நாம் என்ன பார்க்கிறோம். அவர்கள் ஒரு அணாவை அடைவதில் இருந்து துவங்குகின்றனர். அதையும் கூட அவர்களால் பெற முடிவதில்லை. புரட்சியாளர்கள் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டியது, அவர்கள் முழுமையான புரட்சி ஒன்றுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை. முழுமையான ஆட்சியதிகாரம் அவர்கள் கைகளில் இருக்க வேண்டும். சமசரங்கள் அவர்களுக்கு பேரச்சம் தரத்தக்கவை. ஏனென்றால், சமரசத்திற்குப் பின்னர் பழமைவாதிகள் புரட்சிகர சக்திகளை சீர்குலைக்க முயல்கின்றனர். ஆனால், திறமையும் துணிவும் மிக்க புரட்சிகரத் தலைவர்களால் அத்தகைய படுகுழிகளில் இருந்து இயக்கத்தை காப்பாற்ற முடியும். அத்தகயை வேளைகளில் உண்மையான பிரச்சனைகளில் - சிறப்பாக குறிக்கோளில் எவ்வகையான குழப்பமும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரிட்டீஷ் தொழிலாளர் தலைவர்கள் உண்மையான போராட்டத்திற்கு துரோகமிழைத்து விட்டு கபடவேடமிடும் ஏகாதிபத்தியவாதிகளாக சீரழிந்து விட்டனர். எனது எண்ணத்தில், இந்த நாளுக்கான ஏகாதிபத்திய தொழிலாளர் தலைவர்களை விட கடும் பிறபோக்காளர்கள் நமக்கு மேலானவர்களே.செயல்தந்திரம் மற்றும் போர்த் தந்திரம் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒருவர் லெனினது வாழ்நாள் படைப்புகளைப் படிக்க வேண்டும். சமரசம் என்பது பற்றிய அவரது திட்டவட்டமான கருத்தை “இடதுசாரி கம்யூனிசம்’’ எனும் நூலில் காணலாம். தற்போதைய இயக்கம், அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஏதோ ஒருவகை சமரசத்தில் அல்லது முழுமையான தோல்வியில் தான் முடிவடையும் என்று நான் சொல்கிறேன்.எனது எண்ணத்தில், இந்த முறை போராட்டக் களத்தினுள் உண்மையான புரட்சிகர சக்திகள் கொண்டுவரப்படவில்லை என்பதாலேயே இதை நான் சொல்கிறேன். இது, மத்தியதர வர்க்க வணிகர்களையும் ஒரு சில முதலாளிகளையும் சார்ந்திருக்கும் போராட்டமாகவே இருக்கிறது. இந்த இரண்டு வர்க்கங்களுமே, அதிலும் குறிப்பாக முதலாளி வர்க்கம் எந்தவொரு போராட்டத்திலும் தனது சொத்துக்களுக்கோ உடைமைகளுக்கோ ஆபத்து நேர்வதற்கு ஒருபோதும் துணிய மாட்டார்கள். உண்மையான புரட்சிகர இராணுவத்தினர் கிராமங்களிலும் தொழிற் சாலைகளிலுமே உள்ளனர். விவசாயிகளும் தொழிலாளர்களுமே அவர்கள். ஆனால், நமது முதலாளித்துவ தலைவர்களுக்கோ, அவர்களை சமாளிப் பதற்குரிய துணிச்சல் கிடையாது. அவர்களால் அது முடியும் செய்யாது. உறங்கிக் கொண்டிருக்கும் அந்த சிங்கத்தை அதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து தட்டியெழுப்பிவிட்டால், நமது தலைவர்கள் அடையக் கருதிய இலக்கை அடைந்த பின்னரும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.அஹமதாபாத் தொழிலாளர்களுடன் தனக்கு ஏற¢பட்ட முதல் அனுபவத்திற்குப் பின்னர் மகாத்மா காந்தி அறிவித்து விட்டார். “நாம் தொழிலாளர்களை (விடுதலை போராட்டத்தினுள்) திருப்பி விடக்கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துவது அபாயகரமானது’’ (தி டைம்ஸ், மே,1921). அப்போதிருந்து இதுவரையிலும் தொழிலாளர்களை அணுவதற்கு அவர்கள் ஒருபோதும் துணியவில்லை. எஞ்சியிருப்பது விவசாயிகள். அந்நிய நாட்டின் மேலாதிக்கத்தை மட்டுமல்லாது, நிலபிரபுக்களின் நுகத்தடியையும் உதறித் தள்ளுவதற்காய் எழுந்த மாபெரும் விவசாய வர்க்க எழுச்சியைக் கண்டபோது இத்தலைவர்கள் அடைந்த பீதியை 1922ம் ஆண்டு பரதோலி தீர்மானம் தெள்ளத் தெளிவாகவே காட்டுகிறது. அங்குதான், நமது தலைவர்கள், விவசாயிகளிடம் சரணடைவதை விட பிரிட்டீஷாரிடம் சரணடைவதைத் தேர்வு செய்தனர்.பண்டிட் ஜவஹர்லால் நேருவை விட்டு விடுங்கள். விவசாயிகளையோ தொழிலாளர்களையோ அணிதிரட்டுவதற்கு ஏதேனும் முயற்சி செய்த தலைவர்கள் யாரையாவது காட்ட முடியுமா உங்களால்? இல்லை. அவர்கள், வரும் அபாயத்தை துணிந்து ஏற்றுக்கொண்டு செயலில் இறங்க மாட்டார்கள். அங்குதான் அவர்களின் குறைபாடே உள்ளது. அதனால் தான் நான் சொல்கிறேன். அவர்கள் ஒருபோதும் முழுமையானதொரு புரட்சியை மனதிற் கொண்டிருக்கவில்லை. பொருளாதார, நிர்வாக நெருக்கடிகளின் மூலம் இந்திய முதலாளிகளுக்கு மேலும் சில சீர்திருத்தங்களை, மேலும் சில சலுகைகளை பெற்றுவிட முடியும் என்றே அவர்கள் நம்புகின்றனர். அதனால் தான் ஏதேனும் ஒருவகை சமரசத்திற்குப் பின்னரோ அல்லது அதுவும் இல்லாமலேயோ இந்தப் போராட்டத்தின் அழிவு ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒன்று என்கிறேன்.“புரட்சி நீடூழி வாழ்க’’ என்று அனைத்து நேர்மையுடனும் முழக்கமிடும் இளம் தொண்டர்களோ (விடுதலை) இயக்கத்தை தாங்களே முன்னெடுத்துச் செல்லுமளவிற்கு நன்கு ஒருங்கிணைக்கப்பட்டவர்களாகவும் இல்லை, போதுமான பலத்துடனும் இல்லை. நிகழ்வுகளை நோக்குமிடத்து நமது மாபெரும் தலைவர்களுக்கும் கூட ஏதாவது ஒரு பொறுப்பை தங்களது தோள் மேல் ஏற்றுக் கொள்ளும் துணிவு இல்லை. ஒருவேளை பண்டிட் மோதிலால் நேரு இதற்கு விலக்காக இருக்கலாம். அதனாலேயே நமது தலைவர்கள் காந்தியின் முன்பு நிபந்தனையின்றி சரணடைகின்றனர். தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலுங்கூட அவர்கள் ஒருபோதும் காந்தியை முனைப்போடு எதிர்ப்பதில்லை. மகாத்மாவிற்காகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.இச்சூழ்நிலைகளில், முழுமனதோடு ஒரு புரட்சியை மனதிற் கொண்டிருக்கும் நேர்மையான இளம் தொண்டர்களுக்கு கடும் சோத¬க் காலம் வந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறேன். குழப்பமடையாமலும் சோர்வடையாமலும் இருங்கள். மகாத்மா காந்தியின் இரண்டு போராட்டங்களின் மூலம் பெற்ற அனுபவத்திற்குப் பிறகு, நம்முடைய தற்போதைய நிலைமை பற்றியும் எதிர்கால செயல்திட்டம் பற்றியும் ஒரு தெளிவான கொள்கையை உருவாக்குவதில் முன்னிலும் மேலானதொரு நிலையில் நாம் இருக்கிறோம்.இப்போது, நிகழ்வுகளை எளிமையான முறையில் எடுத்துச் சொல்ல என்னை அனுமதியுங்கள். “புரட்சி நீடூழி வாழ்க’’ என்று நீங்கள் முழக்கமிடுகிறீர்கள். அதன் உண்மையான அர்த்தத்தையே மனதிற் கொண்டுள்ளீர்கள் என்று நான் ஊகித்துக் கொள்கிறேன். சட்டமன்ற வெடிகுண்டு வழக்கில் எங்களது பதிலறிக்கையில் கூறியதைப்போல அவ்வார்த்தைக்கான நமது வரையறையின்படி, புரட்சி என்பது, தற்போது நடப்பிலுள்ள சமுதாய ஒழுங்கமைப்பை முற்றாக தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் சோசலிச சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதையே குறிக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே நமது உடனடியாக குறிக்கோள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக உள்ளது. ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்குமான ஆயுதமாகவே இந்த அரசும் அரசு இயந்திரமும் ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கிறது. நாம் அதனை பறிப்பதற்கும், நமது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு அதாவது ஓர் புதிய அடிப்படையில் - மார்க்சிய அடிப்படையில் சமுதாயத்தை மீட்டமைப்பதற்கு பயன்படும் வகையில் அதனை கையாள்வதற்கும் விரும்புகிறோம். இந்த நோக்கத்திற்காகவே, அரசாங்க இயந்திரத்தை கைப்பற்றுவதற்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆரம்பம் முதல் முடிவு வரையிலும் நாம் மக்களை பயிற்றுவிக்கவும், நமது சமுதாய வேலைத் திட்டத்திற்கு சாதகமானதொரு சூழலை உருவாக்கவும் வேண்டும். போராட்டங்களின் வாயிலாகவே அவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளிக்கவும் பயிற்றுவிக்கவும் முடியும்.இந்த விஷயங்கள், நமக்கு தெளிவாகிவிட்டன. அதாவது நமது உடனடி மற்றும் இறுதி இலக்கு தெளிவாக முன்வைக்ப்பட்டு விட்டது. இப்பொழுது தற்போதுள்ள சூழ்நிலையை நாம் ஆராயத் துவங்குவோம். எந்தவொரு சூழ்நிலையை பகுத்தாராயும் பொழுதும் நாம் மெய்யாகவே நேர்மையானவர்களாகவும் முற்றிலும் காரிய நோக்குமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.இந்திய அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்கேற்பது குறித்தும் அதன் பொறுப்புக்களை இந்தியர்கள் பகிர்ந்து கொள்வது குறித்தும் பெருங் கூக்குரல் எழுப்பப்பட்டது. அதன் காரணத்தால் ஆலோசனை கலக்கும் உரிமைகள் மட்டுமே கொண்ட வைஸ்ராயின் ஆலோசனைக்குழு ஒன்றுஏற்பட வழிவகுத்த மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியர்களின் உதவி அதிகமாய் தேவைப்பட்ட உலகப் போரினிடையே தன்னாட்சி குறித்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. நடப்பிலுள்ள சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வரம்பிற்குட்பட்ட சட்டமியற்றும்அதிகாரங்கள் சட்டமன்றத்திற்கு அளிக்கப்பட்டன. ஆனால் அந்த அதிகாரங்களும் வைஸ்ராயின் விருப்பத்திற்கு உட்பட்டவையே. தற்போது மூன்றாவது சட்டம்.தற்போதும் சீர்திருத்தங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெகு சீக்கிரதத்தில அவை அறிமுகப்படத்தப்பட்டுவிடும். நமது இளைஞர்கள் அவற்றை எவ்வாறு மதிப்பிட வேண்டும்? இதுவே கேள்வி. எந்த அளவுகோளின்படி காங்கிரஸ் தலைவர்கள் அவற்றை மதிப்பிடப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் புரட்சியாளர்களாகிய நமக்கு பின்வரும் அளவுகோல்கள் உள்ளன :1. இந்தியர்களின் தோள்களுக்கு மாற்றியளிக்கப்படும் பொறுப்பின் அளவு2. அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அரசாங்க நிறுவனங்களின் வடிவம் மற்றும் அதில் பங்கெடுப்பதற்கு மக்களுக்கு வழங்கப்படும் உரிமையின் எல்லை3. வருங்கால வாய்ப்புகளும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளும்.இவற்றிற்கு மேலும் சிறிது விளக்கம் தேவைப்படலாம். முதலில், நிர்வாகத்துறையின் மீது நமது பிரதிநிதிகளுக்கு இருக்கும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைககொண்டு நமது பிரதிநிதிகளுக்கு இருக்கும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டு நமது மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பின் அளவை நாம் எளிதாக மதிப்பிட்டு விடலாம். இப்போது வரைக்கும் சட்டமன்றத்திற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக நிர்வாகத் துறையினர் ஒருபோதும் ஆக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் அனைத்து முயற்சிகளையும் பயனற்றதாகவும் ரத்து அதிகாரம் வைஸ்ராய்க்கு இருக்கிறது. இந்த அசாதாரணமான அதிகாரத்தை, தேசியப் பிரதிநிதிகளின் மதிப்புமிக்க தீர்மானங்களை வெட்கமின்றி காலில் போட்டு மிதிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு வைஸ்ராயை உள்ளாக்கிய சுயராஜ்யக் கட்சியினரின் முயற்சிகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் அதிக விவாதம் தேவை இல்லை - இது ஏற்கனவே மிகவும் நன்கறியப்பட்ட ஒன்றுதான்.இப்போது நாம் முதலிடத்தில் நிர்வாக அமைப்பு முறையைப் பார்க்க வேண்டும். நிர்வாகத்துறை மக்கள் மன்றத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதாய் இருக்குமா அல்லது முன்னைப் போலவே மேலிருந்து திணிக்கப்படுவதாய் இருக்குமா? மேலும், அது மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டதாக இருக்குமா அல்லது கடந்த காலங்களில் நடப்பதைப் போல அதனை முழுமையாக அவமதிக்கப் போகிறதா?இரண்டாவது இனத்தைப் பொறுத்தவரை, வாக்குரிமையின் அளவெல்லையின் மூலம் தாம் அதனை மதிப்பிடலாம். ஒருவரை வாக்களிக்கத் தகுதியானவராக்குவதற்கு இருக்கும் சொத்துத் தகுதிகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அனைத்து மக்களுக்குமான பொது வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். வயது வந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வாக்குரிமை பெற்றிருக்க வேண்டும். தற்சமயம் எவ்வளவு தூரத்திற்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் எளிதாகக் காணலாம்.வடிவம் சம்பந்தப்பட்டவரை, நாம் இரண்டு அவைகளைக் கொண்ட அரசாங்கத்தை வைத்துள்ளோம். எனது கருத்துப்படி மேலவை என்பது முதலாளித்துவ போலித்தனம் அல்லது சூழ்ச்சியே. ஒரேயரு அவையைக் கொண்ட அரசாங்கமே நாம் எதிர்பார்க்கக் கூடிய சிறந்த ஒன்றாக இருக்கும் என்று நான் சொல்கிறேன்.மகாண சுயாட்சி பற்றி இங்கே நான் ஒன்றைக் குறிப்பிடலாம். ஆனால் நான் கேள்விப்பட்டவற்றிலிருந்து, சட்டமன்றத்திற்கும் மேலான, உயர்ந்த அசாதாரண அதிகாரங்களுடன் மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர், ஒரு கொடுங்கோலர் என்பதையே காட்டுகிறது என்று மட்டுமே என்னால் கூறமுடியும். நாம் இதனை மாகாண சுயாட்சி என்று அழைப்பதை விட மாகாண கொடுங்கோலாட்சி என்று அழைப்பதே சிறந்தது. அரசு நிறுவனங்களை ஜனநாயக மயப்படுத்துவதில் இது ஒரு விசித்திரமான வகை.மூன்றாவது இனம் முற்றிலும் தெளிவானது. பிரிட்டிஷாரின் கஜானா காலியாகும் வரைக்கும் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இன்னொரு பகுதி சீர்திருத்தங்கள் வழங்கப்படும் என்ற மாண்டேகுவின் வாக்குறுதியை குலைப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசியல் வாதிகள் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.வருங்காலம் குறித்து அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று நாம் பார்க்கலாம்.சாதனைகளைக் கண்டுபூரித்துப் போவதற்காக நாம் இந்த விஷயங்களை ஆராயவில்லை. மாறாக, மக்களை அறியாமையிலிருந்து விடுவிப்பதற்காகவும் அடுத்த கட்ட போராட்டத்திற்கு அவர்களை தயார்படுத்துவதற்காகவும் நமது சூழ்நிலை பற்றிய தெளிவான கொள்கையை வகுப்பதற்கே இந்த விஷயங்களை ஆராய்கிறேன் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். நமக்கு சமரசம் என்பது ஓரடி முன்னேற்றத்தையும் சிறிது ஓய்வையும் குறிக்குமேயழிய, அது ஒருபோதும் சரணாகதியைக் குறிக்காது. அவ்வளவு தான் : வேறொன்றுமில்லை.
தற்போதைய சூழ்நிலையை விவாதித்துவிட்டோம். இனி நமது எதிர்கால செயல் திட்டத்தையும் நாம் கைக்கொள்ள வேண்டிய செயல்வழியையும் விவாதிக்கத் துவங்குவோம்.நான் ஏற்கனவே கூறியதுபோல் எந்தவொரு புரட்சிகரக் கட்சிக்கும் ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் மிகவும் இன்றியமையாததாகும். இதற்கு, புரட்சி என்றால் அது செயல்பாட்டையே குறிக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அது, ஒருங்கிணைக்கப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட வேலையின் மூலம் திட்டமிட்டு கொண்டு வரப்படக் கூடிய ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றது. அது, திடீரென்ற- ஒருங்கிணைப்பற்ற அல்லது தன்னியல்பான மாற்றத்திற்கு அல்லது சீர்குலைவிற்கு எதிரானது. ஒரு செயல் திட்டத்தை வகுப்பதற்கு ஒருவர் கண்டிப்பாக.1. இலக்கு2. எந்த இடத்திலிருந்து நாம் தொடங்க வேண்டும், அதாவது தற்சமயம் நிலவும் சூழ்நிலை.3. செயல்வழி, அதாவது வழி வகையும் வழி முறையும்.-ஆகியவற்றைப் பற்றி ஆராய வேண்டும். இந்த மூன்று காரணிகளைப் பற்றிய தெளிவானதொரு கோட்பாட்டை ஒருவர் கொண்டிருக்காவிடில் செயல்திட்டம் பற்றி எதையுமே அவரால் விதிக்க முடியாது.தற்போதை சூழ்நிலையை ஓரளவிற்கு நாம் விவாதித்து விட்டோம். இலக்கு பற்றியும் லேசாகத் தொட்டுள்ளோம். நாம் ஒரு சோசலிசப் புரட்சியை வேண்டுகிறோம். இதுவே நாம் வேண்டுவது. அரசியல் புரட்சி என்பது பிரிட்டிஷாரின் கைகளில் இருந்து இந்தியர்களின் கைகளுக்கு அரசை மாற்றுவதை (இன்னும் கொச்சையாகச் சொன்னால் அதிகாரத்தை மாற்றுவதை) (பொதுப்படையாக) குறிக்கவில்லை. மாறாக, இறுதி இலக்கைப் பொறுத்த நம்முடன் உடன்பாடுடைய இந்தியர்களின் கைகளுக்கு அல்லது இன்னமும் துல்லியமாக புரட்சிகரக் கட்சிக்கு மக்களின் பேராதரவின் மூலம் அதிகாரம் மாற்றப்படுவதையே குறிக்கின்றது. அதற்குப் பிறகு (பிரட்சிகரக் கட்சிக்கு அதிகாரம் மாற்றப்பட்ட பிறகு) தயங்காமல் மனப்பூர்வமாக தொடர்ந்து செயல்படுவது என்பது, சமுதாயம் முழுவதையும் சோசலிசத்தின் அடிப்படையில் புனர் நிர்மாணம் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகவே இருக்கும். இந்த புரட்சியை நீங்கள் குறிக்கவில்லை என்றால், தயவு செய்து “புரட்சி நீடூழிவாழ்க’’ என்று முழங்குவதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் புரட்சி எனும் வார்த்தை எங்களுக்கு மிகவும் புனிதமானது. இவ்வாறு விளையாட்டுத் தனமாக பிரயோகம் செய்யப்படுவதற்கு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு - அது உகந்ததல்ல.அவ்வாறின்றி தேசியப் புரட்சிக்காகவே நீங்கள் இருப்பதாகவும் உங்களது போராட்டத்தின் இலக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்ற வகையானதொரு இந்தியக் குடியரசை அமைப்பதே என்றும் நீங்கள் சொல்வீர்களேயானால், அந்தப் புரட்சியை சாதிப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடியது என்று எந்த சக்திகளை நம்பியிருக்கிறீர்கள் என்பதை தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள் என்று நான் கேட்கிறேன். எந்தவொரு புரட்சியை சாதிக்க வேண்டுமானாலும் - அது தேசியப் புரட்சியோ சோசலிசப் புரட்சியோ எதுவானாலும்- நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுதியான சக்திகள் விவசாயிகளும் தொழிலாளர்களும் மட்டுமே. அந்த சக்திகளைத் திரட்டும் துணிவு காங்கிரஸ் தலைவர்களுக்குக் கிடையாது. இந்த இயக்கத்தில் அதை நீங்கள் பார்த்தீர்கள். இந்த சக்திகள் உடனில்லாவிட்டால் அவர்கள் முழுமையான நிராதரவானவர்கள் என்பது மற்ற எவரையும் விட அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பூரண சுயராஜ்யம் என்று- அது உண்மையில் ஒரு புரட்சியையே குறிக்கிறது- அவர்கள் தீர்மானம் நிறைவேற்றும் போது அவர்கள் அதையே மனதிற் கொண்டிருக்கிவல்லை. இளைஞர்களின் நெருக்கடியின் காரணமாகவே அத்தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதன் பின்னர் அவர்களது மனதிற்குள்ளிருந்த ஆசையாகிய டொமினியன் அந்தஸ்தைப் பெறுவதற்கு ஓர் அச்சுறுத்தலாக அத்தீர்மானத்தைப் பயன்படுத்த விரும்பினர். கடைசிமூன்று காங்கிரஸ் மாநாடுகளின் தீர்மானங்களை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் இதனை நீங்கள் எளிதாக முடிவு செய்யலாம். சென்னை, கல்கத்தா, மற்றும் லாகூர் மாநாடுகளையே நான் குறிப்பிடுகிறேன். கல்கத்தா மாநாட்டில், பன்னிரெண்டு மாதங்களுக்குள் டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தங்களது இலக்காக பூரண சுயராஜ்யத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அத்தகையதொரு வரத்திற்காக முழுமையான பயபக்தியுடன் 1929 டிசம்பர் 31ம் நாள் நள்ளிரவு வரை காத்திருந்தார்கள்.அதன் பின் தங்களது நேர்மையை முன்னிட்டு சுயராஜ்யத் தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். இல்லாவிட்டால் அவர்கள் அதனை எண்ணியிருக்கவே மாட்டார்கள். ஆனால் அப்போதும் கூட (சமரத்திற்கான) கதவுகள் திறந்திருப்பதை மகாத்மாஜி ஒளிவுமறைவாக வைத்திருக்கவில்லை. அதுவே அவர்களது உண்மையான மனப்பாங்கு. தங்களது இயக்கம் ஏதோவொரு சமரசத்தில் தான் போய் முடியும் என்று ஆரம்பத்திலேயே அவர்களுக்குத் தெரியும். நாங்கள் வெறுப்பது இந்த அரைமனதான தன்மையையே அன்றி, போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் செய்யப்படும் சமரசத்தை அல்ல.எப்படியிருந்தாலும், ஒரு புரட்சிக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகளைப் பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்முனைப்புள்ள ஆதரவை திரட்டுவதற்காக அவர்களை நாங்கள் அணுகுவோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உணர்ச்சிகரமான பசப்பு வார்த்தைகள் எதற்கும் அவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அப்பழுக்கற்ற நேர்மையோடு அவர்கள் உங்களைக் கேட்பார்கள். எதற்காக அவர்களது தியாகங்களை கோருகின்றீர்களோ அப்புரட்சியின் மூலம் அவர்கள் அடையப் போகும் பலன் என்ன? இந்திய அரசாங்கத்தின் ஆட்சித் தலைவராக ரீடிங் பிரபு இருந்தாலும் சர்.புருஷோதம் தாஸ் தாகூர் தாஸ் இருந்தாலும் அவர்களிடத்தில் என்ன மாற்றத்தை இது ஏற்படுத்தும்? ஒருவேளை இர்வின் பிரபுவின் இடத்தில் சர்.தேஜ் பகதூர் சாப்ரூ வைக்கப் படுவாராயின் ஒரு விவசாயியைப் பொறுத்தவரை அதில் என்ன வேறுபாடு இருக்கும்? அவரது தேசிய உணர்வுக்கு வேண்டுகோள் விடுப்பது பயனற்றது. உங்களது காரியத்திற்காக அவரை நீங்கள் பயன்படுத்த முடியாது. அந்தப் புரட்சியானது அவருக்கானதாகவும் அவருடைய நன்மைக்கானதாகவும் இருக்கப் போகின்றது என்பதில் நீங்கள் முழுமனதோடு குறிக் கொண்டிருக்க வேண்டும், அதனை அவருக்கு உணர்த்தவும் வேண்டும், தொழிலாளர்களுக்கான தொழிலாளர் களின் புரட்சி.உங்களது இலக்குகள் பற்றிய இந்த தெளிவான கொள்கையை நீங்கள் உருவாக்கிக் கொண்டதையடுத்து, உடனடியாக அத்தகையதொரு நடவடிக்கைக்காக உங்களது சக்திகளை முழுமனதோடு ஒன்று திரட்டத் தொடங்கலாம். இப்பொழுது இரண்டு வெவ்வேறு கட்டங்களை நீங்கள் கடந்தாக வேண்டியுள்து. முதலாவது முன்னேற்பாடு, இரண்டாவது நேரடி நடவடிக்கை.தற்போதைய போராட்டத்திற்குப் பிறகு நேர்மையான புரட்சிகரத் தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும் அவநம்பிக்கையினையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உணர்ச்சி வயப்படுதலை ஒதுக்கித் தள்ளுங்கள். நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மிகவும் கடினமான பணி. புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனிநபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாய-பொருளாதார சூழ்நிலைகளின் மூலமாகவே கொண்டுவரப்படும். இந்த சூழ்நிலைகளால் கொடுக்கப்படும் எந்தவகையான வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்று திரட்டுவதும் மிகவும் கடினமான தொரு பணி. அப்பணி, புரட்சிகர தொண்டர்களிடமிருந்து மாபெரும் தியாகத்தை வேண்டுகிறது. இதனை நான் தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் ஒரு வியாபாரியாகவோ இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லது குடும்பஸ்தராகவோ இருந்தால் தயவு செய்து நெருப்போடு விளையாடாதீர்கள். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற்பொழிவாற்றுவதற்காக சில மாலை நேரங்களை செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் ஏற்கனவே நிறையப்பேர் இருக்கின்றனர். அவர்கள் பயனற்றவர்கள். நமக்குத் தேவையானவர்கள்- லெனினுக்கு பிடித்தமான வார்த்தையில் சொல்வதானால்- புரட்சியே தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேர புரட்சியாளர்களே (Professional revolutionaries). புரட்சியைத்தவிர வேறெந்த இலட்சியமோ வாழ்நாட் பணியோ இல்லாத முழுநேரத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கட்சிக்குள் சேர்க்கப்படுவது உங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கு முக்கியமாக உங்களுக்குத் தேவைப்படுவது ஒரு கட்சி. அக்கட்சியானது மேலே விவாதிக்கப்பட்ட வகையினைச் சேர்ந்த தொண்டர்களை (அதாவது முழுநேர புரட்சியாளர்களை) கொண்டதாக இருக்க வேண்டும். அத்தொண்டர்கள், தெளிவான சிந்தனைகளும் கூரிய அறிவும் முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும் விரைந்து முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கட்சி, உருக்குப் போன்ற கட்டுப்பாட்டை உடையதாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. சரியாகச் சொன்னால் இதற்குந் நேர் எதிரானதாக இருக்க வேண்டும். என்றாலும் வலிய முன்வந்து சிறைக்குச் செல்லுகின்ற கொள்கை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்ட எண்ணற்ற தொண்டர்கள் இதனால்வென்றெடுக்கப் படுவார்கள். அவர்கள் அதே ஆர்வத்துடன் வேலைதிட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தத் தொண்டர்களின் கூட்டமே, மெய்யான வாய்ப்பை பயன்படுத்துவதற்கான தகுதியை உடைய சிறப்பாக தலைவர்களை உருவாக்கப்போகிறது என எதிர்பார்க்கலாம்.கட்சிக்குத் தேவைப்படுகின்ற தொண்டர்களை இளைஞர் இயக்கத்தின் மூலமாக மட்டுமே கொண்டு வர முடியும். ஆகவே இளைஞர் இயக்கத்தையே நமது செயல் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம். இளைஞர் இயக்கமானது படிப்பு வட்டங்களுக்கும் அரசியல் வகுப்புகளுக்கும், துண்டு பிரசுரங்கள், சிற்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே அரசியல் தொண்டர்களை புதிதாகச் சேர்ப்பதற்கும் அவர்களின் பயிற்சிக்குமான களமாகும்.தங்களது கருத்துக்களில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் குறிக்கோளுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக தம்மையே உணருபவர்களாகவும் இருக்கும் இளைஞர்களை (இளைஞர் இயக்கத்திலிருந்து) கட்சிக்குக் கொண்டு செல்லலாம். கட்சித் தொண்டர்கள் எப்போதும் இளைஞர் இயக்கத்தின் செயல்பாட்டையும் சேர்த்து வழிநடத்துபவர்களாகவும் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். வெகுஜன பிரச்சாரப் பணியில் இருந்து கட்சியின் வேலை துவக்கப்பட வேண்டும். இது மிகவும் இன்றியமையாதது. கெதார் கட்சியின் முயற்சிகள்(1914-15) தோல்வியடைந்ததற்கான அடிப்படைக் காரணங்களுள் ஒன்று, பொதுமக்கள் பற்றிய அவர்களின் அறியாமையும், அக்கறையின்மையும் சில நேரங்களில் தீவிரமான எதிர்நிலையுமே ஆகும். அது தவிர, விவசாயிகள் மற்றும் தொழிலளார்களின் தீவிரமான அனுதாபத்தைப் பெறுவதற்கும் அவர்களை அணி திரட்டுவதற்கும் இது அவசியமானதாகும். கட்சியின் பெயர் அல்லது இன்னுங் சரியாகச் சொல்வதானால்...2 ஓர் கம்யூனிஸ்ட் கட்சி.இந்த அரசியல் தொண்டர்களின் கட்சியானது தளர்வற்ற கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைக்கு உட்பட்டு மற்றெல்லா இயக்கங்களையும் நடத்திச் செல்ல வேண்டும். அது, விவசாயிகளின் கட்சிகளையும் தொழிலாளர் கட்சிகளையும் அமைக்க வேண்டும். தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டும். காங்கிரஸையும் அதன் சகோதர அமைப்புகளையும் கைப்பற்றுவதற்கும் கூட துணிந்து முயற்சிக்க வேண்டும். அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு தேசிய அரசியல் பற்றிய விழிப்புணர்வை மட்டுமல்லாது வர்க்க அரசியல் பற்றிய விழிப்புணர்வையும் ( அதற்கு சற்றும் குறையாத அளவில்) சேர்த்து உருவாக்குவதற்கு கட்சியானது. ஒரு மாபெரும் பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும். சோசலிசக் கொள்கை பற்றிய அறிவை பொதுமக்களிடத்தில் பரப்பும் வகையில் அனைத்து பிரச்சனைகள் சம்பந்தமான புத்தகங்களும் கொண்டு வரப்பட வேண்டும். அவை எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்புதகங்களை எளிமையாகவும் தெளிந்த நடையிலும் எழுதப்பட வேண்டும்.தொழிலாளர் இயக்கத்தில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் சுதந்திரம் இல்லாமலேயே விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பொருளாதார விடுதலை பற்றிய அர்த்தமற்ற கருத்துக்களை பரப்பிக் கொண்டுள்ளனர். இவர்கள் மக்களின் உணர்ச்சிகளை கிளறிவிட்டுக் குளிர்காய்பவர்கள் அல்லது குழப்பவாதிகள். அத்தகைய கருத்துக்கள் கற்பனை செய்ய முடியாததும் பகுத்தறிவுக்குப் புறம்பானதுமாகும். மக்களின் பொருளாதார விடுதலையை நாமும் மனதிற் கொண்டுள்ளோம். அந்நோக்கத்திக்காகவே அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் இவ்வர்கங்களின் சிறிதளவு பொருளாதார கோரிக்கைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இப்போராட்டங்கள் தான் அரசியல் அதிகாரத்தை வெல்வதை நோக்கிய இறுதிப் போராட்டத்திற்காக அவர்களைப் பயிற்றுவிப்பதற்குரிய சிறந்த வழிமுறையாகும்.இவை நீங்கலாக, இராணுவத் துறை ஒன்று கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கியமானதாகும். சில நேரங்களில் இதன் தேவையானது மிக அவசியமாக உணரப்படும். ஆனால் அந்நேரத்தில் அத்தகையதொரு அமைப்பை ஆற்றலுடன் செயல்படுவதற்குப் போதுமான வழிவகைகளுடன் உடனடியாக உங்களால் துவக்கவும் முறைப்படுத்தவும் முடியாது.ஒருவேளை கவனமான விளக்கம் தேவைப்படக்கூடிய தலைப்பாகும் இது. இத்தலைப்பில் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. வெளித்தோற்றத்திற்கு நான் ஒரு பயங்கரவாதியைப் போல் செயல்பட்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற மிக நீண்டதொரு செயற்திட்டம் பற்றிய திட்டவட்டமான கொள்கைகளைக் கொண்ட புரட்சியாளன் நான், தண்டனைக் கைதிகளின் அறையில் ஏதோவொரு வகை பிற்போக்கிற்கு ஆளானதாக- அது உண்மையல்ல என்றாலும். “ஆயுதம் தாங்கியிருக்கும்’’ என் தோழர்கள், ராம் பிரசாத் பிஸ்மில்லை போல் என்னை குற்றம் சாட்டியிருக்கலாம். வெளியில் இருக்கும் போது வழக்கமாக நான் கொண்டிருந்ததைப் போன்றே, ஒருவேளை இன்னும் சொல்லப்போனால், சந்தேகத்திடமின்றி அதனினும் மேம்பட்ட நிலையி- அதே கொள்கைகள், அதே உறுதியான பற்று, அதே விருப்பம் மற்றும் அதே உணர்வை நான் இப்போதும் கொண்டுள்ளேன். இதனால் எனது வார்த்தைகளை வாசிக்கும் போது கவனமுடன் இருக்குமாறு எனது வாசகர்களை எச்சரிக்கிறேன். அவர்கள் எனது எழுத்துகளுக்குப் புறம்பாக எதையும் ஊகித்தறிய முயற்சி செய்யக்கூடாது. எனது சக்தி அனைத்தையும் ஒன்றுகூட்டி உரக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. அந்த முறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகள் அசோசியேசனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதனை எளிதாக தீர்மானிக்கலாம். எங்களது செயல்பாடுகள் அனைத்தும் மாபெரும்(விடுதலை) இயக்கத்துடன், அதன் இராணுவப் படைப்பிரிவாக எங்களை நாங்களே ஒன்றிணைத்துக் கொள்ளும் இலக்கை நோக்கியதாகவே இருந்தன. எவரேனும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளட்டும். வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் பயனற்றவை என்று நான் சொல்லவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால் இதற்கு நேர்மாறாகவே நான் சொல்கிறேன். ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், வெறுமனே வெடிகுண்டுகளை மட்டும் வீசியெறிவதால் பயன் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சில நேரங்களில் அது கேடுவிளைவிப்பதாகவும் இருந்து விடுகிறத.கட்சியின் இராணுவத் துறையானது, எந்தவொரு அவசர காலத் தேவைக்கும் கிடைக்கக்கூடிய வகையில் அனைத்து போர்த் தளவாடங்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அது கட்சியின் அரசியல் வேலைக்கு பின்பலமாக இருக்கவேண்டும். அது தன்னிச்சையாக செயல்பட இயலாது, செயல்படவும் கூடாது.மேலே சுட்டிக் காட்டப்பட்டதன் திசை வழியில் கட்சி, அதன் செயல்பாட்டைத் தொடர வேண்டும். பத்திரிகைகள் மூலமாகவும் மாநாடுகள் மூலமாகவும் தங்களது தொண்டர்களை எல்லா விவாதப் பொருள்பற்றியும் பயிற்றுவித்துக் கொண்டும் தப்பெண்ணங்களை அகற்றிக் கொண்டும் அவர்கள் செல்ல வேண்டும். இத்திசைவழியில் நீங்கள் செயல்பாட்டைத் துவக்கினால் மிகவும் பொறுமை காக்க வேண்டும். இச்செயல் திட்டம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் தேவைப்படலாம். ஒரு வருடத்தில் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாதர வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புரட்சி என்ற உங்களின் இளமைக்குரிய கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது. முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன்செல்ல வேண்டும். இதற்கு துணிவும், விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனவுறுதியும்வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது. எந்தத் தோல்வியும் துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்துவிடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்று விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமான மீண்டு வரவேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.

புரட்சி நீடூழி வாழ்க!

-பகத்சிங்

2 பிப்ரவரி 1931.

 

http://illakkia.blogspot.com/2008/01/blog-post_9970.html

Last Updated on Sunday, 24 August 2008 20:33