Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் நாமும் பிறரும்

நாமும் பிறரும்

  • PDF
நமது கட்சி ஓர் அலாதியான தன்மை கொண்டதாகும்; நம் கட்சியைப் போன்ற மற்றொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம்! நம்மைத்தவிர மற்ற எவரும், எந்தக் கட்சியாரும் நம்மை எதிரிகளாகக் கொள்ளத்தக்க நிலையில் இருக்கிறோம்.

உதாரணமாக, நாம் ஒரு கட்சியார்தான் தேர்தலைப் பகிஷ்கரிக்கிறோம்; தேர்தலில் கலந்து கொள்ளாதே என்கிறோம். நம் கட்சியார் தான் சாமிகள், பூதங்கள், கோட்பாடுகள், மதப் பைத்தியங்கள், சாதித் தன்மைகள், சாஸ்திரங்கள், புராணங்கள், கடவுள்களின் திருவிளையாடல்கள், இராமாயணம், கீதைகள் ஆகியவைகளைக் கண்டித்துப் பேசுகிறோம். அனேகத்தை ‘கூடவே கூடாது’ என்று மறுத்தும், இழித்தும் பேசி பிரச்சாரம் செய்து, மாநாடுகள் கூட்டித் தீர்மானிக்கிறோம்.

இதை, இந்த இந்தியாவில் வேறு யார் செய்கிறார்கள்? நல்ல ஓர் அரசியலுக்கும், நல்ல ஓர் அறிவுத் தன்மைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், நல்வாழ்வுக்கும் இந்தக் கொள்கைகள் சிறிதாவது அவசியம் என்று எந்த அரசியல், பொருளாதார இயல், சமய - சமுதாய இயல் கட்சியார் கருதுகிறார்கள்? நாம் ஏன் இப்படிக் கருதுகிறோம் என்றால், நாம் பொறுப்பை உணருகிறோம்; நம் மக்களை அவர்கள் விழுந்து கிடக்கும் குழியில் இருந்து மேலேற்ற இந்தக் கொள்கைகள் தாம் படிக்கட்டு - ஏணி என்று கருதுகிறோம். நாம் இந்த இழிநிலையில், அதாவது சாதியில் கீழாய், படிப்பில் தற்குறியாய், செல்வத்தில் தரித்திரர்களாய், தொழிலில் கூலியாய், ஆட்சியில் அடிமையாய் இருப்பதற்கு நம்மிடம் இன்றுள்ள மடமையும், மடமைக்கு ஆதாரமான மதத் தத்துவக் கொள்கை, மததர்மம், சாதி, சாதி வகுப்பு பேதம், கடவுள்கள், கடவுள் கதைகள், கல்வித் தன்மைகள் இவைகள் கொண்ட மக்களின் தேசீயம் முதலியவைகளேயாகும். ஆதலால், அடிப்படையாக - பயனுள்ளதான இந்த ஆக்க வேலை செய்ய முயற்சிக்கிறோம். இந்த நமது முயற்சிக்கு, இதனால் பாதிக்கப்படும் எவரும் எதிரிகளாய்த்தான் இருப்பார்கள். இவர்கள் யாவரும் நமக்கு எதிரிகள் என்றால் - இவர்களது கூட்டுறவால், ஆதரவால், ஒப்பந்தத்தால் அரசு செலுத்தி இவர்களுக்குப் பங்களிக்கும் அரசாங்கமும் நமக்கு எதிரியாய் இருப்பதில் அதிசயமென்ன இருக்க முடியும்?

இப்படி எல்லாம் இருந்தும், நாம் நம் முயற்சியில் மேலும் மேலும் ஊக்கம் ஏற்படத்தக்க நிலையில் இருக்கிறோம். நம் கொள்கைகள், திட்டங்கள் எல்லாம் இன்று மக்கள் சிந்தனைக்கு ஆட்பட்டவைகளாக ஆகி வருகின்றன.

(சென்னையில், 11-10-1945-ல் சொற்பொழிவு, ‘குடிஅரசு’, 27-10-1945)

திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை, ‘திராவிடர்’ என்றும்; ‘இந்தியா’ ‘இந்தியர்’ ‘இந்து’ ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்றும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இந்து என்ற வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள், இதிகாசங்கள், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ்வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம். நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சியே ‘இந்து’ என்பதாகும்.

இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அவற்றில்கூட ‘இந்தியா’ என்பதோ ‘இந்து’ என்பதோ, ‘இந்தியர்’ என்பதோ காணப்படவில்லை. 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மைக் குறித்துத் ‘திராவிடர்’ என்றே எழுதப்பட்டிருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம்; அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும், அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக் கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே ‘இந்து’ என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா, இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.

‘பார்ப்பனரல்லாதார்’ என்று நம்மை நாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும்? நாம் திராவிடர்; நம் எதிரிகள் வேண்டுமானால் ‘திராவிடரல்லாதார்’ என்று சொல்லிக் கொள்ளட்டுமே! சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்துவரும் பழம் பண்டிதர்கள் இமயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்து போகட்டும்; அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.

- லால்குடியில், 23-5-1944-ல் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 3-6-1944
http://www.keetru.com/rebel/periyar/60.php