Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் வரலாற்றுப் புதிர்களை விடுவிக்கும் டி.என்.ஏ

வரலாற்றுப் புதிர்களை விடுவிக்கும் டி.என்.ஏ

  • PDF

மனிதன் எப்போது வேலியமைத்தானோ அப்போதுதான் மனிதனின் நாகரீக வாழ்க்கை தொடங்கியது என்று மனிதவியலாளர்கள் கூறுவர். உணவுக்கென அவன் செய்த பல்வேறு செயல்கள் அவனது பகுத்தறிவின் வெளிப்பாடாக அமைந்தன. உணவுக்காய் விலங்குகளை வேட்டையாடி, பின்னர் பயிர்களை வளர்த்து அறுவடை செய்து என்று அவனது தேடலின் எல்லை விரிவாகி இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் மனித சமூகத்தை எங்கோ அழைத்து சென்றுகொண்டிருக்கிறது. தேடல் என்பது இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு மனிதன் இத்தனை நவீன உலகத்தை உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை...என்ற பாடல் வரியைப்போல் மனிதன் ஏன் என்ற கேள்விக்கு விடை தேடி பல முன்னேற்றங்களை கண்டுள்ளான். ஒரு பக்கம் அடுத்து என்ன என்ற திசையில் மனிதனின் தேடலும் ஆய்வும் சென்றுகொண்டிருக்க மறுபக்கம் கடந்த காலத்தின் புதிர்களுக்கும், வரலாற்றின் விடுகதைகளுக்கும் விடைதேடி அவன் ஆய்வுகளை செய்துகொண்டிருக்கிறான். மனித இனம் தோன்றியது ஆசியாவிலா, ஆப்பிரிக்காவிலா...மனித இனம் ஹோமோ சேப்பியன் எனப்படும் வகையில் அமைகிறது. இந்த ஹோமோ சேப்பியனுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் என்ற இனம் இருந்தது ஆதி மனிதனுக்கு முந்தைய பரிணாம நிலை என்று இந்த ஹோமோ எரக்டஸை கூறுகின்றனர் அறிவியலர்கள்.

 

ஆனால் இதற்கிடையில் ஹோமோ சேப்பியன்கள் ஆகிய மனித இனம் இருந்த சமகாலத்தில் சற்றே குள்ளமான, தலை சிறியதாக அமைந்த ஹோமினிட் அல்லது ஹோமோ ஃப்ளோரெசியன்சிஸ் என்ற இனம் வாழ்ந்ததாக ஒரு சில அறிவியலர்கள் கூறியுள்ளனர். ஆக அடுத்தது என்ன என்ற நவீன வகை முன்னேற்றத்திலான பிரிமிப்பை விட, கடந்த காலத்தின் புதிர்கலை புரிந்துகொள்வதிலான ஆர்வமும், ரசனையும் மனிதனை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்துக் கொண்டிருக்கிறது எனலாம். அறிவியல் முன்னேற்றங்களும், புதிர்களுக்கான விடை அறியும் ஆவலில் எழுந்த தேடலும் இந்த துறையில் பலரை ரசனை கொள்ளச் செய்கிறது.

 

சரி இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அத்தகைய ஒரு தேடலை, ஆய்வை உங்களுக்கு அறியத்தருகிறோம். ஜீன்ஸ் திரைப்படத்தில் "கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு, கொண்டாட கண்டுபுடிச்சு கொண்டா ஒரு தீவு" என்று ஒருபாடல் வரும், அதேபோல் பொதுவாக ஏற்கனவே தெரிந்த ஒன்றை என்னமோ நாம்தான் புதிதாக புரியவைக்கப்போகிறோம் என்று நாம் சொன்னால், உடனே நண்பர்கள் ஆமா வந்துட்டாரு கொலம்பஸ், புதுசா கண்டுபுடிச்சு சொல்றதுக்கு என்று சொல்ல கேட்டிருப்போம்.

 

இந்த கொலம்பஸ் என்பவர் அமெரிக்க கண்டத்தின் பல நாடுகளை கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்? கொலம்பஸ் என்று நாம் சிறுவயதில் படித்தும் இருப்போம். அவர்தான் அமெரிக்க கண்டத்தை முதலில் கண்டறிந்தார் ஆனால் அவர் அப்பகுதியை ஆசியா, இந்தியா என்றே நினைத்தாராம். அதற்கு பின்பு அஙேகே வந்த அமெரிகோ வெஸ்புகி இது இந்தியாவும் இல்லை, ஆசியாவின் ஒரு பகுதியும் இல்லை, இது ஒரு புதிய கண்டம், புது உலகம் என்று கூறினார். முதலில் தென் அமெரிக்காவுக்கு மட்டுமே அவரது பெயர் வைப்பதாக இருந்தது ஆனால் அது காலப்போக்கில் வட தென் அமெரிக்கா என்று அவர் பெயரிலேயே இரு கண்டங்கள் அழைக்கப்படலாயிற்று.

 

கொலம்பஸ் 1492ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அதற்கு பிறகு 3 அல்லது 4 ஆண்டுகள் கழித்துத்தான் அமெரிகோ வெஸ்புகி அங்கே அமெரிக்க கண்டத்தின் வேறு சில பகுதிகளை கண்டறிந்தார், ஆனால் அவர் பெயர் ஏன் வைக்கப்படவேண்டும். கேள்விகள் எழுகிறதா...இந்த கொலம்பஸ் தொடர்பான பல்வேறு விடயங்கள் இன்றைக்கு கேள்விகளாக மட்டுமல்ல புதிர்களாகவே உள்ளன. கொலம்பஸ் இத்தாலியரா, ஸ்பானியரா அல்லது பிரெஞ்ச்சா??? அவரது உடல் புதைக்கப்பட்டிருப்பது ஸ்பெயினிலா அல்லது அமெரிக்க கண்டத்திலா??? அவர் யூத மதத்தவரா, மதம் மாறிய யூதரா?? பிரெஞ்ச் கடற்கொள்ளையரா?? என்று அவரது நதிமூலம் ரிஷிமூலம் அறிவதில் இன்றைக்கும் குழப்பங்கள் உள்ளன என்றால் நம்பமுடிகிறதா என்ன...

 

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கொலம்பஸ் இறந்து இந்த ஆண்டு மே 20ம் நாளோடு 5 நூற்றாண்டுகள் ஆகிறதாக கூறப்படுகிறது. அவரது இறப்பின் 500 ஆண்டு தினம் கடந்த பின்னும் மனிதரை பற்றிய புதிர்கள் விடுவிக்கப்படவில்லை. ஆனால் இவரது பூர்வீகத்தை கண்டுபிடிக்காமல் விடுவதா...ஒரு கை பார்க்கலாம் என்று அறிவியலர்கள் புறப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு இப்போது மூன்று மனித உடல்களின் எலும்புகளும், மருத்துவ அறிவியல் உலகை புரட்டிபோடும் அதிசயமான மரபணு சோதனை முறைகளும்தான் ஆய்வுக்கான களம் அமைத்து கொடுத்துள்ளன.

 

கூடிய விரைவில் கொலம்பஸின் பிறப்பு, இறப்பு, புதைப்பு, அவரது உடலின் மிச்சம் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் இவையெல்லாம் இந்த மரபணு சோதனைகளின் உதவியில் உலகிற்கு தெரியப்போகிறது. சரி, இதை எப்படி இந்த அறிவியலர்கள் சாத்தியமாக்கினர் என்பதை அறிவோம். கிட்டத்தட்ட அரை ஆயிரமாண்டுக்கு முந்தைய கொலம்பஸின் உடலின் எலும்பு, அவரது மகன் ஹெர்னான்டோவின் எலும்பு, கொலம்பஸின் தம்பி டியெகோவின் எலும்பு என மூன்று பேரின் எலும்புகளைக் கொண்டு மரபனு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மூவரில் கொலம்பஸின் எலும்புகள் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளன, இருக்காதா என்ன, 500 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பாயிற்றே. அவரது தம்பி டியெகோவின் எலும்பும் பெருமளவில் உருக்குலந்த நிலையில்தான் காணப்படுகிறது ஆனால் கொலம்பஸின் மகன் ஹெர்னான்டோவின் எலும்பு மற்ற இருவரது எலும்புகளை விட பரவாயில்லை என்கிறார் இந்த ஆய்வுகளின் ஸ்பெயின் நாட்டுக்குழின் தலைவரான கிரனாடா பல்கலைக்கழகத்தின் மிகேல் லோரன்டே.

 

ஸ்பெயின் நாட்டு ஆய்வுக்குழு இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் அறிவியலர்களோடு இணைந்து கொலம்பஸ் தொடர்பான புதிர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

http://tamil.cri.cn/1/2006/06/12/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it