Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் வெட்கமா சமூக பதட்ட கோளாறா?

வெட்கமா சமூக பதட்ட கோளாறா?

  • PDF

குழந்தைகள், சிறுவர்சிறுமியர், மாணவ மாணவியர், பதின்பருவத்தினர் அனைவரையும் குழந்தைகள் என்ற பொதுப்பெயரில் அழைக்கலாம். சில குழந்தைகள் பள்ளிக்கூடம் திறக்கும் போது மகிழ்கின்றனர். பல, கோடை விடுமுறை இன்னும் தொடராதா? ஏன ஏங்கி முனுமுனுப்புடன் வகுப்பை தொடங்குகின்றனர். பள்ளி சூழலுடன் பழகிக்கொள்ள அதிக நாட்கள் எடுக்கும் பிள்ளைகள் மிகவும் மோசமாக மாட்டிக்கொள்பவர்களான உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் எவ்வளவு வெட்க உணர்வுள்ளவர்கள் என்றால், அவர்கள் சமூக பதட்டக் கோளாறு என்ற உளவியல் சிக்கலில் மூழ்கியுள்ளார்கள் என்று உளநல மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களிடையே இந்த சமூக பதட்டக் கோளாறு பரவி வருகிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

 

இயல்பான வெட்கம் மனநோயாக மாறக்கூடும் என்று எண்ணும்போது வியப்பாகவும் குழப்பமாகவும் உள்ளது. இளைஞர் ஒருவர் அமைதியானவராக யாருடனும் பழகாதவராக இருந்தால் உளவியல் மருத்துவர் அவருக்கு சமூக பதட்ட கோளாறு நோய் உள்ளது என்று சிகிச்சைக்கு பரிந்துரை செய்வார்.

 

அமெரிக்க குழந்தைகளிடம் வெட்கம் எவ்வளவு பரவலாக இருக்கிறது என்றால் 42 விழுக்காடு அமெரிக்க குழந்தைகள் பொதுவாக வெட்கத்தை வெளிக்காட்டுகின்றனர். ஆய்வின்படி, இந்த வெட்கக்குணம் வயது கூடக்கூட அதிகமாகிறது. கல்லூரி வயதின் போது 51 விழுக்காடு இளைஞர்களும் 43 விழுக்காடு இளம்பெண்களும் தங்களை வெட்கம் மிகுந்தவர்களாகவும் பட்டபடிப்பு வயதின் போது 50 விழுக்காடு இளைஞர்களும் 48 விழுக்காடு இளம் பெண்களும் தங்களை வெட்கம் மிகுந்தவர்களாகவும் குறிப்பிடுகின்றனர். எட்டுபேரில் ஒருவராவது இது தொடர்பான மருத்தவ சிகிச்சை தேவைப்படுபவராக இருக்கிறார் என உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பெற்றோரில் பலர் இவ்வகையான வெட்கம் சூழ்நிலையால் அமைவது என்கின்றனர். இத்தகைய உணர்வை பாதகமற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெட்கப்படும் குழந்தைகளிடம் சுரக்கின்ற கார்றிசோல் (cortisol) எனும் கார்மோன் அதாவது இயக்குநீரின் அளவு இதர அதே வயதுடைய குழந்தைகளை விட குறைவாக உள்ளது என, பிரிட்டன் பொருளாதார சமூக ஆய்வு அவை உதவியுடன் நடத்திய ஆய்வில் ஜுலி டர்னர்-கோப் (Julie Turner-Cobb ) என்ற ஆய்வாளர் தெரிவிக்கிறார். ஆனால் இத்தகைய இயக்குநீர் சுரக்கும் அளவு மாற்றத்தால் பாதிப்பில்லை என்கிறார்.

 

இப்படி அதிக பாதிப்பில்லாமல் இருக்கும்பொது உளநல மருத்துவர்கள் எவ்வாறு இதனை நோயாக கொள்ளலாம் என்ற கேள்வி மேலோங்குகிறது. உளவியல் பற்றிய அடிப்படை கையேடான மனநலக்கோளாறு நோயறிதல் மற்றும் புள்ளிவிபர கையேடே பெரும்பாலும் உளநல மருத்துவர்களுக்கான அடிப்படை கையேடாக உள்ளது. 1980 இல் வெளியிடப்பட்ட இக்கையேட்டின் மூன்றாம் பதிப்பில், உணவகங்களில் தனியாக சாப்பிட பயப்படுவோர் பொது கழிவறைகளை பயன்படுத்த தவிர்ப்பவர்கள் அல்லது எதையாவது எழுதும்போது கை நடுங்குவதை குறித்து கரிசனை கொள்பவர்கள் ஆகியோர் "சமூக பயம்" என்று அந்நாளில் அழைக்கப்பட்ட உளநல சிக்கலுடையவர்கள் என்று கூறியது. இவ்வரையறைகளை மழலையர் பள்ளி செல்லும், கழிவறை பயன்படுத்த பழக்கப்படாத, உண்ணப்பழகி கொண்டு தத்தி நடக்கின்ற குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஏனவே 1987 இல் ஆவணத்தின் மூன்றாம் பதிப்பின் திருத்திய வடிவம் பள்ளிப்பருவ குழந்தையின் முன் உள்ள குழந்தைகளுக்கும் பொருந்துகின்ற அளவிலான விரிவான அறிகுறிகளின் பட்டியலை வெளியிட்டது. நாம் தவறாக எதையாவது சொல்லி விடுவோமோ என்ற கரிசனை பொதுவாக உலகில் அனைவருக்குமே உண்டு. இதையும் அறிகுறிகளில் இணைத்துக் கொண்டது கையேடு.

 

ஆளமை வளர்ச்சி தொடர்பான புத்தகங்கள், கட்டுரைகள் போன்றவை தேர்வு பதட்டம், கரும்பலகையில் எழுத வெறுப்பு, குழு விளையாட்டுகளை புறக்கணித்தல் என வெளிப்பாட்டு வரையறைகளை விரிவாக்கின. இத்தைகைய இளகிய வரையறைகள் அதிக நோயறிதலுக்கு கொண்டு சென்றது. சமூக பதட்ட கோளாறு என்பது ஏதோ சாதாரண சளியை போல் துவக்கப்பள்ளி குழந்தைகளிடையே பரவுவதாக எண்ணும் அளவுக்கு இந்த வரையறைகள் விரிவாக இருந்தன. சமூக பதட்ட கோளாறு பற்றி மக்களிடையே பரவலான அறிதல் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பான சிகிச்சை உளநல மருத்துவர்களுக்கு தேவையானது.

 

1990 ஆம் ஆண்டில் பாக்சில் (Paxil) மருந்து உற்பத்தியாளர் கிளாசே ஸ்மித் கிளேன் (GlaxoSmithKline )இம்மருந்து சமூக பதட்டத்தை நீக்கும் என அறிவித்தது. "மக்கள் ஒவ்வாமை கொண்டவர்களாக உங்களையே கற்பனை" என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூண்டுதலால் அவ்வாண்டில் இந்நிறுவனம் சமூக பதட்டம் தொடர்பான இம்மருந்தின் ஆய்வு மற்றும் விளம்பரத்திற்கு 92 மில்லியன் அமெரிக்க டாலரை செலவழித்தது. இது ஃபைசர் (Pfizer )அதே வருடம் வையோகராவை பிரபலபடுத்த செய்த செலவை விட 3 மில்லியன் அதிகமாகும். இதனால் சமூக பதட்ட நோய் தேசிய அளவிலான மனநோயறிதலில், மனஅழுத்தம் மற்றும் மது அடிமை போன்ற நோய்களுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய உளநல சிக்கலாக மாறியது. ஆய்வுகள் இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15 விழுக்காடு என்றது. இது எட்டு பேரில் ஒருவர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியவராகிறார் என உளநல மருத்துவர்கள் கூறியதை விட அதிகமாகும்.

 

இத்தகைய நோயறிதல் அடிக்கடி பொறுப்பற்றதாகவும், மனித தவறுகளையும் கொண்டிருந்தன. தங்களுடைய வெட்கம் மற்றும் மேடைபேச்சு பதட்டம் போன்றவற்றிற்கு பாக்சில் (Pazil) அல்லது சோலோப்ட் (Zoloft) போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட பல குழந்தைகள் தற்கொலை எண்ணம் மற்றும் பிற தீவிர பக்க விளைவுகளுக்கு உள்ளாயினர் என ஆய்வுகள் கண்டுபிடித்தன. ளுளுசுஐ எனப்படும் இந்த வகை மனஅழுத்த நிவாரண மாத்திரைகள் குழந்தைகள் மீது எப்போதும் சோதனை செய்யப்படவில்லை. காலம் கடந்தபின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் "இம்மருந்துகள் இளையோருக்கு தற்கொலை ஆபத்தோடு தொடர்புடையது" என மருத்துவர்களுக்கும் பெற்றோருக்கும் எச்சரிக்கை செய்யும் "கறுப்பு கட்ட" எச்சரிக்கையை மருந்து குப்பியில் பொறிக்க வழி செய்தது.

 

இப்படி மருந்துகளை சாப்பிட்ட குழந்தைகள் பலர் தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்பட்டவர்களாகி, அவர்களை கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதால், இந்த மருந்துகளை அதிகம் பரிந்துரைக்கும் எண்ணம் குறைந்திருக்கும் என்று நினைப்பீர்கள். ஆனால் வலிமையான மருந்துகளை, சாதாரண குணநல சிக்கல்களுக்கு கூட பரிந்துரைக்கும் நிலை தொடர்ந்தது. அவ்வளவு ஏன், நாங்கள் இத்தகைய மருந்துகளை குறைந்த அளவில் பரிந்துரை செய்வதால்தான் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறி, முன்பு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்பாடு செய்து ஒட்டப்பட்ட எச்சரிக்கை கறுப்புபெட்டி வாசகத்திற்கு எதிராகவும் உளநல மருத்துவர்கள் கொடிபிடித்தனர்.

 

அண்மையில் வெளியான "வெட்கப்படும் குழந்தையை பராமரிப்பது: நம்பிக்கையும், சமூகத்திறனும் கொண்ட குழந்தைகளையும், பதின்பருவத்தினரையும் வளர்க்க, நடைமுறை உதவி" என்ற புத்தகம், மருந்துகளை பரிந்துரைக்கும்போது அதை உட்கொள்ள பயப்படாதீர்கள் என்று கூறுகிறது. ளுளுசுஐ மருந்துகள் முறையாக பரிந்துரை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டால் இம்மருத்துகள் நல்ல பலன் தரலாம் என இந்நூல் ஆசிரியர்களான இரண்டு உளவியலாளர்கள் கூறுகின்றனர். புகார் சொல்லும், ஆசிரியரிடத்தில் கேள்வி கேட்கவோ அல்லது கரிக்கோல் செதுக்ககூட தனது இருப்பிடத்தைவிட்டு நகர்வதை தவிர்க்கும் குழந்தைகளின் இவ்வகை குணநலன்கள் சமூக பதட்ட கோளாறு வெளிப்பாடுகள் என இந்நூல்; தெரிவிக்கிறது.

 

நோயறிதல் தர வரயறையில் மறுஆய்வும், மீள்கவனமும் தேவை. நோயறிதல் மற்றும் புள்ளிவிபர ஆவணத்தின் புதிய பதிப்பை ஆய்வதற்கு உளநல நிபுணர்கள் குழு ஒன்று அண்மையில் கூடியுள்ளது. இம்முறை சாதாரண ஏன் ஆரோக்கியமான வெட்கத்தை சமூக பதட்ட கோளாறிலிருந்து வேறுபடுத்தியே ஆக வேண்டியுள்ளது. தவிர்ககும் ஆளுமை கோளாறு மற்றும் அதிவெட்க ஆளுமை கோளாறு அடையாள பட்டியலிலிருந்து வெட்கத்தை நீக்க வேண்டியுள்ளது. கவலைப்படவும், கரிசனைக் கொள்ளவும் இன்னும் எவ்வளவோ இருக்க, உளநல மருத்துவம் வெட்கம் போன்ற சாதாரண குழந்தை பருவ சிறப்பு குணங்களிலான வலிந்த பிடியை கைவிடத்தான் வேண்டும்.

 

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்"

 

என்பது வள்ளுவர் கூற்று. நோயின் அடிப்படையை, மூலத்தை குறிப்பாக, சரியாக அறிந்து தெளிவதில் நடைபெறும் குழப்பங்கள் பல. இதுவே வெட்கம் மற்றும் சமூகப்பதட்டம் பற்றிய வரையறை புரிதல்களிலும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஓவ்வொரு மனிதரும் தனித்தமையுடையவராக இருப்பதால் உளவியல் நோயறிதலில் நூறு விழுக்காடு சாத்தியம் என்பது ஐயமே.

 

http://tamil.cri.cn/1/2007/10/08/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it