Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் திருமணங்கள்

திருமணங்கள்

  • PDF

பிரான்சில் 1980 ஆண்டு கணக்கின்படி திருமண வயதைப் பார்ப்போம்.73


அட்டவணை - 33


நிலைமை 1980-இல்                          ஆண்                     பெண்
முதல் திருமணம்                                28.7                         26.6
மீள் திருமணம்                                     42.8                         38.1


பிரான்சில் திருமணத்திற்குப் பின் குடும்பமாக ஐந்து வருட வாழ்க்கையில் எப்படி வாழ்கின்றனர்.74


அட்டவணை - 34


எப்படி                                     சதவீதம்
ஒரே வீட்டில்                         74 % 
தனித் தனியாக                   12 % 
பிரிந்து வாழ்தல்                  14 % 

 
பிரான்சில் நடக்கும் திருமணத்தைப் பார்ப்போம்.52 பக்கம்-27


அட்டவணை - 35


                                                              முதலாவது திருமணம்                                 மீள் திருமணம்
ஆண்டு             மொத்த  திருமணம்                                                    விதவை            விவாகரத்து  செய்தோர்
                                                                     எண்ணிக்கை    சதவீதம்            எண்ணிக்கை             எண்ணிக்கை
1975                         3,87,379                        3,53,410             91.2 %                    8,017                             25,952 

1980                         3,34,377                        2,96,140             88.6 %                    5,878                             32,359 

1985                         2,69,419                        2,29,787             85.3 %                    4,655                             34,977 

1988                         2,71,124                        2,28,137             84.1 %                    4,194                             38,793


பிரான்சில் திருமணம் தொடர்பான புள்ளிவிபரத்தை நாம் ஆராயின் திருமணம் செய்யும் எண்ணிக்கை குறைந்து செல்வதைக் காட்டுகின்றது. அத்துடன் சட்டப்படியான திருமண வயதைத் தாண்டிய நிலையில் திருமணங்கள் நிகழ்வதைக் காட்டுகின்றது. திருமணத்தின் பின்னான வாழ்க்கையில் ஐந்து வருடங்களின் பின் திருமணங்களில் நாலில் ஒரு பங்கு நெருக்கடியில் சிக்கியுள்ளதைக் காட்டுகின்றது. திருமணம் என்பது வாழ்க்கையில் அவசியமற்ற விடயமாகக் கருதும் போக்கு அதிகரிக்கின்றது. இதற்கு மாற்றாகச் சேர்ந்து வாழ்தல் அதிகரிப்பதை நாம் கீழே ஆராய்வோம்.


விவாகரத்துக்குப் பிந்திய வாழ்க்கையில் மீளத் திருமணம் செய்வது அதிகரித்துச் செல்வதைப் புள்ளி விபரம் நிறுவுகின்றது. திருமணம் என்பது சிறை என்பதைவிட ஆரோக்கியமானது என்ற மனிதக் கண்ணோட்டம் வளர்ச்சி பெறுகின்றது. தவிர்க்க முடியாத ஏகாதிபத்திய நுகர்வுப் பாலியல் மற்றும் பண்பாட்டில் சிக்கிச் சிதைவோர் மீண்டும் தம்மை ஒழுங்கமைக்கும் போக்கு அதிகரிக்கின்றது. திருமண எண்ணிக்கை குறைந்து செல்ல, விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்து செல்ல, மீள் திருமணம் செய்வதும் அதிகரித்து செல்லும் இந்த நேர்எதிர் தன்மை வாய்ந்த போக்கு, இந்தச் சமூகச் சீரழிவின் போக்கையும், அனுபவவாத எதிர்த் தன்மையையும் காட்டுகின்றது.


திருமணம் என்பது அவசியமற்றது என்ற சமூகக் கூட்டுக்கு எதிரான தனிமனிதக் கண்ணோட்டமும், மீள் திருமணம் தனிமனிதவாதத்துக்கு எதிரானச் சமூகக் கண்ணோட்டத்தையும் வயது - வாழ்க்கை அனுபவம் ஏற்படுத்துவதையும் காட்டுகின்றது. ஆனால் இந்த எண்ணிக்கை என்பது விவாகரத்து செய்வோரில் கணிசமான பகுதி என்பது கவனத்துக்குரியது. இது அண்ணளவாக விவாகரத்து செய்யும் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபங்கு மீள் திருமணத்தைச் செய்கின்றனர். இதைவிட சேர்ந்து வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதும் அதிகரித்து செல்கின்றது.


ஐரோப்பாவில் திருமணத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்தல் எப்படி உள்ளது என்பதைப் பார்ப்போம்.75


அட்டவணை - 36


நாடுகள்                         சதவீதம்
டென்மார்க்                     23 %
பிரான்ஸ்                         13 % 
பெல்ஜியம்                     10 %
இங்கிலாந்து                  9.5 %
ஜெர்மனி                         8 %
இத்தாலி                          4 %
ஸ்பெயின்                      3 %
போர்ச்சுக்கல்                2.5 %
அயர்லாந்து                   2 %
கிரீஸ்                              2 %


இன்றைய திருமணம் என்பது ஒருதாரமணத்தின் ஆணாதிக்கத்தைச் சொத்துரிமை மீது தன்னை ஒழுங்கமைத்தது. இந்த ஒருதார மணவடிவத்தையும், சொத்துரிமையையும் உலகமயமாதல், மக்கள் கூட்டத்துக்கு மறுத்துச் செல்லும் இன்றைய வர்க்கப் போராட்டத்தில், திருமணம் அதன் தனித்துவமான பண்பை இழந்து போகின்றது. பாரம்பரிய சம்பிரதாயமான பழையதன் நீட்சி என்ற எல்லைக்குள் மட்டும் திருமணம் பழமையைப் பேணும் சம்பிரதாயமாக மாறிவிடுகின்றது. இது மேற்கில், ஒவ்வொரு நாட்டிலும் பழைய வடிவத்தை எவ்வளவு வேகமாக உலகமயமாதல் தகர்க்கின்றதோ அந்தளவுக்குத் திருமணம் என்ற வடிவம் தனது சட்ட வடிவத்தை அர்த்தமற்றதாக ஆக்குகின்றது. திருமணம் வழங்கிய சட்டஒழுங்கு தகர்கின்ற போது அத்திருமண வடிவமும் தகர்ந்துபோய் புதிய மனித உறவுகள் ஏற்படுகின்றன. இது ஆண் பெண் திருமணத்துக்கு வெளியில், சட்ட ஒழுங்குக்கு வெளியில் சுதந்திரமாக இணைந்து வாழும் தன்மை அதிகரித்துச் செல்கின்றது.


இந்த வாழ்க்கை மனிதச் சமுதாயத்தின் முன்நோக்கிய ஆரோக்கியமான பாதையை அமைக்க வழிகோலுகின்றது. அதாவது சொத்துரிமை, வாரிசு குடும்ப அமைப்பைத் தகர்த்ததன் மூலம் ஒருதார வடிவத்தின் நோக்கமும் தகர்ந்து போகின்றது. இந்த வடிவத்தை ஏகாதிபத்திய உலகமயமாதல் தனது சொத்துக் குவிப்பின் ஊடாகத் தீவிரமாக்கிச் செல்லுகின்றது. இந்த இணைக் குடும்பங்கள் இரண்டு போக்கில் தனக்குள் முரண்பட்ட இரு கூறுகளைக் கொண்டுள்ளது. அதிகளவு தனித்தன்மை வாய்ந்த தனிமனிதச் சுதந்திரக் கோட்பாடும், சமூகத்தன்மை வாய்ந்த சமூகச் சுதந்திரக் கோட்பாடும் இந்த இணைக் குடும்பங்களில் காணப்படுகின்றது. இந்த இணை மணத்தில் தனிச் சுதந்திரமான உலகமயமாதல் கோட்பாடு முதன்மையான முரண்பாடாக வராத நிலைகள் வரை இக்குடும்பம் நீடித்து வாழ்கின்றது. இந்த இணைக் குடும்பத்தில் ஒருதாரமணத்தில் இருக்கும் சமூகம் சார்ந்து, ஆணாதிக்கப் பண்பு புரையோடிப் போய் இருந்த போதும், அது முதன்மையான முரண்பாடாக வராதவரை இந்தக் குடும்பம் நீடித்து வாழ்கின்றது. மக்கள் கூடிவாழ்வதை அதன் இயற்கையின் தன்மையுடன் கொண்டுள்ளதை ஆராய்வோம்.


பிரான்சில் திருமணம் செய்யும் வயதை உடைய மக்கள் எப்படி உள்ளனர்? எனப் பார்ப்போம்.76


அட்டவணை - 37


மக்களின் நிலை                                                      சதவீதத்தில்
குடும்பமாக                                                                     68.3 %
ஒருவரை இழத்தல்
விவாகரத்து                                                                     18.4 %
பிரிந்து இருத்தல்
திருமணம் செய்யாத மக்கள் பிரிவுகள்          13.3 %


ஆண் - பெண் திருமணத்தை அல்லது சேர்ந்து வாழ்தலைத் தமது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிராக, அதாவது கட்டற்ற தனிமனிதச் சுதந்திரத்துக்கு எதிராக, சமூகச் சுதந்திரத்தைக் கொண்டு வாழ்வதை மேலுள்ள வாழ்க்கையின் கூட்டுத்தன்மை காட்டுகின்றது. தனித்து வாழ்வது என்பது கூட்டுவாழ்வுக்கு எதிரான தன்மையைக் கொண்டு முற்றுமுழுதாக உருவானவையல்ல. ஆனால் கணிசமான பிரிவு இதை அடிப்படையாகக் கொண்டவை. பெண்ணியலில் பூர்சுவா கோட்பாட்டாளர்கள், விவாகரத்தைத் தீர்வாக வைப்போர்கள் எல்லாம் கூட்டு வாழ்க்கைக்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்கள். இவர்கள் தனித்துவாழக் கோருகின்றவர்களும், விவாகரத்தைச் செய்யக் கோருகின்றவர்களும், ஆணை எதிரியாகப் பிரகடனம் செய்கின்றவர்களுமாகிய இவர்கள் உலகமயமாதலில் தனிச் சொத்துரிமை கோட்பாட்டின் அடிப்படையில் ஆணாதிக்கத்தைக் கொண்டவர்கள் ஆவர்.


இதேநேரம் மூன்றாம் உலகம் சார்ந்த இந்தியாவில் மத்தியத் தரத்துக்கு மேற்பட்ட வர்க்கத்திடம் 1990-இல், 3,000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உடைய 20 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டோரிடம் இந்தியா டுடே-மார்க் நடத்திய ஆய்வைப் பார்ப்போம்.(21.12.1996)34


நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற கேள்விக்கு 81 சதவீதம் பேர் ஆம் என்றும், 19 சதவீதம் பேர் காதல் திருமணம் என பதில் அளித்துள்ளனர்.


நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு பெரியோருக்குச் சிறந்தது தெரியும் என 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பதில் அளித்துள்ளனர். அண்ணளவாக 20 சதவீதத்தினர் சம அந்தஸ்துக்காகவும், 15 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிரச்சனை என்றால் பெற்றோர் ஆதரவு தருவர் என்றும் தெரிவித்துள்ளனர்.


திருமணத்தில் அதிகம் எதை எதிர்பார்க்கின்றீர்கள்? என்ற கேள்விக்கு 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் தோழமை மற்றும் புரிந்துணர்வையும், 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் வீட்டையும், 35 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையான பாலுறவையும், 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் சமூக அந்தஸ்த்தையும், 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆதாயத்தையும் எதிர்பார்க்கின்றனர்.


உங்கள் திருமண உறவில் சலசலப்பு வருவதற்குக் காரணமாயிருப்பது எது? என்ற கேள்விக்கு, பதினைந்து பேரில் சராசரியாக 7.5 பேர் தனித்தனியாகப் பணி அழுத்தம், பேச்சு வார்த்தை குறைவு, வீட்டுச் சண்டை என்கின்றனர். அண்ணளவாக 6.5 பேர் குடி காரணம் என்கின்றனர். அண்ணளவாக 3.5 பேர் பணப்பற்றாக்குறையைக் குடும்பப் பிரச்சினைக்குக் காரணம் என்கின்றனர்.


ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தின் நேரடி பிரதிநிதிகளான இந்த மேட்டுக்குடிகளின் குடும்பம் சார்ந்த பொருளாதார நலன் பெற்றோர் தீர்மானிக்கும் திருமணத்தையே சார்ந்திருப்பது நிபந்தனையாகின்றது. உலகமயமாதல் ஊடாக ஊடுருவிப் பாயும் ஏகாதிபத்தியப் பண்பாட்டுக் குணாம்சங்கள் திருமணத்துக்கு முந்திய பிந்திய வாழ்வின் அம்சமாக இருக்க, பொருளாதார நலன் சார்ந்த திருமணம் பெற்றோரின் தீர்மானத்துக்குள் சிக்கித் திணறுகின்றது. அதாவது நிலப்பிரபுத்துவ அமைப்பின் சொத்துரிமை வடிவத்தினுடைய எச்சத்தின் பிரதிநிதிகளான, தரகுக் கைக்கூலித்தனத்தின் பொருளாதாரப் பிரிவுகளான இந்தக் கூட்டம் தனது சொத்துரிமையைப் பாதுகாத்துத் திருமணத்தை ஏகாதிபத்தியப் பண்பாட்டு ஆதிக்கத்தில் இருந்து பொருளாதாரக் காரணத்தால் வேறுபட்டுத் தீர்மானிக்கின்றது.


ஏகாதிபத்தியத்தில் பன்னாட்டு முதலாளிகளின் உலகமயமாதல் பிரதிநிதிக்கும், சொத்தற்ற வர்க்கத்துக்குமிடையில் உள்ள பிளவுகளில் திருமண வடிவங்கள் தீர்மானமாகின்றது. ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டுச் சொத்துரிமை பிரிவுக்கும், சொத்தற்ற வர்க்கத்துக்குமிடையில் தரகுப் பிரிவாக நிலப்பிரபுத்துவம் இருப்பதால் இந்தப் பிரிவின் திருமணம் பழைய வடிவில் நீடிக்கின்றது. பண்பாட்டு, கலாச்சார ரீதியில் தீவிர மாற்றத்தைத் திருமணத்திலும், திருமணத்துக்கு வெளியிலும் ஏற்படுத்திவரும் போக்கில் சொத்துரிமையின் ஆளுமையைப் பேசிச் செய்யும் திருமணத்தை உயிருடன் வைத்துள்ளது. திருமணத்தின் நெருக்கடி, அந்தஸ்து, மற்ற நிலைமைகளைச் சார்ந்து பெற்றோரின் ஆதரவான சொத்துரிமை பலத்தின் அவசியமே இந்தத் திருமணத்தைக் கட்டிக்காக்கின்றது.


இந்தத் திருமணத்தின் நலன் என்பது அந்த வர்க்கத்தின் நோக்கத்தை ஈடுசெய்வதைக் கோருகின்றது. இந்த நலன்களில் ஏற்படும் நெருக்கடி அந்த வர்க்கத்தின் எல்லைக்குள் அதற்கே உரிய ஆணாதிக்கப் பண்பால் தீர்மானமாகின்றது. பணமே இந்தக் குடும்பத்தின் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. இது அனைத்துவகை பாரம்பரிய ஆணாதிக்க ஒழுங்கையும் தகர்த்து புதிய வடிவில் ஆணாதிக்கத்தைப் புனரமைக்கின்றது. இது ஏகாதிபத்தியப் போக்கில் பழைய ஆணாதிக்கத்தைத் தகர்த்துப் புதிய ஒழுங்கில் ஆணாதிக்கம் தன்னைப் புனரமைக்கின்றது. இதற்கு உதாரணமாக ''விளக்கேற்றி வைப்பார்" என்ற தலைப்பில், வயது வேறுபட்ட திருமணங்கள் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. (8.4.1998)34 இந்தியாவில் நடைபெறும் அல்லது நடைபெற்று வரும் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளுக்குத் தீர்வாக மீளவும் ஒருமுறை மறுமணம் புரிகின்றனர். (6.3.1997)34 ''புதியதோர் துவக்கம்" என்ற தலைப்பில், இந்தியாவில் இரண்டாம் திருமணத்தைப் பற்றி எழுதுகின்றது இந்தியா டுடே. (6.7.1991)34 ''குடும்பம் புதிய கதம்பம்" என்ற தலைப்பில் அந்தஸ்துடையோர் தமக்கு இடையில், பாரம்பரியக் குடும்ப உறவுகளை விலக்கி வாழ்கின்றனர் என்று குறிப்பிடுகின்றது. (24.3.1999)34 வயது வேறுபாடுகள் மட்டுமல்ல, மறுமணம் போன்ற பல்வேறு பாரம்பரிய மத, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுங்கைத் தகர்த்து ஏகாதிபத்தியப் பெண்ணியல் நோக்கில் பெண்ணை விடுவித்து புதிய ஏகாதிபத்திய ஆணாதிக்கத்துக்கு உள்ளாக்குகின்றது.