Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

  • PDF

04_2006.gif

நாங்கள் பு.ஜ. இதழை பேருந்துகளில் விற்பனை செய்து கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த இரு வெளிநாட்டு மாணவர்கள், ஆர்வத்தோடு எங்களிடம் விளக்கம் கேட்டனர். பு.ஜ. இதழின் அட்டைப் படத்தைக் காட்டி பயங்கரவாத புஷ் இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து செய்தி வெளியாகியிருப்பதையும், அபுகிரைப் சிறைக் கொடுமைகளைப் பற்றியும் அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கினோம். , தாங்களும் அமெரிக்காவில் இப்பயங்கரவாதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டு, எங்கள் பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்தனர். பு.ஜ. விற்பனை மூலம் புஷ் எதிர்ப்பாளர்களைச் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி, எங்களுக்குப் பேருற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.

அவர்கள் பெருமகிழ்ச்சியடைந்து

 வளர்மதி, திருச்சி.

பு.ஜ. இதழின் அட்டைப் படத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களைப் போராட அறைகூவிய அறிவிப்பைக் கண்டு உத்வேகமடைந்தேன். மறுபுறம், பயங்கரவாத புஷ்ஷை எதிர்த்துப் போராட தமிழகத்தில் இளைஞர்கள் முன்வரவில்லையே என்று வெட்கமும் வேதனையும் அடைந்தேன். பல்கலைக்கழகம் எனக்களித்த இளங்கலைப் பட்டம் வெறும் காகிதம்தான். உழைக்கும் மக்கள் அளிக்கப் போகும் ""விடுதலைப் போராட்ட வீரர்'' பட்டமும், அதற்கும் மேலாக ""தியாகி'' பட்டமும் தான் எனக்குத் தேவை. ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகப் போராடி நாட்டை விடுவிக்கும்வரை இனி நான் ஓயமாட்டேன்.

 பெட்ரோஸ்கி பிரான்சிஸ்,

திண்டிவனம்.

 

 மார்ச் இதழின் அட்டைப்படம், பு.ஜ.வின் அரசியல் நேர்மைக்கும் முன்முயற்சிக்கும் துணிவுக்கும் சிறப்பானதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சர்வதேசிய  தேசிய அரசியல் அரங்கில் பு.ஜ.வின் பங்கு சிறியதுதான் எனினும், அது கூர்மையான குத்தூசி போன்றுள்ளது.

 புரட்சித்தூயன், தர்மபுரி.

 நாட்டுப்பற்றை ஊட்டும் வகையிலும், உலக மேலாதிக்கப் பயங்கரவாதி புஷ்ஷைத் தோலுரித்துக் காட்டும் வகையிலும் அமைந்த அட்டைப்படம் சிறப்பு. ஏழை நாடுகளின் மூலவளங்களையும் பொருளாதாரத்தையும் தன் காலடியில் வீழ்த்த முயற்சிக்கும் அமெரிக்கா தலைமையிலான மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்த அறைகூவுவதாக அமைந்த கட்டுரை பெரிதும் பயனளித்தது. பஞ்சாப் தோழர் பாந்த்சிங்கின் போராட்ட உணர்வும் அடக்குமுறைக்கு அஞ்சாத அவரது துணிவும் மாவீரன் பகத்சிங் விதைத்த போராட்ட விதை என்ற பெருமிதமே ஏற்படுகிறது.

 வாசகர்கள், பாடாலூர்.

 எண்ணிலடங்கா பத்திரிகைகள் அற்பமான கிசுகிசு செய்திகளையும் ஆபாச செய்திகளையும் வெளியிட்டு, ஆட்சியாளர்களின் ஏகாதிபத்தியக் கைக்கூலித்தனத்தை மூடி மறைத்து வரும் வேளையில், நாட்டுப் பற்றாளர்களும் போராளிகளும் தேவை என்று அறைகூவிய பு.ஜ. இதழ் ஒரு புரட்சிகர அமைப்பாளன் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

 கரிகாலன், தஞ்சை.

தனது அங்கங்கள் சாதிவெறியர்களால் சிதைக்கப்பட்டாலும், எஞ்சியிருக்கும் தனது குரலால் பாடி, தீண்டாமை எதிர்ப்புத் தீ அணையாமல் போராடுவேன் என்று உறுதியாக நிற்கும் தோழர் பாந்த்சிங்கின் மனவலிமை, மக்களிடம் என்றென்றும் போராட்ட உணர்வூட்டும். தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக கழிவிரக்கம் தேடாமல், ஜனநாயக இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு போராடும் அவரது புரட்சிகர உணர்வு எனக்குப் புதிய பாதையைக் காட்டியுள்ளது.

 ஜீவா, சென்னை.

 நேபாள மாவோயிஸ்டுகளின் புரட்சிகர  ஜனநாயக நடைமுறையையும் ஈழ விடுதலைப் புலிகளின் பாசிசஜனநாயக விரோத நடைமுறையையும் ஒப்பிட்டுக் காட்டி, ஈழ விடுதலைக்கான சரியான வழியை முன்வைத்த கட்டுரை சிறியதெனினும், பெரியதொரு அனுபவத்தைக் கொடுத்தது.

 நிர்மலா, திருச்சி.

 மன்மோகன்சிங்கிடம் கவிழ்ந்த "மார்க்சிஸ்டு'களது சாதனைகளில் உச்சபட்சமானது, தனது அணிகளிடம் அடிக்கும் அந்தர்பல்டிதான்! நெல்லையில், உளவாளிகளான தொண்டு நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து நிலத்தடி நீர் பாதுகாப்புக் கூட்டுக்குழு என்ற பெயரில் கோக் எதிர்ப்பு நாடகமாடும் இக்கட்சியினர் மே.வங்கத்தில் கோக், பெப்சி ஆகிய சகலைகளுக்கு, அனுமதி கொடுத்திருப்பது பற்றி வாய் திறப்பதில்லை. மே.வங்கத்தில் ""பச்சைவயல் விமானதளம்'' எனும் தனியார் விமான தளத்தைக் கொண்டுவர முயலும் சி.பி.எம்., விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்ப்பதாகப் பசப்புகிறது. இத்துரோகத்தனங்களை மூடிமறைக்க இன்னும் எத்தனை பல்டிகளை அடிப்பார்கள் என்று தெரியவில்லை.

 குருசாமி மயில்வாகனன், சிவகங்கை.

 மறுகாலனியாதிக்க சூழலில் தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தி வரும் தேர்தல் கூத்தை அம்பலப்படுத்திய பு.ஜ. இதழை விற்பனை செய்து கொண்டிருந்த போது, ""ஓட்டு கேட்டு வரும் இவனுங்கள வெளக்கு மாத்தாலதான் வெளாசணும்'' என்று பெண்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தி, பு.ஜ. இதழை ஆர்வத்தோடு வாங்கினர். ஒரு போலீசு ஆய்வாளர், கோடிகோடியாய் சொத்து சேர்த்துள்ள விவகாரம், நாடு எத்தகையதொரு பயங்கரவாத சட்டபூர்வ கிரிமினல் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறது என்பதை எடுப்பாக உணர்த்தியது.

 வாசகர்கள், திருப்பூர்.