Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

  • PDF

jan_07.jpg

· முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சுயநிர்ணய உரிமையே அரசை உலுக்கும் சரியான ஆயுதம், சரியான தீர்வு என்ற தலையங்கம் விரிந்த அரசியல் பார்வையை அளித்தது. சாதிய வெறியாட்டத்தின் இன்னுமொரு கொடிய இரத்த சாட்சியமாக உள்ள கயர்லாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை அதிர்ச்சியளிப்பதோடு, இந்த அவமானத்தைத் துடைத்தெறியப் போராட வேண்டும் என்ற உணர்வூட்டுகிறது. சாதியவர்க்கதேசிய இன முரண்பாடுகளும் மோதல்களும் நிலவும் சமுதாயத்தில் யார் யாருக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதிலிருந்தும், புரட்சிகர அரசியல் நடவடிக்கையின் நியாயத்தை முதலாளித்துவ மனிதாபிமானம் எப்படி பின்னுக்குத் தள்ளும் என்பதையும் ஒப்பிட்டு விளக்கிய அப்சல் குரு பற்றிய கட்டுரை சிறப்பு.
இரா. மணிகண்டன், சூசுவாடி.

 

· மையமாநில அரசுகளும், உச்சநீதி மன்றமும், ஓட்டுக் கட்சிகளும் காவிரி முதல் முல்லைப் பெரியாறு வரை துரோகமிழைத்து வருவதையும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தையும் உணர்த்திய தலையங்கம் சிறப்பாக அமைந்துள்ளது. தனியார்மயமும் தாராளமயமும் நாட்டைச் சூறையாடுவதோடு, நாகரீகப் பொறுக்கிகளையும் உருவாக்கி எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை அட்டைப்படக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. பூவுலகையே தமது இலாபவெறிக்காக நஞ்சாக்கி நாசமாக்கி விட்ட ஏகாதிபத்தியவாதிகளின் கொடுஞ்செயலை அறியும்போது அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்குகிறது. வாசகர் வட்டக் கூட்டத்தின் இறுதியில், ""காந்தியின் இந்துத்துவ கோரமுகம்'' என்ற தலைப்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். ""தேசப் பிதா'' என்று சித்தரிக்கப்படும் காந்தி, எவ்வாறு பார்ப்பனஇந்துவெறிக்குப் பல்லக்குத் தூக்கினார் என்பதை விரிவான சான்றாதாரங்களுடன் விளக்கிக் காட்டிய அவரது உரை, வாசகர்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தது.
வாசகர் வட்டம், திருச்சி.

· விறகு அடுப்பு பயன்படுத்துவதால் புகை பெருகி சுற்றுச்சூழல் நாசமாவதாக ஏகாதிபத்தியவாதிகள் பீதியூட்டி வரும் நிலையில், உண்மையில் சுற்றுச்சூழலை நாசமாக்குவது யார் என்பதை அம்பலப்படுத்திக் காட்டிய கட்டுரை, அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் அருமையாக அமைந்துள்ளது.
ஜீவா, ஜெயங்கொண்டம்.

· கயர்லாஞ்சி கொடூரத்தை தமிழக பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்துவிட்ட நிலையில், சாதிவெறி பயங்கரத்தை பு.ஜ. கண்முன்னே காட்டியுள்ளது. இச்சாதிவெறி பயங்கரவாதிகளுக்கு வாக்குரிமை, சொத்துரிமை, இட ஒதுக்கீடு சலுகை உள்ளிட்ட அனைத்தையும் பறிப்பதுதான் சரியான தீர்வாகும்.
முகிலன், திருச்சி.

· கூட்டு மனசாட்சியைத் திருப்திப்படுத்த அப்சல்குருவுக்கு மரண தண்டனை விதித்துள்ள இந்திய நீதித்துறை காவிப் படையாக உள்ளதை விரிவாக விளக்கியும், போலி கம்யூனிஸ்டுகளின் பொருள் பொதிந்த மவுனத்தைத் திரைகிழித்தும், வர்க்கக் கண்ணோட்டமற்ற மனிதாபிமான பசப்பல்களை எள்ளி நகையாடியும் வெளியாகியுள்ள கட்டுரை டிசம்பர் இதழுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
சம்புகன், சிவகங்கை.

 

· கோக்கின் கைக்கூலி நடிகை ராதிகாவுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம், புரட்சிகர அமைப்புகளின் போர்க்குணத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது. தாராளமயம் பெற்றெடுத்த நாகரீகப் பொறுக்கிகளால் சாமானிய மக்களுக்கு விளையும் பேரபாயத்தை வர்க்க அரசியல் கண்ணோட்டத்தோடு விளக்கிய அட்டைப்படக் கட்டுரை, எனது சிந்தனையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.
முரளி, இராசபாளையம்.