Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பெரியார் சிலை உடைப்பு: மண்டைச் சுரப்பை உலகு தொழும்! மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!!

பெரியார் சிலை உடைப்பு: மண்டைச் சுரப்பை உலகு தொழும்! மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!!

  • PDF

jan_07.jpg

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சிறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். ""டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித்திருநாள்!'' என்று

 அறிவிக்கும் சுவரொட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு திருச்சியைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்தன. இது ஒரு வகையில் சிலை இடிப்புக்கு எதிரிகள் வழங்கிய முன்னறிவிப்பு.

 

1973இலேயே சிறீரங்கம் நகரமன்றம், பெரியார் சிலைக்காக 144 சதுர அடி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து, அந்த இடம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ள போதிலும், 33 ஆண்டுகளாக அங்கே சிலை நிறுவப்படவில்லை. இந்த 33 ஆண்டுகளில் பெரியாரின் பெயரில் டஜன் கணக்கிலான நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் பரப்பில் தமிழகமெங்கும் எழும்பியிருக்கின்றன. ஆனால், இந்த 144 சதுர அடியில் பெரியார் சிலை மட்டும் எழும்பவில்லை. இந்தத் தாமதத்திற்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கம் எதுவும் நமக்குப் புலப்படவில்லை.

 

ஆனால், சிலை எழும்பவிருக்கிறது என்று தெரிந்ததும் பார்ப்பனக் கும்பல் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. நவம்பர் 28ஆம் தேதியன்று, திருவரங்கத்தின் புனிதம் காப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் ஒன்றிணைந்தன. டிசம்பர் 5ஆம் தேதியன்று கோவையில் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த இந்து ஆசார்ய சபாவின் தலைவர் தயானந்த சரஸ்வதி, ""பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கம் பாதுகாப்பான இடம் அல்ல'' என்று பகிரங்கமாக மிரட்டினார். டிசம்பர் 6ஆம் தேதி பின்னரவில் கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இந்துமதவெறிக் காலிகள் பெரியார் சிலையை உடைத்தனர்.

 

இதற்குப்பின் அங்கே நடைபெற்ற சம்பவங்கள், பெரியாருக்கு எதிரிகள் செய்த அவமதிப்பைக் காட்டிலும் கொடிய அவமதிப்பாக இருந்தன. சிலை உடைப்பு பற்றிய செய்தி கேள்விப்பட்டு, திருச்சி நகரத்திலிருந்து மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்களும் சிறீரங்கத்திற்கு வந்து சேர்ந்தபோது சிறீரங்கம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்த இடத்தைப் போல ஒரு கூட்டம் பெரியார் சிலையைச் சுற்றி நின்று கொண்டிருக்க, கருப்புச் சட்டைத் தொண்டர்கள் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கியவாறு நின்று கொண்டிருந்த பார்ப்பனர்களும் கேதம் கேட்க வந்த இந்தக் கூட்டத்தில் அடக்கம்.

 

இந்த மானக்கேட்டைக் காணப்பொறுக்காத ம.க.இ.க. தோழர்கள், தி.க. தொண்டர்களைக் கடிந்து கொண்ட பிறகுதான் சாலை மறியல் தொடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலைத் திமிர்த்தனமாக மீற முயன்ற சில தனியார் பேருந்துகள் நொறுக்கப்பட்டன. ""ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகளைத் தடைசெய்! சிலை உடைப்பைத் தூண்டிய அதன் தலைவர்களைக் கைது செய்!'' என்று முழங்கியபடி ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் இராமதாசு தலைமையில் கோயில் ராஜகோபுரத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. தி.க., தி.மு.க. அணிகளும் பொதுமக்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர்.

 

போராட்டம் பரவத் தொடங்குகிறது என்று அறிந்தவுடனே தி.மு.க., தி.க. கரை வேட்டிகள் களத்தில் இறங்கினார்கள். ""நடப்பது நம்ம ஆட்சி. சிலை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்தச் சிலை இல்லாவிட்டால் வேறு சிலை. எல்லாவற்றையும் கலைஞர் பார்த்துக் கொள்வார்'' என்று சொல்லி, கருஞ்சட்டைத் தொண்டர்களைக் கலைத்துவிட்டார்கள். மானக்கேடான சகஜநிலை மீண்டும் திரும்பியது.

 

எனினும், பெரியார் சிலையை திருட்டுத்தனமாக உடைத்த பார்ப்பன மதவெறியர்களுக்கான பதிலடி அன்று மாலையே பகிரங்கமாகக் கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்இன் தேசிய நாயகனான இராமனின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்பால் அடித்தபடியே, சிறீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டு வந்தார்கள் ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள். பெரியார் பற்றாளர்கள் பலர் தாமாகவே ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று இந்தக் காட்சியைத் தரிசித்தனர். பரவசமடைந்த ஒரு முதிய தி.க. தொண்டர் தம் கால் செருப்பைக் கழற்றி அடித்து இராமபிரானுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

வருணாசிரமத்தின் பாதுகாவலான இராமனின் படத்தை, சேதமடைந்த பெரியார் சிலையின் காலடியிலேயே தீ வைத்துக் கொளுத்தினார்கள் தோழர்கள். படத்தைப் பிடுங்க முயன்ற போலீசை நெருங்கவிடாமல் தடுத்தார்கள் தி.க. இளைஞர்கள். தோழர்களைக் கைது செய்தவுடனே விடுதலை செய்யக் கோரி விண்ணதிர முழங்கினார்கள். பிரச்சினை பெரிதாகிவிடும் என்று உணர்ந்து கொண்ட போலீசு தோழர்களை அன்றிரவே விடுவித்தது.

 

""உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றிம்மா, நீங்களாவது மானத்தக் காப்பாத்தினீங்க'' என்று பெண் தோழர்களிடம் நா தழுதழுக்க நன்றி கூறினார், ஒரு முதிய தி.க. தொண்டர். திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகியோ, ""தயவு செய்து இதற்கு மேலும் எதையாவது செய்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள்'' என்று தோழர்களைக் கைக்கூப்பிக் கேட்டுக் கொண்டார். சொரணையுள்ளவர்களால் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியாதென்பதால் போராட்டம் தொடர்ந்தது. மாநிலமெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் அன்றிரவே ஒட்டப்பட்டன.

 

மறுநாள் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் எதிரில் இராமனின் படத்தைத் தீக்கிரையாக்கினார்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து நிற்க, நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது இந்தப் போராட்டம். போராட்டம் முடிந்து அரைமணி நேரத்துக்குப்பின், பா.ஜ.க.வின் மாநிலப் பொருளாளர் நரேந்திரன் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், அந்த வழியே தன் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பு.ஜ.தொ.மு.வின் செயலர் தோழர் பரசுராமனை சுற்றி வளைத்துக் கொண்டது. ""இவனைக் கொலை செஞ்சாத்தாண்டா நாம் நிம்மதியா இருக்க முடியும்'' என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ். பேடிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலைத்தான் ""இந்துக்களின் கோபம்'' என்று பொய்யாகச் சித்தரித்தன சில நாளேடுகள்.

 

மண்டை பிளந்து மயங்கி விழுந்த பரசுராமனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, ஆம்புலன்சில் தருமபுரிக்கு அவரைக் கொண்டு செல்ல முயன்றபோது வழிமறித்து அனைவரையும் கைது செய்தது போலீசு. இரவு முழுவதும் தோழர் பரசுராமனையும் அவரது மனைவியையும் ஆம்புலன்சிலேயே பூட்டி வைத்தது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைத்தார், சதி செய்தார் என்று பல பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்து, விடிந்ததும் சேலம் சிறைக்குக் கொண்டு சென்றனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர்தான் சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கேயும் கால்களில் விலங்கு மாட்டி வைத்தனர். கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினர் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பரசுராமனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் தேன்மொழி.

 

இதேபோல, சிவகங்கையில் சிலை உடைப்புக்கு எதிராகக் கண்டனச் சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர் எழில்மாறன், சுவரொட்டியை அச்சிட்ட அச்சக உரிமையாளர், வழக்குரைஞர் ஆகியோர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் கண்டனச் சுவரொட்டி ஒட்டிய இளம் தோழர் கார்க்கி ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

 

பெரம்பலூர், சங்கராபுரம், ஈரோடு போன்ற பல இடங்களில் பூணூல் அறுப்பு, சாமி சிலை உடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகப் பெரியார் தி.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை அயோத்தியா மண்டபத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பெரியார் தி.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த நடவடிக்கைளில் ஈடுபட்டதற்காக சிறையில் இருப்பவர்கள் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர்களும் பெரியார் தி.க. தோழர்களும் மட்டுமே.

 

16.12.06 அன்று சிறீரங்கத்தில் வெண்கலத்தினாலான பெரியார் சிலை திறக்கப்பட்டு விட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க. பொதுச்செயலர் வீரமணி, எதிர்த்துப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க வேண்டுமென வாய்தவறிக் கூடப் பேசவில்லை. கலைஞர் ஆட்சியை காப்பாற்றும் விதத்தில் போராட்டம் ஏதும் செய்யாமல் அமைதி காத்த தொண்டர்களுக்கு மட்டும் நன்றி கூறினார்.

 

பெரியார் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? கலைஞர் அரசுக்கு களங்கம் கற்பிப்பதும், நெருக்கடி கொடுப்பதும்தான் இந்தச் சிலை உடைப்பின் நோக்கமாம். வீரமணி, திருமா போன்றோரின் கண்டுபிடிப்பு இது. சிலையை உடைத்தால் கட்டுப்பாடில்லாத பெரியார் தொண்டர்கள் பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாம். இதைக் காட்டி நம்மாளின் ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திட்டம் போட்டுத்தான் அவாள் சிலையை உடைத்தார்களாம்.

 

கேட்பதற்கே கேவலமாக இருக்கும் இந்த விளக்கத்தைச் சொல்வதற்கு தி.க., தி.மு.க.வினர் கூச்சப்படவில்லை. 2000 முஸ்லிம்களின் ஈரக்குலையறுத்த மோடியின் ஆட்சியே கலையவில்லையே, கேவலம் பத்தாம் நம்பர் நூலை அறுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா என்ற கேள்வி அவர்களுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை போலும்!

 

இவர்களுடைய விளக்கத்தின்படி நம்மாளின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், அவாளின் பூணூலையும் இராமபிரானையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு கருப்புச் சட்டைகளைத்தான் காவலுக்கு நிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. பூணூல் அறுப்பும் இராமன் எரிப்பும் நடக்கத் தொடங்கிய பின்னர்தான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார் டி.ஜி.பி. பெரியார் சிலை உடைப்புக்குச் சதித்திட்டம் தீட்டித் தூண்டிவிட்ட தயானந்த சரஸ்வதி மீது வழக்கு இல்லை. ஓசூர் தோழர் பரசுராமன் மீது 120 ஏ சதிவழக்கு. பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாடி சுவரொட்டி ஒட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்மீது வழக்கு இல்லை. பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சிவகங்கைத் தோழர்கள் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு!

 

""பெரியார் ஆட்சி''யின் நடவடிக்கையைப் பார்ப்பனக் கும்பலின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! ""பெரியார் சிலையைச் சட்டபூர்வமான முறையில்தான் அகற்றியிருக்க வேண்டும். சட்டவிராதமான முறையில் உடைத்திருக்கக் கூடாது'' என்று பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி வருத்தம் தெரிவித்த அதே தோரணையில், பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் சொல்லி வைத்தாற்போல அறிக்கை விட்டனர்.

 

பாபர் மசூதியை இடித்தபின், ""சர்ச்சைக்குரிய இடம்' என்று அதற்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் மாற்றம் செய்ததைப் போல, ""சர்ச்சைக்குரிய பெரியார் சிலை'' என்று எழுதத் தொடங்கியது தினமலர். பெரியார் சிலைக்கு இரும்புக் கூண்டு போடச் சொன்னார் இராம. கோபாலன். ""இராமன் எரிப்பையும் பூணூல் அறுப்பையும் தூண்டுவதே கருணாநிதிதான்'' என்று மிரட்டினார் எச்.ராஜா. வைகுந்த ஏகாதசிக்கு சிறீரங்கம் வரும் பக்தர்கள் பெரியார் மீது கல்லெறிந்து காறித் துப்புமாறு தலைமறைவாய் இருந்தபடியே அறிக்கை விட்டார் அர்ஜூன் சம்பத். ""சிலை உடைப்பைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்'' என்று கவலை தெரிவித்தார் கார்ப்பரேட் பார்ப்பான் ரவிசங்கர்ஜி. ""பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்று கூறி வெளிப்படையாகவே களம் இறங்கினார் ஜெயலலிதா. திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை, தூத்துக்குடியில் தார்பூச்சு, பட எரிப்பு... என ஆங்காங்கே இந்து வெறியர்கள் மேலேறித் தாக்கினர்.

 

பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிக் கொள்வோர் என்ன செய்தார்கள்? ""இனி பொறுப்பதற்கில்லை; நெருப்புடன் விளையாடதே'' என்று 2 நாள் கழித்து அறிக்கை விட்டார் வைகோ. இதேநிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் என்று 3 நாள் கழித்து அறிக்கை விட்டார் திருமா. பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட "மார்க்சிஸ்டு' கட்சி கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டது. ""இந்து பாசிச அமைப்புகுள் தலைதூக்குகின்றன. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று பயமுறுத்தியது வலது கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியப் பெருமன்றம். இதுதான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதை! பெரியாரிஸ்டுகள் எனப்படுவோர் சோளக்கொல்லைப் பொம்மைகளாக இருக்கும்போது, பெரியாரை வெண்கலத்தில் உருக்கி வார்த்து என்ன பயன்?

 

சிலையை உடைத்ததன் மூலம் பெரியாரைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்து வழங்கினார்கள் இந்து மதவெறியர்கள். உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப் போல ஏந்திச் சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்தக் கிழவனை, இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரப் பயணம் அழைத்துச் சென்றிருக்கலாம். ""மண்டைச் சுரப்பை உலகு தொழும்'' என்று பாவேந்தர் பாடினாரே, அந்தத் தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயைப் போலப் பற்ற வைத்திருக்கலாம். சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்து தேசிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பன்முகம் காட்டிய அந்தத் தலையை பார்ப்பன மதவெறிக்கெதிரான விடுதலையின் வித்தாய் தமிழகமெங்கும் விதைத்திருக்கலாம்.

 

பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, பகுத்தறிவுக் கல்லைப் பேச வைத்துக் காட்டியிருக்கலாம். இரும்புக் கூண்டுக்குள் பதுங்க வேண்டியவர் பெரியார் அல்லர். இராம.கோபாலன்தான் என்பதை அந்தப் பார்ப்பனக் கும்பல் பட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டிருக்கலாம். சிறீரங்கம் கோயிலென்ன, எல்லாக் கோயில் வாசல்களிலும் சாதியையும் மடமையையும் வழிமறிக்கும் தடையரணாகப் பெரியாரின் சிலையை நிறுவியிருக்கலாம்.

 

இவையனைத்தும் கொள்கை உறுதி கொண்டவர்களின் செயல்முறைகள். ஆட்சியைக் காத்துக் கொள்ளவும் அதன் உதவியுடன் சிலையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சிந்திப்பவர்கள், கான்கிரீட்... வெண்கலம்... இரும்பு என்று உலோகத்தை உறுதிப்படுத்தும் திசையில்தான் சிந்திக்க முடியும். இறுதியில் அது இரும்புக் கூண்டில் தான் போய் முடியும்.

 

டிசம்பர் 7ஆம் தேதியன்று பெரியார் சிலையைப் பாதுகாக்கத் தவறிய பரிதாபத்துக்குரிய 4 போலீசுக்காரர்களைக் கடமை தவறிய குற்றத்துக்காகத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு. தங்கள் கடமையிலிருந்து தவறிய பெரியாரின் தொண்டர்கள் எனப்படுவோருக்கு யார் தண்டனை விதிப்பது?

 

இதோ, தண்டனையை எதிர் கொள்வதற்குத் தன்னந்தனியாக அங்கே அமர்ந்திருக்கிறார் பெரியார். அவரது சிலையை சட்டபூர்வமாகவே அகற்றுவதற்கான வழக்கைத் தக்க தருணத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. பக்தர்கள் என்ற போர்வையில் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து சிலையின் மீது கல்லெறிய தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் பார்ப்பன இந்து வெறியர்கள். சுயமரியாதை இயக்கத்தின் துவக்கக் காலத்தில் தன்னந்தனியாக சாதி, மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கல்லடியும் சொல்லடியும் வாங்கி, மாபெரும் மக்கள இயக்கத்தைத் தமிழகத்தில் உருவாக்கி நிலைநிறுத்திய பின்னரும், அந்தோ, பெரியார் இன்றும் தனியாகத்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார், சிறீரங்கம் கோயிலுக்கு எதிரே அரங்கநாதனுக்கு சவால்விட்டபடி!

 

align="justify" class="style2">அறுப்பதும் எரிப்பதும்தான் வன்முறையா?

 

""ஆத்திகர்கள் திரளும் கோயில் வாசலில் ஒரு நாத்திகரின் சிலையை வைக்கலாமா?'' — இது பெரியார் சிலைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான வாதம். ஆத்திகர்கள் திரளும் இடத்தில் நாத்திகம் பேசக்கூடாது என்று கூறுவது கருத்துரிமையை மறுக்கும் பாசிசம். ""குடி குடியைக் கெடுக்கும்'' என்று சாராயக் கடை வாசலில் எழுதி வைக்காமல், சர்பத் கடை வாசலிலா எழுதிப் போட முடியும்? ஆத்திகர்கள் கூடுமிடத்தில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதுதான் பொருத்தமானது. சிறீரங்கம் கோயிலைச் சுற்றி பிராந்திக் கடைகளும், ஆபாசப் பத்திரிகைகளும், நீலப்பட வியாபாரமும் நடக்கிறதே, அவையெல்லாம் ஆத்திகப் பிரச்சார நடவடிக்கைகளா என்ன?

 

மேலும், பெரும்பான்மை என்பதனாலேயே ஒரு கருத்து நியாயமாகிவிடாது. பாப்பாபட்டியில் ""தலித்துகள் ஊராட்சித் தலைவராகக் கூடாது'' என்று தடுத்தவர்கள் கூடப் பெரும்பான்மை பலத்தைக் காட்டித்தான் தங்கள் சாதிவெறியை நியாயப்படுத்தினார்கள். ""பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இடத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாது'' என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்திற்கும், ""பெரியார் சிலை கூடாது'' என்பதற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இது ஆத்திக வேடம் போடும் பார்ப்பன மதவெறி, இறைநம்பிக்கை உள்ள பெரும்பான்மை தமிழக மக்கள், பிள்ளையாரையும், பெருச்சாளியையும் காட்டிக் கட்சி நடத்தும் பா.ஜ.க.வை நிராகரித்திருக்கும்போது, தன்னைப் பெரும்பான்மையின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்வதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

 

""தமிழ் வழிபாடு கூடாது, பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது'' என்று பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் இந்து முன்னணிக் கும்பல், பெரும்பான்மை ஆத்திகர்களுக்காகக் கவலைப்படுவுது போல நடிக்கிறது. ஆனால், பெரும்பான்மையான சூத்திரபஞ்சம சாதி மக்களைக் கோயிலுக்குள் விடமறுத்த இந்த பார்ப்பன, சாதிவெறியர்களை எதிர்த்துக் கோயில் நுழைவு உரிமைக்காகப் போராடியவர் பெரியார். அவர் சிலையை எல்லாக் கோயில் வாசல்களிலும் வைக்கவேண்டும். அதுதான் பொருத்தம்.

 

""சர்ச் வாசலில் பெரியார் சிலை வைப்பதுதானே!'' என்கிறார் இராம.கோபாலன். ஆசையிருந்தால் அவரே வைக்கட்டும். பெரியார் சிலைக்குக் கீழே இந்துக் கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறது? எந்தக் கடவுளும் இல்லை என்றுதான் சொன்னார் பெரியார். எனவே, எந்தக் கடவுளும் இல்லாத ஒரு தூணையோ துரும்பையோ இராம.கோபாலன் காட்டட்டும். அங்கே சிலை வைத்து விடுவோம்.

 

""பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?'' என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்கத் தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணம். வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான்.

 

மேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நாயகன் என்பதால் முஸ்லிம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தைச் செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும்.

 

""பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையையும் மீறும் வன்முறை'' என்று அலறுகிறது. பாரதிய ஜனதாக் கும்பல். அறுப்பதும் எரிப்பதும் எதிர் வன்முறைதான். பூணூல் அணிவதுதான் முதல் வன்முறை. பூணூல் என்பது அவரவர் விருப்பப்படி அணியும் கலர் சட்டையோ, அல்லது ஒரு மதத்தினர் அனைவரும் அணியும் சிலுவை போன்ற சின்னமோ அல்ல. பூணூல் பெரியாரின் மொழியில் சொன்னால், ஒரு தெருவில் ஒரேயொரு வீட்டுக் கதவில் ""இது பத்தினி வீடு'' என்று எழுதிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான நரித்தனம். பெயருக்குப் பின்னால் இருந்த சாதிவாலை நறுக்கியவர் பெரியார். அய்யர், அய்யங்கார் என்ற பட்டங்களை ஃபாஷனுக்காகத் துறந்தவர்கள், பூணூலையும் துறந்துவிட்டால் அவர்களை நாகரிப்படுத்தும் வேலை மிச்சம்!

 

· சூரியன்

Last Updated on Monday, 05 May 2008 21:01